சிறப்புக் கட்டுரைகள்
null

புதன் தோஷம் நீக்கும் பரிகாரம்

Published On 2024-05-28 16:15 IST   |   Update On 2024-05-28 16:48:00 IST
  • வாழ்க்கை வளம் பெற புத பலம் மிக அவசியம் என்பதால் 12 ராசிக்கும் புதன் தோஷம் நீக்கும் பரிகாரங்களைக் காணலாம்.
  • மனிதன் அனைத்து சூழ்நிலையிலும் சுயமாக இயங்க புத்தி அவசியம்.

மனித வாழ்க்கை செம்மை பெற புத்தி, அறிவு, ஞானம் அவசியம். இவற்றை புதன் வழங்குவதால் புத்திக்காரகன் என்று பெயர் உண்டு.

ஒரு மனிதனின் ஞானத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் காரணமான கிரகம் என்பதால் வித்யாகாரகன் என்ற பெயரும் உண்டு. புதன் சுப வலுப் பெற்றவர்களுக்கு புத்திசாலித்தனம் இருக்கும். எனவே வாழ்க்கை வளம் பெற புத பலம் மிக அவசியம் என்பதால் 12 ராசிக்கும் புதன் தோஷம் நீக்கும் பரிகாரங்களைக் காணலாம்.

மேஷம்

மேஷ ராசிக்கு புதன் 3, 6-ம் அதிபதி என்பதால் சுய ஜாதகத்தில் புதன் சுப வலுப்பெற்றால் அடிக்கடி இடப் பெயர்ச்சி செய்ய நேரும். உடன் பிறந்தவர்களுடன் ஒத்துப் போகாது. ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகள் உண்டு. உடன் பிறந்தவர்கள் உயர்ந்த நிலையில் இருப்பார்கள். அடிக்கடி உத்தியோகத்தை மாற்றுவார்கள்.

திட்டமிடாத செயல்பாடுகளால் அதிக கடன் சுமை இருக்கும். நிறைய எதிரிகளையும் சம்பாதித்துக் கொள்வார்கள். ராசி அதிபதி நல்ல நிலையில் இல்லாத பொழுது ஜாதகருக்கு நரம்பு, தோல், வலிப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், அஜீரணக் கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

புதன் கிழமை ராகு காலத்தில் மகா விஷ்ணுவை வழிபட வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கு புதன் 2, 5-ம் அதிபதி. சுய ஜாதகத்தில் புதன் ஆட்சி, உச்சம், சுப வலு பெறுவது சிறப்பு. புதன் சுபப் தன்மை பெற்றவர்கள் கல்வி ஆர்வம் நிறைந்தவர்கள். நன்றாகப் படித்து பதக்கங்கள் பெறுவார்கள். உயர் கல்வி யோகம் உண்டு. கற்ற கல்விக்கு தொடர்பான உத்தியோகம், தொழிலில் இருப்பவர்கள். கல்வி நிறுவனங்கள் நடத்துவார்கள் அல்லது பணிபுரிவார்கள் அல்லது ஞான உபதேசம் செய்வார்கள். பூர்வீகச் சொத்தை சுகந்திரமாக அனுபவிப்பார்கள். வம்சாவளியாக குலத் தொழிலில் ஈடுபடுவார்கள். புதன் அசுபத் தன்மை பெற்றவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்காது. கற்ற கல்வியால் பயன் இருக்காது. பூர்வீகம் சிறப்பல்ல.

பரிகாரம்: புதன் கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமியை வழிபாடு செய்ய வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசிக்கு புதன் லக்னாதிபதி நான்காம் அதிபதி. சுய ஜாதகத்தில் புதன் ஆட்சி உச்சம் பெற்றால் கேந்திரா திபத்திய தோஷம் உண்டாகும். ராசி சுப வலுப்பெற்றால் தலைமைப் பண்பு நிறைந்தவர்கள். திறமைசாலிகள், தவறான வழியில் செல்லமாட்டார். நல்ல சிந்தனையும், புகழும் அடைவார்கள். சுய முயற்சியில் பணக்காரர் ஆவார்கள். சுக வாழ்வு அமையும். புதன் அசுப வலிமை பெற்றவர்களுக்கு சொல் புத்தியும் கிடையாது. சுய புத்தியும் இருக்காது.

பெதுவாக மிதுன ராசிக்கு புதன் எந்த நிலையில் இருந்தாலும் படிக்காத மேதையாக படிக்காமலே பரிட்சையில் பாஸ் ஆகிவிடுவார்கள். படிப்பிற்கும் தொழில், வேலைக்கும் சம்பந்தம் இருக்காது. வாகனம், பூமி லாபம், அரசு வகையில் ஆதாயம், உயர்ந்த பதவி அமையும். செல்வச் செழிப்பு உண்டு. பல விதமான சுப பலன்கள் வாழ்நாள் முழுவதும் மிகுந்து கொண்டே இருக்கும்.

பரிகாரம்: புதன்கிழமை புதன் ஓரையில் தாயாருடன் இணைந்த மகா விஷ்ணுவை வழிபட வளர்ச்சி அதிகரிக்கும்.


கடகம்

கடக ராசிக்கு புதன் 3, 12-ம் அதிபதி. உப ஜெயஸ்தானமான 3-ம்மிடம் பலம் பெற்றால் முயற்சியால் உழைப்பால் உயர்ந்த, உயர விரும்பும் உத்தமர். ஜாதகர் தைரியமானவர். பலசாலி. வீரியம் உடையவர். இளைய சகோதரம் உண்டு. இளைய சகோதரர் பெயர், புகழ், உடையவர். சகோதரர்கள் ஒற்றுமை உள்ளவர்கள். ஈருயிறும், ஓர் உடலுமாக வாழ்பவர்கள். ஊடகங்கள், தகவல் தொடர்பு துறையில் நாட்டம் உண்டு. ஞாபக சக்தி அதிகமாக இருக்கும்.

மூன்றாமிடம் அசுப வலுப்பெற்றால் சகோதரர்கள் உதட்டளவில் மட்டும் உறவாடுவார்கள். வீரியம், செவித்திறன் குறைவு உண்டு. எடுப்பார் கைப்பிள்ளையாக வாழ்வார்கள். 12-ம்மிடம் சுப வலுப்பெற்றால் சுப விரயம் மிகுதியாக இருக்கும். நிம்மதியான தூக்கம் உள்ளவர். வெளி நாட்டு வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இன்பமான இல்வாழ்க்கை அமையும். 12ம்மிடம் அசுபத்தனமாக செயல்பட்டால் வாழ்க்கை துக்கம் நிறைந்தாக இருக்கும். தலைமறைவு வாழ்க்கை வாழ்வார்கள்.

பரிகாரம்: புதன்கிழமை சந்திர ஓரையில் மகா விஷ்ணுவை வழிபட வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்கு புதன் தன, லாப அதிபதி என்பதால் புதன் எந்த நிலையில் இருந்தாலும் சாதகமான பலன் உண்டு. மறைந்த புதன் நிறைந்த பலன்கள் கிடைக்கும். தொட்டது துலங்கும். வழக்கறிஞர், அரசியல் வாதிகள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள், மார்க்கெட்டிங் துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு புதன் தசை காலங்களில் சுப பலன்கள் இரட்டிப்பாகும். சாதாரண நிலையில் இருப்பவர்கள் கூட உயர் நிர்வாக பதவி, உயர்ந்த அந்தஸ்தை அடைவார்கள். படித்த படிப்பு, அனுபவம் என அனைத்து விதத்திலும் மேன்மையான பலன்கள் உண்டு. செல்வாக்கு, சொல்வாக்கு நிறைந்தவர்கள். கற்ற கல்வி மூலம் நிறைந்த வருமானமும் திரண்ட சொத்துக்களும் சேரும். சகலகலா வல்லவர்களாக இருப்பார்கள். புதனுக்கு அசுப கிரக சம்பந்தம் இருந்தாலும் ஒரளவேனும் சுப பலன்கள் நடக்கும்.

பரிகாரம்: புதன் கிழமை சூரிய ஓரையில் மகா விஷ்ணுவை வழிபட வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்கு புதன் 1, 10-ம் அதிபதி. ராசி அதிபதி புதன் பலம் பெற்றால் தொழில் தந்திரவாதிகள். மதி நுட்பத்தால் தொழிலில் சாதனை படைப்பார்கள். பல தொழில் துறை பற்றிய அறிவு உண்டு. பல அறிய புதிய விசயங்களை கண்டுபிடிப்பார்கள். ஜாதகர் தன் தொழில் ஞானத்தை பயன்படுத்தி பிறருக்கு ஆலோசனை கூறி சம்பாதிப்பார்கள். கற்ற கல்விக்கு தகுந்த வேலை உண்டு. ஜாதகர் பார்க்கும் தொழில் மூலம் புகழ், அந்தஸ்து, கவுரவம் கிடைக்கப் பெறுவர். அதிகார பலமிக்க அரசாங்க பதவி, அரசியல் செல்வாக்கு ஆதாயம், செய்யும் தொழிலில் பெருத்த ஆதாயம் உண்டு. நல்ல வருமானம் உண்டு. பெற்றவர்களுக்கு கர்மம் செய்யும் பாக்கியம் பெற்றவர்கள். புதன் ஆட்சி உச்சம் பெற்றால் கேந்திராதிபத்திய தோஷ பாதிப்பு உண்டு. இதற்கு அசுப கிரக சம்பந்தம் இருந்தால் இவர்களுடைய தொழில் அறிவு பிறருக்கே பயன்படும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது. சிந்தனை திறன் குறைவுபடும். முன்னேற்றம் இருக்காது.

பரிகாரம்: புதன்கிழமை புதன் ஓரையில் மகா விஷ்ணுவை வழிபட வேண்டும்.

ஐ.ஆனந்தி

துலாம்

துலாம் ராசிக்கு புதன் 9, 12-ம் அதிபதி. பாக்கிய அதிபதி என்பதால் புதன் மிதுனத்தில் ஆட்சி பலம் பெறுவது சிறப்பு. முதுநிலை ஆராய்ச்சி கல்விக்கு வெளிநாடு செல்வார்கள். படித்து முடித்த பிறகு வெளிநாட்டில் செட்டிலாவார்கள். முன்னோர்களின் குல மரபை முறையாக கடைபிடிப்பார்கள். எளிமையாக பிறருக்கு புரியம் படி கற்பிப்பதில் வல்லவர்கள். ஏழை, எளியவர்களுக்கு இலவசமாக போதிப்பவர்கள். சிலர் புத்தக ஆசிரியர்களாக இருப்பார்கள்.

பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் என தொழில் வெற்றியும், சிறந்த அந்தஸ்தும் கிட்டும். வம்சாவழியாக கல்வி, நிதி நிறுவனங்கள் நடத்துவார்கள்.

சிறந்த ஆராய்ச்சியாளர்களாக அனைவராலும் புகழப்படுவார்கள். கன்னியில் உச்சம் பெறும் போது சுப விரயங்கள் மிகுதியாகும். இவர்களது திறமைகளை பிறருக்கு இலவசமாக விரயம் செய்வார். இந்த அமைப்பினர் வெளி நாட்டில் வாழ்ந்தால் கற்ற கல்வியால் பயன் உண்டு. புதன் நீசம் பெற்றால் சோம்பேறித்தனம், பயந்த குணம் போன்ற பலன்கள் ஏற்பட்டு ஜாதகர் எந்த முயற்சியும் செய்யாமல் மனோபலமும் குறைந்தவராக இருப்பார்கள்.

பரிகாரம்: புதன் கிழமை சுக்ர ஓரையில் மகா விஷ்ணு சமேத மகாலட்சுமியை வழிபட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிகத்திற்கு புதன் அஷ்டமாதிபதி மற்றும் லாப அதிபதி.

அட்டமாதிபதியாகி புதன் மிதுனத்தில் ஆட்சி பெறுவதால் ஜாதகர் ஏமாற்றுப் பேர்வழியாக இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு.தெரியாத விஷயத்தைக் கூட தெரியக் கூடியதாக காட்டிக் கொள்வர். எதையும் தன்னால் செய்ய இயலும் என சொல்லக் கூடியவராக இருப்பார். முன்னுக்குப் பின் முரணாக பேசக் கூடியவராக இருப்பார். தன் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் திடீர் திடீரென்று மாற்றிக் கொள்வார். அடிக்கடி அவமானம், விபத்து, கண்டம், சர்ஜரி அபாயங்களை சந்திப்பவர்கள்.

கன்னியில் உச்சம் பெற்ற புதன், 13-ம் இடம் என்ற லாப ஸ்தான ஆதிபத்தியம் பெறுவதால் பண விஷயங்களில் பெரிய அளவில் பிரச்சனைகள் ஏற்படாது. குறுக்கு வழிகளில் ஈடுபட்டாவது தன்னுடைய பணத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார். இங்குள்ள புதன் குருவின் சம்பந்தம் பெறுவதும் நல்லதாகும்.

பரிகாரம்: புதன்கிழமை செவ்வாய் ஓரையில் சிவன், அம்பிகை, முருகன், விநாயகர் இணைந்த குடும்ப படம் வைத்து வழிபடவும்.

தனுசு

தனுசு ராசிக்கு புதன் 7, 10-ம் அதிபதி மற்றும் பாதக அதிபதி. மிதுனத்தில் ஆட்சி பலம் பெறும். புதன் திருமண வாழ்க்கையில் பாதகத்தையும், கேந்திராதிபத்திய தோஷத்தையும் ஏற்படுத்த தவறுவதில்லை. அதே போல் நண்பர்கள், தொழில் கூட்டாளிகளால் ஏமாற்றப்படுவார்கள். கன்னியில் உச்சம் பெறும் புதனும், மீனத்தில் நீசம் பெறும் புதனும் குரு சம்பந்தம் பெறும் போது நல்ல பலனைத் தரும். அறிவுடையவர்கள். அழகாய் பேசுபவர்கள். தீர்க்கமான சிந்தனையுடையவர்கள். ஜாதகரும் பெற்றோர்களும் நன்கு படித்தவர்களாக இருப்பார்கள். வாழ்க்கைத் துணையாலும் ஆதாயம் உண்டு. நல்ல படித்த உத்தியோகத்தில் உள்ள வாழ்க்கைத் துணை கிடைக்கும். புதனுக்கு கேந்திராதிபத்திய தோஷம், பாதகாதிபத்திய தோஷம் உள்ளதால் தசை, புத்தி காலங்களில் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

பரிகாரம்: புதன் கிழமை குரு ஓரையில் மகா விஷ்ணுவை வழிபட வேண்டும்.

மகரம்

மகர ராசிக்கு புதன் 6, 9-ம் அதிபதி. புதனால் சாதகமும் பாதகமும் சேர்ந்த பலனே நடக்கும்.மிதுனத்தில் ஆட்சி பலம் பெற்ற புதனை விட கன்னியில் உச்சம்பெறும் புதனும் மீனத்தில் நீசம். பெறும் புதனும் நல்ல பலனை வழங்கும். தொழிலில் மேன்மையும், அரசியலில் பதவியும். செல்வாக்கும், சட்டத்துறையில் மதிப்பும் கிடைக்கும். சூரியன், புதனும் பெரும்பான்மையாக சேர்ந்தே பயணிக்கும் கிரகம். அஷ்டமாதிபதி சூரியனுடன் சேரும் புதன் சிலருக்கு சிறப்பான பலனை தரும். விபரீத ராஜயோகமாக அமையும். பல மகர லக்னத்தினருக்கு கடுமையான பாதிப்பை தருகிறது.

பரிகாரம்: புதன் கிழமை சனி ஓரையில் மகா விஷ்ணுவை வழிபட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்கு புதன் 5, 8-ம் அதிபதி. மீனத்தில் புதன் நீசம் பெறும் போதும் மிதுனத்தில் ஆட்சி பலம் பெறும் போதும் எப்படியாவது படித்து நல்ல வேலைக்கு சென்று விடுவார்கள். சிறப்பான யோகம், உயர்ந்த பதவி, தொழில் அனுகிரகம் உண்டு. அரசியலில் பெரிய பதவி, செல்வாக்கும், சட்டசபைத் தலைவர்கள், நீதிபதி பதவி கிட்டும். கன்னியில் உச்சம் பெறும் புதனால் மண வாழ்க்கையில் மனச் சங்கடங்கள் உண்டு. சிலருக்கு வம்பு வழக்கான காதல் திருமணம் நடக்கும். சிலருக்கு திருமணமே நடக்காது. சிலரது திருமணம் விவாகரத்தில் முடியும். சிலருக்கு குழந்தை பிறக்காது அல்லது குழந்தைகளால் வாழ்நாள் முழுதுவம் மனச் சங்கடம் நீடிக்கும். சுபமும், அசுபமும் கலந்தே நடக்கும்.

பரிகாரம்: புதன் கிழமை சனி ஓரையில் சிவனும், விஷ்ணும் சேர்ந்து உள்ள கோவில் சென்று வழிபட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்கு புதன் 4,7-ம் அதிபதி. புதன் எந்த நிலையில் இருந்தாலும் கேந்திராதிபத்திய தோஷம், பாதகதிபத்திய தோஷம் என்ற அடிப்படையில் பாதிப்பை தரும். பள்ளிப் படிப்பையே தடுமாறச் செய்யும். நண்பர்களுடன் இணைந்து தீய பழக்கத்தில் ஈடுபடுவார்கள். நிலையான தொழில் உத்தயோகம் இருக்காது. சுய தொழில் செய்தால் கடன் சுமை மிகுதியாக இருக்கும் அல்லது நோய் தொந்தரவு இருக்கும். உத்தியோகத்தை அடிக்கடி மாற்றுவார்கள். தாயாரை பிரிந்து வாழ்வார்கள். நல்ல சொத்து சுகத்துடன் கூடிய வாழ்க்கைத் துணை அமையும். கிடைத்த வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ளத் தெரியாது. வெகு சிலருக்கு ராசி அதிபதி குரு வலுத்தால் சுயபலத்தின் அடைப்படையில் நற்பலன்கள் உண்டு.

பரிகாரம்: புதன் கிழமை குரு ஓரையில் மகா விஷ்ணுவை வழிபட வேண்டும்.

மனிதன் அனைத்து சூழ்நிலையிலும் சுயமாக இயங்க புத்தி அவசியம். எனவே புத்தி கிரகமான புதனின் அனுகிரகம் கிடைக்க உரிய வழிபாட்டு முறைகளை பயன்படுத்தி பயன் பெற வாழ்த்துக்கள்.

செல்: 98652 20406

Tags:    

Similar News