சிறப்புக் கட்டுரைகள்

குருப்பெயர்ச்சியும் கோடீஸ்வர யோகமும்

Published On 2024-04-16 11:45 GMT   |   Update On 2024-04-16 11:45 GMT
  • ஒரு ஜாதகத்தின் யோகத்தை நிர்ணயம் செய்வதில் கோட்சார கிரகங்களின் பங்களிப்பு அளப்பரியது.
  • ஜனன ஜாதகத்தில் இல்லாத பலனை கோட்சாரம் நடத்தி தராது.

மனிதர்களின் பாவங்களைக் களைந்து பாக்கிய பலன்களை வழங்கும் பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி குரோதி வருடம் சித்திரை மாதம் 18-ந் தேதி 1.5.2024 புதன்கிழமை பகல் 1 மணிக்கு மேஷ ராசி கிருத்திகை நட்சத்திரம் 1-ம் பாதத்திலிருந்து ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் 2ம் பாதத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

ஒருவருடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு காரணமான வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், பணவருமானம் போன்றவற்றை வழங்குபவர் குருபகவான். தான் நின்ற இடத்தின் மூலம் பார்க்கும் இடங்களை பலம் செய்வார். அந்த வகையில் ரிஷப ராசியில் பயணம் செய்யப்போகும் குரு பகவான் கன்னி ராசியில் அமரும் கேது பகவானை பார்க்கிறார். குரு கேது இணைவால் சிலர் கோடீஸ்வர யோகத்தை பெறப் போகிறார்கள்.

ஒரு ஜாதகத்தின் யோகத்தை நிர்ணயம் செய்வதில் கோட்சார கிரகங்களின் பங்களிப்பு அளப்பரியது. கிரகங்களில் வருட கிரகங்களான குரு, ராகு/கேது, சனி இவற்றின் நகரும் தன்மை மெதுவாக இருப்பதால் அவற்றால் ஏற்படும் சுப/அசுப பலன்கள் வருடக் கணக்கில் ஜாதகரை பாதிக்கும். பூமியில் பிறக்கும் அனைவருக்கும், அவரவர் பூர்வ ஜென்ம வினைகளே கிரகங்களாக மாறி ஜாதக கட்டத்தில் அமர்ந்து வினைகளுக்கு ஏற்ப தசைகளை அமைத்து கோட்சார கிரக சஞ்சாரம் மூலம் வினைகளுக்கு ஏற்றபடி வாழ்வு அமைகிறது.

ஜனன ஜாதகத்தில் ஒரு சம்பவம் நடப்பதற்கான யோக அமைப்பு இருந்தால் கோட்சார கிரகங்கள் அதன் தசா புக்தி காலத்தில் சம்பவத்தை நடத்தி வைக்கும். ஜனன ஜாதகத்தில் இல்லாத பலனை கோட்சாரம் நடத்தி தராது. ஒருவரின் ஆசை மற்றும் விருப்பம் எதுவாக இருந்தாலும் அதை அடையும் பாக்கிய பலன் ஜனன கால ஜாதகத்தில் இருந்தால் மட்டுமே கோச்சார கிரகங்களும் தசா புத்தியும் உதவும். ஒரு தனிநபரின் ஜாதகத்தினை கொண்டு நிர்ணயம் செய்யப்படும் கோட்சார பலனே துல்லியமாக இருக்கும் தசா புக்திகளுடன், சம்பந்தம் பெறும் கோச்சாரம் சம்பவத்தை 100 சதவீதம் கச்சிதமாக நடத்தி தரும்.

பொருளாதாரம் தொடர்பாக ஜோதிடரை சந்திப்பவர்கள் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? கடைசி வரைக்கும் இதே கஷ்டம்தானா? எனக்கு கோடீஸ்வர யோகம் உள்ளதா நான் பணக்காரன் ஆவேனா? என்ற கேள்வியை நிச்சயம் கேட்பார்கள். ஒருவர் அனுபவிக்கும் கோடீஸ்வர யோகத்தை இரண்டாக வகைப்படுத்தலாம்.

கோடீஸ்வர குடும்பத்தில் வாரிசாகப் பிறந்து, கடைசி வரை கோடீஸ்வரராக வாழும் யோகம் வெகு சிலருக்கே அமையும். நான்காம் அதிபதி, செவ்வாய், ஒன்பது, பத்தாம் அதிபதிகள் பலம் பெற்ற ஜாதகர் கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்திருப்பார்கள். முன்னோர்கள் செல்வமும் செல்வாக்கும் மிக்கவர்களாக இருப்பார்கள்.


வாழ்க்கையில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவர் சாதாரண அடிமட்டத்தில் அடிமை தொழில் செய்து கொண்டு ஜீவனத்துக்கு கூட கஷ்டம் அனுபவிப்பவர்கள், சுகபோக வாழ்க்கை இந்த ஜென்மத்தில் கிடைக்காது என்று நினைக்கும் பலர் திடீர் யோகத்தின் மூலம் சமூகத்தில் உச்ச நிலையை அடைகின்றனர். தகுதிக்கு மீறிய வாழ்வு கிடைத்து அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் யோகத்தைபெற்று விடுகிறார்கள். எதிர்பாராத ராஜயோகத்தால் சிலர் கோடீஸ்வரராகி விடுகிறார்கள். அடிமட்ட நிலையில் இருக்கும் ஒருவர் 9, 11ம் இடங்களில் சூரியன் பலம் பெற்றால் தந்தையாலும், சந்திரன் பலம் பெற்றால் தாயாலும், செவ்வாய் பலம் பெற்றால் கணவர், உடன்பிறப்பாலும், புதன் பலம் பெற்றால் மாமன் நண்பர், சொந்த அறிவாலும், குரு பலம் பெற்றால் முன்னோர்கள், அரசியல் வாதிகள், புத்திரர்களாலும், சுக்கிரன் பலம் பெற்றால் மனைவியாலும், சனி, வேலையாட்கள் மூலமும், ராகு, கேது பலம் பெற்றால் நேர்மையற்ற வழியிலும் செல்வம் சேரும். ஜோதிடரீதியாக சுக்ரன் தரும் செல்வம் ஆயிரக்கணக்கிலும், சனி தரும் செல்வம் லட்சக்கணக்கிலும், குரு தரும் யோகம் கோடிக் கணக்கிலும், ராகு தரும் பணம் கோடியின் மடங்குகளிலும் இருக்கும். கோடீஸ்வர யோகம் தரும் குரு+ கேது சேர்க்கை பெரும்பான்மையான கோடீஸ்வரர் ஜாதகத்தில் குரு + கேது சம்பந்தம் இருக்கும். ஒருவரின் ஜாதகத்தில் குரு கேது சேர்ந்திருந்தால் அவருக்கு கோடீஸ்வர யோகம் வரும். குரு கேது இடையே பார்வை ஏற்பட்டாலும் கோடீஸ்வர யோகம் தேடி வரும். நவகிரகங்களில் குருவிற்கும், கேதுவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கேது ஞான மோட்சகாரகன். குரு ஞானம், அறிவு, வேதம், தவம், மந்திரசித்தி போன்றவற்றிற்கு காரணமானவர். பிறந்த ஜாதகத்தில் குரு +கேது சேர்க்கை, பார்வை, சாரபரி வர்த்தனை, ஒருவருக்கொருவர் கேந்திரம், கோணம் என சம்பந்தப்பட்டு இருந்தால் உயர்ந்த பதவி, அந்தஸ்து, அதிகாரம் கிடைக்கும். காமம், குரோதம், மோகம் இவை அனைத்தையும் கடந்து இறுதியாக மோட்சத்தை அடைவதற்கு உதவும் கிரகம் கேதுபகவான். குரு மற்றும் கேதுவிற்கு சம்பந்தம் ஏற்படும் பொழுது இந்த யோகம் ஏற்படுகின்றது.

குரு ஒரு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆன உடன் அந்த வீட்டின் காரகத்துவங்கள் தூண்டப்படுகின்றன. குரு பகவான் பார்வையால் அந்த இடம் சுபத்துவம் அடையும். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்கின்றனர். குருவின் 5-ம் பார்வை கன்னி ராசியில் உள்ள கேதுவின் மேல் பதிகிறது. 7-ம் பார்வை விருச்சிக ராசியிலும் 9-ம் பார்வை மகர ராசியிலும் பதிகிறது.

குருவின் 5-ம் பார்வை கேதுவில் பதிவதால் சில ராசியினர் கோடீஸ்வர யோகம் அனுபவிக்கப் போகிறார்கள். குறிப்பாக ரிஷபம், கன்னி, விருச்சிகம், மகரம் ராசியினருக்கு பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது.

ரிஷப ராசிக்கு அஷ்டமாதிபதி மற்றும் லாப அதிபதியான குரு மே 1, 2024 முதல் ஜென்ம ராசிக்குள் நுழையப் போகிறார். 8,11 எனும் பணபர ஸ்தானத்திற்கு அதிபதியான குருபகவான் ராசியில் நின்று தனது 5-ம் பார்வையால் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ள கேதுவை பார்க்கிறார். இது குரு+ கேது சம்பந்தம் இருப்பதால் கோடீஸ்வர யோகமாகும். பொருளாதார முன்னேற்றம், வாழ்க்கை முன்னேற்றம் ஏற்படும். வெற்றியை தக்க வைக்க கடுமையான முயற்சியையும் போராட்டத்தையும் சந்தித்த காலம் முடிந்து குறைந்த உழைப்பில் அதிக வருமானம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தை துரத்தி மனம் நொந்த காலம் முடிந்துவிட்டது. இது அதிர்ஷ்டம் உங்களைத் துரத்தும் காலமாக அமையப் போகிறது.

அஷ்டமாதிபதி ராசியில் சஞ்சரிப்பது விபரீத ராஜ யோகமாகும். பூர்வீகச் சொத்து வழக்கின் தீர்ப்பு சாதகமாகும். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் நடத்தி மகிழ்வீர்கள். மருமகன், மருமகளால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும். புத்திர பிராப்தம் சித்திக்கும். பெற்றோர்களின் நல்லாசி கிடைக்கும். குலதெய்வ அனு கிரகமும், முன்னோர்களின் நல்லாசியும் மகிழ்ச்சியான நிலைக்கு அழைத்துச் செல்லும். சிந்தனை, செயல்பாட்டில் நேர்மறை எண்ணங்கள் மிகுதியாகும்.

ஐ.ஆனந்தி

கன்னி ராசிக்கு 4, 7-ம் அதிபதியான குருபகவான் மே 1, முதல் பாக்கிய ஸ்தானமான 9-ம் இடத்திற்கு சென்று ராசியில் உள்ள கேதுவை பார்க்கிறார். பாக்கிய ஸ்தானத்திற்கு குருபகவான் செல்வது வளர்ச்சியைக் கொடுக்கக் கூடிய கோடீஸ்வர யோகம். ஆன்ம பலம் பெருகும். தேவையில்லாத எண்ணங்கள் மன சஞ்சலம், அமைதியற்ற நிலை விலகும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவீர்கள் உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். வாழ்க்கையில் மாற்றம் தரக் கூடிய நல்ல இடப்பெயர்ச்சி உண்டாகும். தொழில் முன்னேற்றம், நல்ல உத்தியோகம், வீடு, வாகனம், திருமணம், புத்திரப்பேறு, பொருளாதார முன்னேற்றம் என உங்கள் வாழ்க்கை முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். போட்டி பொறாமை குறையும். கடன் பிரச்சனைகள் தீரும். அரசியல் வெற்றி, அதிகாரம், அரசு மரியாதை ஆகியவை கிடைக்கும். பிறருக்கு கட்டளையிடும் பெரிய பதவிகள் தேடி வரும். பெயர், புகழ், பதவி கிடைக்கும். செல்வாக்கு உயரும். புதியதாக காதல் பூக்கும். குலதெய்வம் மற்றும் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.

விருச்சிக ராசிக்கு 2,5-ம் அதிபதியான குரு ராசியை சம சப்தமாக பார்க்கிறார். கேதுவின் 3-ம் பார்வை விருச்சிகத்தின் மேல் பதிகிறது.

ராசியில் குரு, கேதுவின் பார்வை பதிகிறது. இது கோடீஸ்வர யோகத்தை வழங்கும் அமைப்பாகும். விருச்சிகத்திற்கு பரிபூரண யோகத்தை வழங்க கடமைபட்ட குரு சமசப்தம ஸ்தானம் சென்று ராசியை பார்ப்பது முதல் தரமான கோடீஸ்வர யோகம் .கடுமையாக உழைத்த உழைப்பு இப்பொழுது பணமாக காய்க்கபபோகிறது. பல விதமான நற்பலன்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இழந்த சந்தோஷம் மீண்டும் துளிர்விடும். புதிய தொழில் முயற்சிக்கு தேவையான நிதியுதவி கிடைக்கும். எடுக்கப்பட்ட முயற்சிக்கான முழு பலனும் அங்கீகாரமும், வெற்றியும் உண்டு. அரசியல் வாதிகளுக்கு பொதுஜன ஆதரவு அதிகரிக்கும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சீதனம் மகிழ்சியைத் தரும். பேச்சை மூலதனமாகக் கொண்ட வர்களின் தனித் திறமை மிளிரும். திருமணத் தடை நீங்கும். அடமானச் சொத்துக்கள் மீண்டு வரும். அரசு வேலைக்கு கிடைக்கும். வீடு, வாகன யோகம் என சகல ஐஸ்வர்யங்களும் உண்டு.

மகர ராசிக்கு 3,12-ம் அதிபதியான குருபகவான் மே 1, முதல் ராசிக்கு 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானம் சென்று 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் உள்ள கேதுவை பார்க்கிறார். இது கோடீஸ்வர யோகத்தை வலுப்டுத்தும் கிரக அமைப்பாகும். இதுவரை உங்களுக்கு எது கிடைக்கவில்லை என்று ஏங்கிக்கொண்டு இருந்தீர்களோ அவையெல்லாம் உங்களுக்கு கிடைக்கும். நல்ல அறிவாற்றல், புத்திக்கூர்மை. கல்வி மேன்மை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும்.லாபம் அதிகரிக்கும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகள் நடக்கும். சிலருக்கு பணிக்காலம் முடிந்த பிறகும் பதவி நீட்டிப்பு கிடைக்கும். அரசியல் ஈடுபாடும் பிரபலமாகும் யோகமும் உண்டாகும். பொருள் கடனும், பிறவிக் கடனும் தீர்க்க உகந்த நேரம். மகான்களின் தரிசனம், குலதெய்வம், முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும் கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்தின் தீர்ப்பு சாதகமாகும். உடல் உபாதைகள் அகலும். இளைய மனைவியின் மூலம் சொத்து கிடைக்கும். பாலிசி முதிர்வு தொகை, எதிர்பாராத அதிர்ஷ்ட பண வரவு உண்டு. ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.

முற்றிலும் எதிர்பாராத ஒரு நிலையில், சுலபமான வகையில் அல்லது குறுக்கு வழியில் ஒருவருக்கு மிகப்பெரிய சமூக, பொருளாதார அந்தஸ்து கிடைப்பதே கோடீஸ்வர யோகமாகும். சுய ஜாதக ரீதியான தசா புத்திகள் ஒத்துழைத்தால் ரிஷபம், கன்னி, விருச்சிகம், மகர ராசியினர் கோடீஸ்வரானாகுவது உறுதி. திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு உண்டாகும்.

செல்: 98652 20406

Tags:    

Similar News