மலரும் நினைவுகள் மீனா- விஜய்யிடம் சிக்கி கொண்டேன்
- மூன்று படங்களும் சூப்பர் ஹிட்டானது.
- ஒரு பெரிய ஹீரோவுடன் நடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் இன்று வரை இருக்கிறது.
என்னை விட உங்களுக்கு அஜித்தை தானே ரொம்ப பிடிக்கும் என்று விஜய் கேட்டால் எப்படி இருக்கும்? அதற்கு என்ன பதில் சொல்வது?
அப்படி ஒரு கேள்வியை என்னிடம் விஜய் கேட்டார். அதை கேட்டதும் 'இதென்னடா வம்பா போச்சு?' இப்படி ஒரு கேள்வியை கேட்கிறாரே என்று சிரித்தேன்.
அவர் ஏன் இப்படி ஒரு கேள்வியை கேட்டார்....? அதற்கும் ஒரு காரணம் உண்டு.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகி ஆகி நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜி சார் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல் உள்பட பெரும்பாலும் எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்து இருக்கிறேன்.
அஜித்துடன் 'ஆனந்த பூங்காற்றே', 'வில்லன்', 'சிட்டிசன்' ஆகிய 3 படங்களில் நடித்துள்ளேன். அந்த மூன்று படங்களும் சூப்பர் ஹிட்டானது.
ஆனால் விஜய்யுடன் ஒரு படத்தில் கூட நடிக்க முடியாமல் போனது. அது உண்மையிலேயே எனக்கு வருத்தமான விசயம். சில நேரங்களில் என்னதான் நாம் நினைத்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக இல்லாவிட்டால் என்ன செய்வது?
அப்படித்தான் விஜய்யுடன் நடிக்க வந்த வாய்ப்புகளும் வாய்க்காமல் போயிற்று. 'பிரியமுடன்' மற்றும் 'பிரண்ட்ஸ்' ஆகிய படங்களுக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அப்போது நான் ரொம்ப பிசியாக இருந்ததால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. இதனால் ஒரு பெரிய ஹீரோவுடன் நடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் இன்று வரை இருக்கிறது.
ஆனால் ஷாஜகான் படத்தில் 'சரக்கு வச்சிருக்கேன். இறக்கி வெச்சிருக்கேன்' என்ற ஒரே ஒரு பாடலுக்கு விஜய்யுடன் டான்ஸ் ஆடியிருக்கிறேன்.
அதுவும் குத்து டான்ஸ் போல் இருக்கும். அந்த பாடலில் ஆட நான் முதலில் தயங்கினேன். ஆனால் ஆர்.பி.சவுத்ரி விரும்பி கேட்டதால் என்னால் தவிர்க்க முடியவில்லை. ஒத்துக் கொண்டேன்.
சரக்கு வெச்சிருக்கேன்
இறக்கி வச்சிருக்கேன்
கருத்த கோழி முழகு போட்டு
வறுத்து வச்சிருக்கேன்
கோழி ருசியா இருந்தா
கோழியை தின்பேன்
குமரி ருசியா இருந்தா
குமரியை தின்பேன்...
என்ற அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
அஜித் ஜோடியாக நடித்த ஆனந்த பூங்காற்றே படம் சூப்பர் ஹிட்டானது. அந்த படத்தில் வரும்
"செம்மீனா... விண்மீனா.." என்ற பாடல் சூப்பர். எனக்கு ரொம்ப பிடிக்கும். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. பாடல் முழுக்க மீனா... மீனா.. என்று வரும். தன்னை பற்றி பாடி புகழ்ந்தால் யாருக்குதான் சந்தோசம் வராது? அப்படித்தான் எனக்கும். அந்த பாடல் ரொம்ப பிடித்து போனது. பாடல் காட்சிகளை குலுமணாலியில் படமாக்க திட்டமிட்டார்கள்.
டெல்லியில் இருந்து குலுமணாலி செல்ல சுமார் 600 கிலோ மீட்டர் பயணம். பஸ்சில் செல்ல வேண்டுமென்றால் 15 மணி நேரம் ஆகும். இமாச்சலபிரதேச தலைநகர் சிம்லா வரை விமானத்தில் சென்று அங்கு இருந்து பஸ்சிலும் பயணிக்கலாம்.
பனி படர்ந்த பிரதேசம். பார்க்க பரவசமாக இருக்கும். ஆனால் குளிர் நடுங்க வைக்கும். நாங்கள் டெல்லியில் இருந்து விமானத்தில் தான் செல்ல திட்டமிட்டோம். ஆனால் மோசமான வானிலை காரணமாக விமானங்கள் ரத்தாகி விட்டது. வேறு வழியில்லாமல் எல்லோரும் பஸ்சில் 15 மணி நேரம் பயணம் செய்ய வேண்டி யதாயிற்று. அந்த பயணம் திரில்லிங்கானது என்பதை விட திகிலூட்டுவதாக இருந்தது. இந்த படத்தில் தான் மாளவிகா அறிமுகமானார். முக்கிய வேடத்தில் கார்த்திக் சாரும் நடித்து இருந்தார்.
குலுமணாலி எல்லைப் பகுதியில் இருப்பதால் ராணுவ கட்டுப்பாடு நிறைந்த பகுதி. இஷ்டத்துக்கு சுற்ற முடியாது. கேமராவின் கண்களுக்குள் பனிமலை முகடுகளை முழுமையாக படமாக்கினார்கள். டைரக்டர் ராஜ்கபூர்சார். சிதறிய பனியில் நான் போட்டிருந்த மேக்-அப் கூட கலைந்தது. அடிக்கடி டச்-அப் செய்து கொண்டேன். ஆனால் மேக்-அப்பை பற்றி கவலைப்படாத மனிதர் அஜித். ஏனென்றால் அவர் பெரும்பாலும் மேக்-அப்பே போடுவது கிடையாது. குலுமணாலியில் செம்மீனா டூயட் பாடலுக்கு ஆடிய போது குளிரும் சேர்ந்து மிரட்டியது. தொட்ட இடம்... கை பட்ட இடம் எல்லாம் சுர்ரென்று குளிர் மின்சாரம் போல் தாக்கியது.
அதைவிட இன்னொரு வேடிக்கை... அஜித்தை தொடும் போதும் சுர்.... என்று ஷாக் அடிப்பது போல் இருக்கும். சார்... உங்க மீது கை வைத்தால் ஷாக் அடிக்குது சார் என்பேன். குளிர் பிரதேசத்தில் தண்ணீர் குழாயை திறந்து தண்ணீரில் கை வைத்தால் 'சுர்' என்று பிடிக்கும். அதே போல்தான் பனியில் அஜித் உடலும் சுர் என்றது ஆச்சரியமாக இருந்தது. அந்த படத்தில் இடம் பெற்ற "மீனாட்சி... மீனாட்சி... அண்ணன் காதல் என்னாச்சு" என்ற பாடலும் அப்போது எல்லா இடங்களிலும் ஒலித்தது.
அஜித் காம்பினேஷனில் என் படம் வெற்றி பெற்றதும், நல்ல ஜோடி என்று ரசிகர்களால் பாராட்டப்பட்டதும் உண்மை. அதற்காக விஜய்யுடன் நடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் இல்லாமல் போகுமா?
ஆனால் அந்த குறையை என் மகள் நைனிகா தீர்த்து வைத்தாள். விஜய்யின் தெறி படத்தில் அவள் சிறப்பாக நடித்ததை விஜய் மனம் திறந்து பாராட்டினார். அப்போது தான் ஜோவியலாக 'உங்களுக்கு என்னை விட அஜித்தை தானே ரொம்ப பிடிக்கும்?' என்ற ஒரு கேள்வியையும் தூக்கி போட்டார்.
என்னடா இப்படி ஒரு கேள்வி கேட்கிறாரே என்று நினைத்தபடி ஏன் அப்படி கேக்குறீங்க என்றேன். உடனே அவர் 'நீங்க என்கூட ஒரு படம் கூட நடிக்கவில்லை. ஆனால் அஜித்தோடு மட்டும் மூன்று படம் பண்ணியிருக்கீங்க... என்றார்.
அய்யய்யோ... சார் உங்களோடு நடிக்க வாய்ப்பு வந்தபோது நான் ரொம்பவே பிசியாக இருந்தேன். அதான் சார் முடியவில்லை. வேறு எதுவும் இல்லை என்று நான் சொன்னதும் அவரும் சிரித்தார். நானும் சிரித்தேன்.
ஆனந்த பூங்காற்று போல் ஆனந்தமுடன் அடுத்த வாரம் சந்திப்போம்.
(தொடரும்).