சிறப்புக் கட்டுரைகள்

நன்றி சொல்வது நல்ல செயல்!

Published On 2024-05-20 16:45 IST   |   Update On 2024-05-20 16:45:00 IST
  • குறைவான நல்ல நண்பர்கள் போதும். பெரும் கூட்டம் வேண்டாம்.
  • ஒருவன் தன்னை கட்டுப்படுத்தி வாழ்வதுதான் மிகப்பெரிய சாதனை.

வாழ்வினை எளிமை படுத்திக் கொள்ள சில வழிமுறைகளை கடைபிடிப்பது அவசியம் ஆகும்.

* யாரிடமும் நட்பு கொள்வதில் கூட சற்று தள்ளியே இருக்க வேண்டும்.

* முடிந்த வரை தேவையில்லாத பொழுது வாயை மூடிக் கொண்டு பேசாமல் இருப்பது நல்லது.

* ரொம்பவும் அதிகமாக எதனைப் பற்றியும் யோசிக்காமல் இருப்பது நல்லது.

* குறைவான நல்ல நண்பர்கள் போதும். பெரும் கூட்டம் வேண்டாம்.

* யார் மீதும் வரிந்து கட்டிக்கொண்டு பழிக்குப்பழி வாங்கும் எண்ணம் வேண்டாம்.

* பெரிய சாதனைகளை உலகறிய செய்வது மட்டுமே சாதனை ஆகாது. ஒருவன் தன்னை கட்டுப்படுத்தி வாழ்வதுதான் மிகப்பெரிய சாதனை.

* தன்னை வருத்தி எடுத்து மிகவும் நல்லவராக மற்றவர்களுக்கு இருக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. இதற்கு மிகப்பெரிய மன பக்குவம் தேவை. பிறருக்கு எண்ணத்தால் சொல்லால், செயலால் தீங்கு செய்யாது இருந்தாலே போதும்.

* பிறர் விஷயத்தில் மூக்கை நுழைக்கக் கூடாது.

* பரபரவென்ற வாழ்க்கை எதற்கு? நிதானமாய், முறையாய் வாழலாமே.

* எந்த நேரமும் ஒரு விஷயத்தினை நினைத்து அதிக யோசனை, கற்பனை என மூழ்க வேண்டாமே.

* சிறு சிறு விஷயங்களும் கூட உதாரணமாக அழகான பூ, சூரிய உதயம் போன்றவையும் மனதிற்கு இதமான மகிழ்ச்சி தரும்.

* முடிந்த வரையில் மனிதர்களிடம் இருந்து தள்ளி இருங்கள்.

கமலி ஸ்ரீபால்

* உங்களை நீங்களே நேசிப்பது அவசியம்.

* மற்றவர்களை கட்டுப்படுத்து வதனை விட நம்மை கட்டுப்படுத்திக் கொள்வது எளிது. பிறரை கட்டுப்படுத்துவது ஒருவரின் பலத்தினை அதிகாரத்தினை காட்டலாம். ஆனால் தன்னை தானே கட்டுப்படுத்திக் கொள்வது ஒருவரது ஆன்ம சக்தியினை காட்டுகின்றது.

* எதையும் எதிர்பார்க்க வேண்டாம். எதிர்பார்ப்பு ஏக்கத்தினைத் தரும்.

* இறைவனின் படைப்பில் சிறு சிறு படைப்புகள், இயற்கை என அனைத்தினையும் மனத்திற்குள்ளாக ரசியுங்கள்.

* எந்த ஒரு விஷயத்திற்கும் அதிகமான 'ரியாக்ஷன்' கொடுக்க வேண்டாம்.

* நம்மால் இயன்றதை சரியாக செய்து விட்டு இயற்கையிடம் இறைவனிடம் பிரபஞ்சத்தினிடம் அந்த பொறுப்பை விட்டு விடுவோம்.

* உண்மையான பாசம் என்பது அரிதுதான். பெற்றோரிடம் கிடைப்பதே கலப்படமின்றி இருக்கும். இதுவும் 99 சதவீதம்தான். 1 சதவீதம் பெற்றோர்களின் செயல்களை நாம் படிக்க நேரிடும்போது மனம் கலங்கி விடுகின்றது. எனவே பாசமான பெற்றோராக இருப்போம்.

* ரொம்பவும் சாதுவாக இருந்தால் பிறர் நம்மை கட்டுப்படுத்தி ஆள ஆரம்பிப்பர். இது எங்கும் நிகழாத வகையில் நம்மை நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* உங்கள் வேதனைகளை, கஷ்டங்களைப் பகிர்ந்து கொண்டால் நீங்கள் பலவீனமானவர்களாக மற்றவர்களுக்குத் தெரிவீர்கள். இதனை செய்யவே செய்யாதீர்கள்.

கீழே கூறப்பட்டுள்ளவைகளை நாம் நம்மை ஏமாற்றிக் கொள்ளாமல் செய்கின்றோமா?

* அன்றாடம் உடற்பயிற்சி (இதுவே உடலுக்கு சக்தி தரும்)

* முறையான தூக்கம் * முறையான உணவு

* நேரத்தினை திறம்பட கையாளுதல்

* தினமும் சிறிது நேரம் படித்தல்

* டி.வி., போன் நேரத்தினை அளவு படுத்துதல்

* ஒருவருக்காவது சிறு உதவி செய்தல்

இதனை படித்து ஒதுக்காமல் மனதில் ஏற்றி முறையாக செய்ய வேண்டும்.

* ஒருவரின் உடல் நலத்திற்கும், அவரது செல்வத்திற்கும் அவரது உறவுகளுக்கும் அவரே பொறுப்பாகின்றார்.

* ஒன்று தெரியுமா? வார்த்தைகள் பலவீன மானவை. ஒருவரது ஆற்றல், நடத்தை, அமைதி இவையே பலமானவை.

* மரியாதை குறைவாக நடத்தும் இடத்தில் எத்தனை பெரிய லாபம் இருந்தாலும் அங்கிருந்து நகர்ந்து விட வேண்டும்.

* எல்லோருக்கும் மரியாதை தர வேண்டும். அதே நேரத்தில் கண்மூடித்தனமாக எதனையும் நம்பக் கூடாது.

* ஒருமுறை ஒருவர் உங்களை ஏமாற்றினாலும் மனதில் அவரை தள்ளிதான் வைக்க வேண்டும்.

இவையெல்லாம் கூற வேண்டியதன் அவசியம். இன்று நிறைய மனிதர்கள் உள்ளனர். ஆனால் மனித நேயம் அரிதாகி விட்டது. ஆக இன்றைய மனிதன் அமைதியான வாழ்க்கைக்காக சற்று மாறுபட்ட வாழ்க்கை வழியினை மககள் கடைபிடிக்க வேண்டி உள்ளது. உதாரணமாக முன்பெல்லாம் நம் உற்றார், உறவினர், நண்பர்கள் வீட்டிற்கு நாம் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் செல்லலாம். உரிமையாய் அமரலாம். இருக்கலாம், சாப்பிடலாம். ஆனால் இன்றைய கால கட்டத்தில் அவர்களது சூழ்நிலை தெரிந்தே செல்ல வேண்டி உள்ளது. இது பலருக்கு சங்கடமாகக் கூட இருக்கலாம். ஆனால் இதில் ஒரு சில உண்மைகளையும் கவனியுங்கள். கணவன, மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் காலம். அதிக பொறுப்புகள், அதிக சுமைகள், அதுவும் நகர்புற வாழ்க்கையில் வசதிகளும் உண்டு. பிரச்சனைகளும் உண்டு. இதனை நாம் உணர்ந்து நடந்தால் உறவுகள் சுமூகமாக இருக்கும்.

அது போல் தொலைபேசியில் ஒருவரை அழைக்கின்றீர்கள். பதில் இல்லை. மறுமுறை அழைக்கின்றீர்கள். மீண்டும் பதில் இல்லை என்றால் விடாது அவர்களை போனில் துரத்தாதீர்கள். அங்கு என்ன நிலவரமோ? என்று சற்று அமைதியாய் இருங்கள். நான் ஏதாவது உதவி செய்யட்டுமா? எல்லாம் ஒகே தானே? என்ற பரிவான செய்தி அனுப்புங்கள். இதுதான் பண்பு.

* யாரிடமும் கடன் வாங்கவே வேண்டாம். அப்படியும் வாங்கி விட்டால் குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே கொடுத்து விடலாமே.

* சிலர் உங்களை நம்பி ரகசியங்களை சொல்லலாம். வேதனைகளை பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் அது உங்கள் மனதினை விட்டு வெளியே வரவே கூடாது. உனக்கு மட்டும் சொல்கிறேன் என்று தம்பட்டம் அடித்து அனைவரும் அறிந்த ரகசியம் ஆக்கி விடாதீர்கள். இதுவும் ஒரு நம்பிக்கைத் துரோகம்தான்.

* கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான் சத்தியம்.

* குறித்த நேரத்தில், சொன்ன நேரத்தில் இருப்பது அவசியம்.

* ஒருவர் பேசும் போது குறுக்கே பேசுவது அநாகரீகம்.

* 'நன்றி' சொல்வது-அது யாராக இருந்தாலும்- சிறிய உதவியாக இருந்தாலும் நன்றி சொல்வது நல்ல செயல்.

* 'தமாஷ்' என்ற பெயரில் பிறர் மனதை காயப்படுத்தாதீர்கள்.

இவைகள் அனைத்துமே உங்கள் உள் ஒளியினை பிரகாசிக்கச் செய்யும்.

* இறைவனை - இயற்கையை- தன்னம் பிக்கையினை சார்ந்து இருப்பதே நல்லது. பிரர் தோளில் சாய வேண்டாம்.

* கருணை, கனிவு என்றாலும் ரொம்ப அதிகமான இனிமை காட்டினால் மற்றவர்களால் விழுங்கப்படுவீர்கள்.

நாம் சிலவற்றினை விடாப்பிடியாக செய்து பார்ப்போமே!

* இளைஞர்கள் மலையேறும் நிகழ்ச்சியினை சில அமைப்புகள் செய்து வருகின்றன. ஒரு வாரம் இதற்கு சென்று பாருங்கள். வாழ்க்கையில் பல பொருட்கள், வசதிகளை நாம் தேவையற்று தேடி அலைகின்றோம். சேர்த்து குவிக்கின்றோம் என்பது புரியும்.

* ஒரு வருட ஹாஸ்டல் வாழ்வு (எத்தனை வசதிகளுடன் இருந்தாலும் கூட) வீட்டின் முக்கியத்துவத்தினை உணர்த்தும்.

* உயிருக்கு போராடும் நோயாளியுடன் ஒரு சில மணி நேரங்கள் இருந்து பாருங்கள். நம் வாழ்வின் அருமை புரியும்.

* உடல் உழைப்பு, உடற்பயிற்சி ஸ்ட்ரெஸ்சை குறைத்து விடும்.

* ஒரு கேள்விக்கு பதில் என்பதனை வேகம் எடுத்து சொல்லாமல் சற்று சில நொடிகள் நிதானித்து சொன்னால் மதிப்பான, பண்பான பதிலாக இருக்கும்.

* மிகவும் சத்தமாக பேசுவதனை தவிர்க்கலாமே.

* ஒரே நேரத்தில் அஷ்டாவதானி போல் பல வேலைகளை செய்வது அரிதான ஒன்று. ஆக நாம் நிதானமாக செய்யலாமே.

* என்னால் இது முடியாது என்று எப்பொழுதும் நினைக்க வேண்டாமே.

* இன்று உலகை விட்டு செல்வதில் பிறந்ததில் இருந்து அனைவரும் வரிசையில் காத்து இருக்கின்றோம். ஒருவர் முன்னே இருக்கலாம். ஒருவர் பின்னே இருக்கலாம். இங்கு வரிசையினை உடைத்து நாம் முன்னே செல்லவோ, பின்னே செல்லவோ முடியாது. இது பிரபஞ்ச விதி. இங்கு எந்த லஞ்சமும் சிபாரிசும் எடுபடாது.

அப்படியிருக்க வாழும் ஒவ்வொரு நொடியும் முக்கியமானது. அந்த நொடியில் உலகிற்கு நம்மால் முடிந்து நல்லதை செய்வோம். அன்பு செலுத்துவோம். பிறரை புன்னகைக்க செய்வோம்.

விடாப்பிடியாக இதனை செய்யும் பொழுது நம்முன் ஒளிசக்தி கூடும்.

கீழ்கண்ட குணங்கள் உங்களிடம் இருக்கிறதா?

* தனது பெருமையை தானே தம்பட்டம் அடிக்கும் குணம். எந்த முடிவும், எந்த செயலும் செய்ய பிறர் 'சரி, கரெக்ட்' என்று சொன்ன பிறகே செய்ய முயல்வது.


* எப்பொழுதும் கடந்து போன பழைய சோக நிகழ்வில் மூழ்குவது. * பிரச்சனை பற்றி மட்டுமே பேசி விட்டு தீர்வு காண முயற்சி எடுக்காமல் இருப்பது.

* பிறர் செய்த தவறுகளை மன்னிக்காமல் மனதில் பூதாகரமாய் வளர்த்து வைப்பது.

* எப்பொழுதும் பிறர் வாழ்வுடன் தன்னை ஒப்பிட்டு சோகம் அடைவது. * சுய விளக்கம் அளிப்பது * பொருமை

இவையெல்லாம் இருந்தால் நீங்கள் மனதளவில் 'மிக பலவீனமானவர்' என்பது பொருள். உடனடியாக உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

எதை எடுத்தாலும அது உங்களை பாதிப்பதற்கான பேச்சு (அ) செயல் என்று கற்பனை செய்து சோகத்தில் மூழ்கும் குணம் உள்ளதா. கீழே பலர் கூறிய கருத்துகளின் தொகுப்பினை பாருங்கள். * யாராவது சிடுசிடுவென பேசினால் (இன்று அநேக இடங்களில் அதிகமானோர் இப்படித்தான் இருக்கிறார்கள்) அது உங்கள் சம்மந்தப்பட்டதாக இருக்காது. பாவம் அவருக்கு எத்தனை பிரச்சனைகளோ, அதை தாங்க முடியாமல் மற்றவரிடம் சிடுசிடுவென எரிந்து விழுகின்றார்.

* பிறர் கூறும் குற்றம், குறைகளில் உண்மை இருக்கின்றதா என்று பார்ப்போம். இல்லையென்றால் அந்த குற்றம், குறைகளை அவர்களே வைத்துக் கொள்ளட்டும். இருந்தால் நம்மை நாம் திருத்திக் கொள்வோம். அனைவரையும் ஒரு கருத்திற்கு ஒத்துக் கொள்ள வைப்பது கடினமானது. நம் வீட்டில் கூட இது நடக்காது.

* பிறர் கஷ்டம், சோகத்தை கேட்டால் கேட்பவரின் மனதில் தன்னைப் பற்றிய டென்ஷன் குறைந்து விடுமாம். இது எல்லோருக்கும் இப்படி இருக்குமா என்று தெரியவில்லை. ஒரு முறை கேட்டுத்தான் பார்க்கலாமே

* எல்லாம் தெரிந்தும் மகிழ்ச்சியே இல்லாத மனிதர்களும் இருக்கின்றார்கள்.

Tags:    

Similar News