சிறப்புக் கட்டுரைகள்

குருப்பெயர்ச்சியும் புத்திர பிராப்தமும்

Published On 2024-04-23 12:24 GMT   |   Update On 2024-04-23 12:24 GMT
  • குழந்தை பாக்கியத்தை தடை செய்வதற்கான கிரக அமைப்புகளை காணலாம்.
  • குருவின் பார்வைக்கு பல தோஷங்களை போக்கும் சக்தி உள்ளது.

உலகில் மனிதர்களாய் பிறந்த அனைவரும் பிறவிப்பயனை அடையவும் தங்களது வம்சம் தலைக்கவும் தமது வாரிசுகளை விருத்தி செய்ய வேண்டும். பிரபஞ்ச நியதி இவ்வாறு இருக்க திருமணமான தம்பதிகளில் அறுபது சதவிகிதத்தினருக்கு உடனே குழந்தை பாக்கியம் கிடைத்து விடுகிறது.

எஞ்சிய நாற்பது சதவிகிதத்தினர் குழந்தை பாக்கிய மின்மையால் சங்கடத்துடன் வாழ்கிறார்கள். ஒரு காலத்தில் எண்பது சதவிகிதமாக இருந்த குழந்தை பிறப்பு தரமற்ற உணவு பழக்கம், சுதந்திரமான முற்போக்கு வாழ்க்கை போன்ற பல்வேறு காரணங்களால் அறுபது சதவிகிதமாக குறைந்து விட்டது வருத்தப்பட வேண்டிய செயல் என்றே கூற வேண்டும். ஜோதிட ரீதியாக ஒருவரின் புத்திர பாக்கியத்தை புத்திரக்காரகரான குருவும் ஐந்தாமிடமெனும் பூர்வ புண்ணிய ஸ்தானமும் ஒன்பதாமிடமெனும் பாக்கிய ஸ்தானமுமே தீர்வு செய்கிறது.

குழந்தை பாக்கியத்தை தடை செய்வதற்கான கிரக அமைப்புகளை காணலாம்.

லக்னத்திற்கு ஐந்தாம் அதிபதி நீசம், வக்ரம், அஸ்தமனம் அடைதல். ஐந்தாம் அதிபதிக்கு லக்ன ரீதியான பாதகாதிபதி சம்பந்தம் இருப்பது. ஐந்தாம் அதிபதி 6, 8, 12-ல் மறைதல் ஐந்தாம் அதிபதி நின்ற வீட்டின் அதிபதி நீசம் பெறுவது அல்லது 6,8,1-2ல் மறைவது.

ஐந்தாம் அதிபதிக்கு சனி, ராகு/கேதுவின் சம்பந்தம் இருப்பது. ஐந்தாம் இடத்திற்கு செவ்வாய், சனி, புதன், ராகு / கேது போன்ற கிரகங்கள் சம்பந்தம். ஐந்தாம் இடத்தில் தனித்த குரு நிற்பது. புத்திரகாரகன் குருவிற்கு செவ்வாய், புதன், சனி, ராகு/கேதுவின் சம்பந்தம் குரு லக்ன பாதகாதிபதி சம்பந்தம் பெறுவது குரு வக்ரம், அஸ்தங்கம் அடைதல்.

குரு மற்றும் ஐந்தாம் அதிபதிக்கு திதி சூன்ய பாதிப்பு. செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்தை செவ்வாய் தோஷம் இல்லாத ஜாதகத்துடன் இணைப்பது. ராகு/கேது தோஷம் உள்ள ஜாதகத்தை ராகு/கேது தோஷம் இல்லாத ஜாதகத்துடன் இணைப்பது. ஆண், பெண் ராசி சஷ்டாஷ்டகமாக அமைவது குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பாதிப்பது போன்ற பல்வேறு ஜோதிட ரீதியான காரணங்களால் குழந்தை பிறப்பு தடைபடுகிறது. பலரிடம் குரு நீசம் பெற்றால் குழந்தை பிறக்காது என்ற தவறான கருத்து இருந்து வருகிறது. குரு நீசம் பெற்றவர்கள் பலர் குழந்தைகளை பெற்று மகிழ்சியாக வாழ்ந்து வருகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

நவகிரகங்களில் முதன்மை சுப கிரகமான குரு பகவானுக்கு மனித வாழ்வில் பல்வேறு உன்னதமான சுபபலன்களை உண்டாக்கக்கூடிய ஆற்றல் உண்டு. குருவின் பார்வைக்கு பல தோஷங்களை போக்கும் சக்தி உள்ளது. சுய ஜாதகத்தில் குரு பலமாய் அமைந்திருந்தால் மட்டுமே வாழ்க்கை சுபிட்சமாகவும் மகிழ்ச்சி கரமானதாகவும் இருக்கும். தனக்காரகனாகவும், புத்திரகாரகனாகவும் விளங்கும் குரு பகவான் இறை வழிபாட்டிற்கும் ஞானத்திற்கும் காரகனாகிறார்.

அது மட்டுமின்றி ஒழுக்கம், மற்றவர்களுக்கு உதவி செய்யும் மன நிலை, சுகவாழ்வு, புத்திரர்கள், பேரன்கள், பெருந்தன்மையான குணம், தூய்மை, புனிதமான நீர், இறை வழிபாடு, அறிவு, செல்வம், செல்வாக்கு, இறைவழிபாடு, மதகுருமார்கள், பெரியோர்கள் கல்வித்துறை, குதிரை, யானை, அழகிய வீடு, பிரம்மா, ஞானம், யோகப்பியாசம், ஆசிரியர் தொழில், அஷ்டமா சித்திகளை அடைதல், புரோகிதம், மதிநுட்பம், பெரியோர்களின் ஆசி, அரசாங்க அனுகூலங்கள், பாராட்டுகள், விருதுகள் ஏற்படுதல், சாந்தமான கபாவம்,, வாக்கு நிறைவேற்றுதல், ரிஷி உபதேசம் பெற்றல் ஆகியவற்றிற் கெல்லாம் குரு காரகனாவார்.

நவகிரகங்களில் ஒரு மனிதருக்கு புத்திரப் பேறு அருளும் சக்தி வாய்ந்த கிரகமாக குருபகவான் இருக்கிறார். அதாவது குழந்தை பிறப்பிற்கு காரக கிரகம் குருபகவான்.


ஒரு சிலருக்கு ஜாதகத்தில் குரு பகவானால் புத்திர தோஷம் ஏற்பட்டு குழந்தை பிறக்காத நிலை உண்டாகிறது. குரு என்றால் குழந்தை. குருவிற்கு ராகு, கேது, சனி மற்றும் அஷ்ட மாதிபதி, பாதகாதிபதி சம்பந்தம் இருந்தால் திருமணத்திற்கு பின் குழந்தையின்மை ஏற்படுகிறது.

இதனால் சிலருக்கு மணமுறிவும் ஏற்படுகிறது. குழந்தை நல்ல நிலையில் உருவாக காரணமாக குரு இருப்பதால் சுய ஜாதகத்தில் குரு பலவீனமாக இருந்தால் குழந்தை பிறக்காமல் இருத்தல் அல்லது பிறந்த குழந்தையை வளர்க்க முடியாமை, கால தாமத புத்திர பாக்கியம், குழந்தை பாக்கிய மின்மை, குழந்தைகளால் விரயம், பொருளாதார இழப்பு, குழந்தைகளால் மன வேதனைப்படும் நிகழ்வுகள் ஏற்படுகிறது. சிலருக்கு செயற்கை கருத்தரிப்பு முறையில் வாரிசு உருவாகும். சிலருக்கு அடிக்கடி கரு உருவாகி கலையும். சென்ற ஜென்மத்தில் கருக்கலைப்பு, பண ஏமாற்றம் மற்றும் குரு துரோகம், பசுவதை செய்தவர்களுக்கு இது போன்ற வினைப் பதிவு ஏற்படுகிறது.

ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகம் கணிக்கும் போதும் பலன்கள் சொல்லும்போதும் 'பதவி பூர்வ புண்ணியானாம்' என்ற முக்கியமான சொற்றொடரைச் சொல்வார்கள்.

அதாவது நம்முடைய இந்தப் பிறவிப் பயன், யோகம், அதிர்ஷ்டம், பாக்யம், அம்சம் எல்லாம் நம் பூர்வ ஜென்ம புண்யத்தால் ஏற்பட்ட கர்ம வினைப்படியே அமையும் என்பதாகும். பூர்வ புண்ணியம் 5, 9-ம் அதிபதியின் தசா புத்தியோடு சம்பந்தம் பெற்று கோச்சார குரு கீரீன் சிக்னல் கொடுக்கும் காலமே குழந்தை பேறு கிடைக்கும் என்பதால் செயற்கை முறையை நாடுபவர்கள் பொருள் விரயம் , உடல் வேதனை, மன வேதனையை தவிர்க்க முறையான ஜோதிட ஆலோசனை பெறுவது உத்தமம்.

பொதுவாக குழந்தையின்மையால் மன வேதனை அனுபவிப்பவர்கள் குல தெய்வ வழிபாட்டையும், பித்ருக்கள் பூஜையையும் முறைப்படுத்த வேண்டும். அத்துடன் லக்னரீதியான ஐந்தாம் அதிபதிக்கு பரிகாரம் செய்தாலே பாதிப்பு நீங்கும். அதன்படி ஐந்தாம் அதிபதி அல்லது ஐந்தில் கிரகத்தி ற்கான பரிகாரங்கள் கீழே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

5-ம் இடத்துடன் சூரியன் சம்பந்தம் பெற்றால் ஞாயிற்றுக்கிழமை சிவனுக்கு சூரிய உதயத்தில் பொங்கல் வைத்து சிவப்பு வஸ்திரம் சாற்றி ஒற்றைப்படை எண்ணிக்கையில் காணிக்கை செலுத்த (10,100,1000) வேண்டும். 10 பேருக்கு சிவப்பு நிற ஆடையும் கோதுமையும் தானம் தர நன்மை உண்டாகும்.

ஐ.ஆனந்தி

 5-ம் இடத்திற்கு சந்திரன் சம்பந்தம் பெற்றால் திங்கட்கிழமை அம்பாளுக்கு அபிசேக ஆராதனை செய்வதுடன் பச்சரிசி மாவு வெல்லம் கலந்த பிரசாதம் படைக்க வேண்டும். (20, 200, 2000)இரட்டைப் படை எண்ணிக்கையில் காணிக்கை செலுத்த வேண்டும். 2 நபர்களுக்கு வெண்மை நிற உடையும் நெல்லும் தானம் தர வேண்டும்.

5-ம் இடத்திற்கு செவ்வாய் சம்பந்தம் இருந்தால் செவ்வாய் கிழமை முருகனுக்கு சிவப்பு நிற வஸ்திரம், புஷ்பம் அணிவித்து துவரம் பருப்பு சாதம் படைத்து 9 என்ற எண்ணிக்கையில் காணிக்கை செலுத்தவும். 9 நபர்களுக்கு சிவப்பு நிற துணியும் சிவப்பு துவரையும் தானம் தர மாற்றம் உண்டாகும்.

5-ம் இடத்திற்கு புதன் சம்பந்தம் பெற்றால் புதன்கிழமை நரசிம்மருக்கு பச்சை வஸ்திரம், துளசி மாலை சாற்றி வெண் பொங்கல் படைக்க வேண்டும். 5 எண்ணிக்கையில் காணிக்கை செலுத்த வேண்டும். 5 பேருக்கு பச்சை நிற ஆடையுடன் பாசிப்பயிறு தானம் தருவது சிறப்பு.

5-ம் இடத்திற்கு குரு சம்பந்தம் பெற்றால் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி கொண்டைக்கடலை மாலை அணிவித்து 3 எண்ணிக்கையில் காணிக்கை செலுத்த வேண்டும். 3 நபர்களுக்கு மஞ்சள் நிற ஆடையும் கொண்டைக் கடலையும் தானம் வழங்கவும்.

5-ம் இடத்திற்கு சுக்கிரன் சம்பந்தம் பெற்றால் வெள்ளிக்கிழமை சக்ரத்தாழ்வாருக்கு வெண்பட்டு அணிவித்து கல்கண்டு அல்லது வெள்ளை மொச்சை பிரசாதம் படைப்பதுடன் ஆறு எண்ணிக்கையில் காணிக்கை செலுத்த வேண்டும். ஆறு நபர்களுக்கு வெள்ளை நிற ஆடையும், இனிப்பு உணவும் தானம் தர நல்லது நடக்கும்.

5-ம் இடத்திற்கு சனி சம்பந்தம் இருந்தால் சனிக்கிழமை சனி பகவானுக்கு கறுப்பு வஸ்திரம் சாற்றி எள்ளுருண்டை நிவேதனம் செய்து 8 எண்ணிக்கையில் காணிக்கை செலுத்த வேண்டும். 8 ஊனமுற்றோர்களுக்கு உணவு, உடை தானம் வழங்க வேண்டும்.

5-ம் இடத்திற்கு ராகு சம்பந்தம் இருந்தால் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் புற்றுக்கோவிலில் அல்லது வளரும் புற்றில் அரை மணி நேரம் அமர்ந்து ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்ய வேண்டும். அல்லது துர்க்கை, காளிக்கு பால் அபிசேகம் செய்து வழிபடலாம். 4 எண்களில் காணிக்கை செலுத்தலாம். 4 பேருக்கு நீல நிற ஆடையும் கருப்பு உளுந்தம் பருப்பு தானம் தரலாம்.

5-ம் இடத்திற்கு கேது சம்பந்தம் இருந்தால் திங்கட்கிழமை விநாயகருக்கு பால் அபிசேகம் செய்து அருகம்புல் மாலை அணிவிக்கவும். 7 எண்களில் காணிக்கை செலுத்த வேண்டும். 7 பேருக்கு பல வண்ண ஆடையும் கொள்ளும் தானம் தர வேண்டும்.

மனிதர்களின் வாழ்க்கையில் தடைபட்ட அனைத்து இன்பங்களையும் வழங்கும் அதிகாரம் கோட்சார குருபகவானுக்கு உள்ளது. அந்த வகையில் மே1, 2024 அன்று ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும் குருபகவான் ரிஷபம், கடகம், கன்னி, மகரம், மீனம் ராசியினருக்கு தனது சுபத்துவம் நிறைந்த பார்வையால் சுய ஜாதக ரீதியான குழந்தையின்மை குறைபாடுகளை நீக்கி புத்திர பிராப்தத்தை வழங்க உள்ளார்.

செல்: 98652 20406

Tags:    

Similar News