சிறப்புக் கட்டுரைகள்

கணினியில் வேலை பார்ப்பவரா.. இதனை கொஞ்சம் கவனியுங்க!

Published On 2024-06-26 16:45 IST   |   Update On 2024-06-26 16:45:00 IST
  • ஒரே இடத்தில் 8 மணி நேரங்களுக்குமேல் அமர்ந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.
  • ஞாபகமறதி நோய் இப்போது 50-வயதினருக்கும் வருவதற்கு, இந்தக் கணினியும் ஒரு காரணம்தான்.

டிஜிட்டல் இந்தியாவில் இப்போது வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், பயணங்களுக்கான முன்பதிவுகள், பொதுநலத் துறைகள், பத்திரப் பதிவுகள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் ஆகிய அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுவிட்டன. எனவே கணினியோடும், அலைபேசியோடும் செலவழிக்கும் நேரங்கள் அதிகமாகி விட்டன. ஒரே இடத்தில் 8 மணி நேரங்களுக்குமேல் அமர்ந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

இரவைப் பகலாக்கிவிட்டோம், உறங்க வேண்டிய நேரத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறோம். மேலும் எந்திர மயமாக்கப்பட்டுவிட்டதால் நம் வேலைகளும், உடல் உழைப்பும் குறைந்து வாழ்வியல் முறை மாற்றங்களினால் ஏற்படும் நோய்கள் சிறுவயதிலேயே வரத்தொடங்கிவிட்டன. குறிப்பாகக் கணினி முன் அமர்ந்து நாள் முழுவதும் வேலை பார்ப்பவர்கள், பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். அதைக் குறித்தும், அவர்கள் செய்ய வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் பற்றியும் இங்கே காண்போம்.

கணினியில் வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள்

கழுத்து வலி:

அசைவில்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து சற்றுக் குனிந்த வண்ணம் வேலை பார்ப்பதால், கழுத்து எலும்புகளில் தேய்மானம் சிறுவயதிலேயே ஏற்படுகிறது. கழுத்தில் உள்ள சவ்வுகள் நகர்ந்து நரம்புகளை அழுத்துவதால் கழுத்துவலி ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், கைகளுக்கும் பரவுகின்றன. இதனால் கைகள் மரத்துப் போவது போன்ற உணர்வு, கைகளில் பிடிமானம் குறைவது, வெகுநேரம் பொருட்களைப் பிடிக்க முடியாமல் போதல் ஆகிய அறிகுறிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து கவனித்தால், வாழ்வியல் முறை மாற்றங்கள் செய்வதால், அறுவைசிகிச்சை செய்வதைத் தடுத்துக் கொள்ளலாம். ஆனால் கழுத்து வலிதானே, என்று கவனக்குறைவுடன் விடும்போது, அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள்.

முதுகு வலி:

அதிக நேரம் அமர்ந்து கொண்டே இருப்பதால், கீழ் முதுகுப் பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு, இரண்டு முதுகு எலும்புகளுக்கும் இடையே உள்ள "சவ்வு" நகர்ந்து வந்து கால்களுக்குச் செல்லும் நரம்பை அழுத்திடுகிறது. இதனால் முதுகு வலி வருகிறது.

கண் எரிச்சல்:

கண்கள் அதிக வெளிச்சம் உள்ள திரையை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டே இருப்பதாலும், இரவு நேரங்களில் வேலை பார்ப்பதாலும் இரவு உறக்கம் கெட்டு கண்கள் உலர்ந்து கண் எரிச்சல், தலைவலி மற்றும் தலைப்பாரம் வருகிறது. கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் கண்களில் உள்ள கருவிழிப் பாதிப்பு, கண்களுக்குக் கீழ் வீக்கம், கண்களைச் சுற்றிக் கருவளையம் ஆகியவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

 உடல் பருமன்:

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதால் இடுப்புப் பகுதி பருமனாகிவிடுகிறது. இடுப்பைச் சுற்றிப் படியும் கொழுப்பு மிகவும் ஆபத்தானது. உடல் உறுப்புகளைச் சுற்றிக் கொழுப்பு படிந்துள்ளது என்பதை நம் பெருத்த வயிறு (தொப்பை) குறிக்கிறது.

முட்டி வலி:

கால்களை மடக்கி வைத்துக் கொண்டு அதிக நேரம் அமர்ந்தே வேலை பார்ப்பதால், முட்டி வலி சிறுவயதிலேயே வந்து விடுகிறது. இதனால் படி ஏறுவதில், கீழே அமர்ந்து எழுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனாலேயே பலருக்குச் சுறுசுறுப்பாக நடக்க முடிவதில்லை.

மணிக்கட்டுப் பாதிப்பு:

அதிகப்படியாக மணிக்கட்டுகளுக்கு வேலை கொடுப்பதால் கையில் உள்ள மூட்டுகள், சதைகள் பாதிக்கப்பட்டு அது தொடர்பான நோய்களும் ஏற்படுகின்றன. அதிக நேரம் சுட்டி (மவுஸ்) பயன்படுத்துவதால் "கார்பல் டனல் சின்ட்ரோம்" என்ற மீடியன் நரம்பு அழுத்த நோய் வந்து விடுகிறது. இதனால் கைவிரல்கள் மரத்து விடுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இரவில் உறங்கும்போது விறுவிறு என்ற உணர்வு வந்து எழுந்து கைகளை உதற வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து மூளை நரம்பியல் நிபுணரிடம் மருத்துவம் பெறவேண்டும். இன்னும் பலருக்கு முழங்கை மூட்டுகளை ஊன்றியோ அல்லது மேசை மீது கைகளை வைத்துக்கொண்டு வேலை செய்வதாலோ அந்த மூட்டின் வழியாகக் கீழே இறங்கும் அல்நார் நரம்பு பாதிக்கப்பட்டு மோதிர மற்றும் சுண்டு விரல்களில் உணர்விழப்பு அல்லது விறுவிறு என்று உள்ளது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

நினைவுமறதி நோய்:

கால நேரம் கணக்கு இல்லாமல் இரவில் கண்விழித்து வேலை செய்வதால் மூளையின் செயல் திறன் குறைய வாய்ப்பு உள்ளது. ஞாபகமறதி நோய் இப்போது 50-வயதினருக்கும் வருவதற்கு, இந்தக் கணினியும் ஒரு காரணம்தான். இரவைப் பகலாக்கி வேலை செய்வதால் உறக்கத்தின் போது மட்டுமே வெளியேற்றப் படும் நச்சுப்பொருட்கள் சரிவர வெளியேற்றப்படாமல் மூளையில் தேங்குவது இந்த நினைவுமறதி நோய்க்கு முதற்காரணம்.

மரு.அ.வேணி

மன அழுத்தம்:

எந்நேரமும் உயிரில்லா எந்திரங்களுடன் வேலை செய்வதால் மன அழுத்தம் ஏற்படுகிறது. ஒத்தமனிதர்களுடன் இயல்பாகப் பழகும் தன்மையும் குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் அடுத்தவர்களுடன் உடன்பட்டுப் போகும் இயல்பு குறைகிறது; மனஅழுத்தம் அதிகரித்து, கோபம், எரிச்சல், பழக்கவழக்கங்கள் மற்றும் குணத்தில் மாறுபாடு ஏற்படுகிறது; குடும்பங்களில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் கணினியில் அதிகநேரம் வேலை செய்யும் இளம் இணையர்கள் தங்களது மனஅழுத்தத்தை எதிர்கொள்ள முடியாமலும், அவர்களிடம் சரியான புரிதல் இல்லாததாலும் மணமுறிவு ஏற்படும் அளவிற்குச் சென்றுவிடுகிறது.

வலிப்பு நோய்:

வலிப்பு நோய் உள்ளவர்கள் அதிகப்படியான வெளிச்சம் உள்ள திரைகளைப் பார்ப்பதனால் வலிப்பு, கட்டுப்பாட்டில் இல்லாமல் போய்விடுகிறது. மேலும் வேகமாக மாறும் திரைகளினால் சில வலிப்பு நோய்கள் ஏற்படுகின்றன. ஆனால் இந்நோய் சிலரையே பாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதை போட்டோ சென்சிடிவ் எபிலெப்சி என்கிறோம். இந்தச் சிக்கல்களைத் தடுக்க நாம் செய்ய வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் பற்றிக் காண்போம்.

தடுப்பு நடவடிக்கைகள்:

அதிக நேரம் குனிந்து கொண்டே வேலை செய்வதால் வரும் பாதிப்பைக் குறைக்க, ஒவ்வோர் இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறையும், மேலும் காலை எழுந்தவுடனும் கழுத்துப் பகுதியில் உள்ள தசைகளை தளர்த்திவிடும் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

முதுகு வலியைத் தடுக்க, அவ்வப்போது எழுந்து நிற்பது மற்றும் வேலை செய்யும் நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, குறைந்தது ஒரு நிமிடத்திற்காவது எழுந்து நடப்பது நல்லது. முதுகுப் பகுதிகளைப் பலப்படுத்தும் பயிற்சிகளையும் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் முதுகுவலியை மட்டுமல்லாமல், இடுப்பைச் சுற்றிக் கொழுப்பு படிவதையும் தடுக்கலாம்.

கால்களை மடக்கிக் கொண்டு வெகுநேரம் அமர்ந்திருப்பதால் முட்டி வலி வருவதைத் தடுக்க ஒவ்வொரு மணி நேரத்திற்கும் எழுந்து ஒரு நிமிடமாவது நடக்க வேண்டும்.

மணிக்கட்டுகளைப் பயன்படுத்தி அதிகநேரம் வேலை செய்வதால் கார்பல் டனல் சின்ட்ரோம் என்ற நரம்பு அழுத்த நோய் வருவதைத் தடுக்க, இரவு உறங்கும்போது மணிகட்டுகளைப் பாதுகாப்பதற்காக இதற்கெனச் சிறப்பாய்ச் செய்யப்பட்ட மணிக்கட்டுப் பட்டையை அணிந்து கொள்ளலாம்.

கண்களைப் பாதுகாப்பதற்கு, ஒவ்வொரு நாளும் காலையில் 3 நிமிடங்களுக்குக் கண்களுக்கான பயிற்சிகளைச் செய்ய வேண்டும். இரவு உறங்குவதற்கு முன்பு அலைபேசி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

அதிக நேரம் அமர்ந்து கொண்டே வேலை செய்வதால் காலையில் 45 நிமிடம் உடற்பயிற்சி செய்வது நல்லது.

குனிந்து கொண்டே வேலை செய்வதால் வரும் கழுத்துவலியைத் தடுக்க, கணினி திரையைக் கண்களுக்கு நேரே வைத்துப் பணிபுரிவது நல்லது.

கணினி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதால் பல வேலைகள் எளிதாக்கப்பட்டுவிட்டாலும், அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் போது, உடல் அளவில் பல சிக்கல்களை மனித சமுதாயம் எதிர்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்க மேலே கூறியுள்ள தடுப்பு நடவடிக்கைகளை ஏற்று நலமுடன் வாழ்வோமாக.

செல்: 75980-01010, 80564-01010.

Tags:    

Similar News