சிறப்புக் கட்டுரைகள்

நம் வாழ்வை உயர்த்தும் குரு

Published On 2024-04-14 11:18 GMT   |   Update On 2024-04-14 11:18 GMT
  • குரு என்கின்ற வார்த்தைக்கான விளக்கத்தை நாம் நிறைய படித்திருக்கிறோம்.
  • ஆன்ம பாடம் படிக்க ஆரம்பித்தவர் ஆத்ம வித்யா எனும் ஞானி.

அன்பார்ந்த வாசகர்களே, கடந்த பகுதியில் குருவை எப்படி பிடித்து கொண்டு கர்ம வினை பதிவுகளில் இருந்து எப்படி விடுபடுவது என்பதை பற்றிய நிலைகளை பார்த்தோம். குரு என்கின்ற வார்த்தைக்கான விளக்கத்தை நாம் நிறைய படித்திருக்கிறோம்.

"குரு பார்க்க கோடி நன்மை", "குருவின் அருள் இல்லையேல் திருவருள் இல்லை" என்று படித்திருக்கிறோம்.

பொதுவாக அத்வைத சாராம்ச தத்துவத்திலே, ஒரு குழந்தை வளர்ந்து அது கல்வி கற்க செல்லும் போது முதலில் அந்த குழந்தைக்கு நாம் சொல்லிக் கொடுக்கும் ஸ்லோகம்,

குரு பிரம்மா குரு விஷ்ணு

குரு தேவோ மஹேச்வரஹா

குரு சாக்ஷாத் பரப்ரம்மா

தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ...!

அதாவது குருவே பிரம்மம், குருவே விஷ்ணு, குருவே ஈச்வரன், குருவே பரம் பொருள், எல்லாமே பிரம்மமே, குரு தான் அவர், எனவே அவரை நாம் வணங்க வேண்டும் என்று இந்த ஸ்லோகம் சொல்கிறது.

எப்படி நாம் குருவை வணங்குவது? எப்படி நாம் குருவை அறிவது? என்று பார்க்கும் போது, தமிழிலே மிக அழகாக திருமூலர் அவர்கள் சொன்ன பாடலிலே!

"தெளிவு குருவின் திருமேனி காணல்

தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே"

என மிகவும் அழகாக அதே நான்கு வரிகளில், தமிழில் அற்புதமாக விளக்கம் தருகிறார்.

அதில் குருவை வணங்கனும் என்றால், எந்த ஒரு செயல் செய்தாலும், குருவை வணங்கி, அவரே பரம்பொருள், அவரே நமக்குள் இருந்து எல்லாம் செய்கிறார் என்ற நினைப்புடன் செயல்களை நாம் செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது, அவர் உருவத்தை நினைத்து கொண்டே இருக்க வேண்டும். இதனால் அவருக்கு என்ன எல்லாம் கிடைத்ததோ அதில் ஒரு துளியாவது நமக்கு கிடைக்கும். குருவின் ஆத்மா நம்மோடு இணையும் அற்புதங்கள் நடக்கும்.

குருவின் திருநாமம் செப்பல் என்பது, குரு சொல்லி கொடுத்த தாரக மந்திரங்களை ஜபித்து கொண்டே இருக்க வேண்டும். குருவின் திருவார்த்தை கேட்டல் என்பது, குரு கூறிய தத்துவங்கள், திரும்ப திரும்ப சலிப்பு இல்லாமல் கேட்டுகொண்டே இருக்க வேண்டும். குரு உரு சிந்தித்தல் என்பது குரு சொன்ன கொள்கையின் படி வாழ்ந்து காட்டுவது ஆகும்.

குரு என்கின்ற வார்த்தை பற்றி நாம் விளக்கும் போது, "கு" என்றால் இருள் என்று பொருள். "ரு" என்றால் போக்குபவர் என்று பொருள். அதாவது அஞ்ஞானம் என்னும் இருளை போக்குபவர். மேலும் கூற வேண்டும் என்றால் "குரு" என்னும் சொல், தலைமை, மேன்மை, சிறப்பு, ஒளி என்னும் பல பொருள்களை தரும்.

நமக்கு என்ன தேவை? நம்முடைய திறன் என்ன? நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை நம் அருகிலிருந்து கவனித்து, நம் வழியாகவே தீர்வு காண உதவுபவர் தான் குரு என்றும் ஒரு விளக்கம் இருக்கிறது.

ஒரு குருவுக்கும், மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், மற்றவர்கள் எல்லோரும் நம்மை வெளியில் பார்க்க சொல்கிறார்கள். ஏனென்றால் உலக விஷயங்களில் நாம் முன்னேறுவதற்காக, ஆனால் குரு நம்மை நமக்கு உள்ளேயே பார்க்க சொல்கிறார். நமக்குள் நம்மை பார்த்தபின் நாம் யார் என்பதை நம்மை அறிய செய்கிறார். மற்றவர்கள் எல்லாம் நம்மிடம் எதை பார்ப்பது இல்லையோ, அதை குரு பார்க்கிறார்.

அதாவது நாம் மற்றவர்களுக்கு உதவுவதில் எந்த அளவு நம் மனதை தயார் படுத்தி இருக்கிறோம். இறை சக்தியை எந்த அளவு உணர்ந்து இருக்கிறோம், இறை சக்திக்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம். இவற்றை எல்லாம் ஒரு குரு ஆனவர் பார்க்கிறார். அந்த தனிப்பட்ட ஒரு பார்வை உலகில் குருவுக்கு மட்டுமே உண்டு.

மனவளக்கலை பேராசிரியர்கள் கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்


இதனால் தான் குருவை, மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் தெய்வத்திற்கு முந்தைய நிலையில் வைத்திருக்கிறார்கள். இதில் மாதாவும், பிதாவும் நம்மை உலகியலுக்குள் கட்டி போடுவார்கள். குருவும், தெய்வமும் நம்மை கட்டுக்களிலிருந்து பிரிப்பார்கள்.

இந்திய பண்பாட்டின்படி, வாழும் காலத்திலே குருவை அடையாத ஒருவரை அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று குறிப்பிடப்படுகிறது.

குருவை அடைய நான் முயன்று கொண்டே இருப்பேன் என்கின்ற எண்ணம் வேண்டும். இப்படி பலபேர் மூலமாக ஒரு சீடர் குருவை அனுகும் போது, திறந்த உள்ளம் இருக்க வேண்டும். அவர் சொன்னதை கேட்க வேண்டும். கேட்டு புரிந்துவிட்டால், கண்டிப்பாக வாழ்க்கையில் நடைமுறை படுத்த வேண்டும். நமக்கு தெரியவில்லை என்றால் கூச்சம் இல்லாமல் கேட்க வேண்டும். அவருக்கு தெரிகிறதா என்று பரிசோதனை செய்ய கூடாது. நாம் ஒரு கருவி தான் என்கின்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டும். இப்படி இருந்தால் தான் குரு சொன்ன உபதேசம் நமக்கு பயன்படும்.

முதலில் குரு என்பவர் ஒரு தனி மனிதர், ஒரு நபர் என்று தான் நாம்அனைவரும் நினைத்து கொண்டு இருக்கிறோம். நாம் சற்று ஆழமாக சிந்தித்தால் குரு என்பது ஒரு உன்னத நிலை மேலும் அது ஒரு தன்மை என்பது நமக்கு விளங்கும், அது ஒருவர் மூலமாக உங்களிடத்தில் சில மாறுதல் அமையும், மலர்ச்சியையும் ஏற்படுத்தி விட்டு போகும். அது ஒரு அற்புத நிகழ்வு ஆகும்.

நாம் பார்க்கும் போது கண்கள் மூலமாக அவர் ஒரு உருமாக நமக்கு காட்சி அளிக்கிறார். ஆனால் எல்லாம் வல்ல பரம்பொருளே அவர் மூலமாக நமக்கு கண் திறப்பை நடத்தி இருக்கிறது என்பது தான் உண்மையிலும் உண்மை. எப்படி ஒரு தோட்டத்தில் மலர்கள், மலர்வதற்க்கு தென்றல் காரணமாக இருக்கிறது.. மகரந்த சேர்க்கை நடப்பதற்க்கு வண்டு காரணமாக இருக்கிறது.. அதுபோன்று ஒரு ஜீவாத்மா, பரமாத்மாவோடு பொருந்துவதற்கு குரு தன்மை காரணமாக அமைகிறது.

எனவே குரு என்பவர், யாரும் பார்க்க முடியாத விஷயங்களை கூட பார்க்க கூடிய ஞானக்கண் கொண்டு பல கோணங்களில் பார்க்க கூடியவர்.

ஒரு மனிதரை, அவரது இயல்பில் இருந்தும், பழக்க வழக்கத்திலிருந்தும் அரை அங்குடம் கூட மற்றபவரால் நகர்த்த முடியாது. ஒரு மனிதருடைய நீண்ட கால பழக்க வழக்கம், அவருடைய குணாதியங்கள் ஒருவரால் மாற்றியமைக்க முடியும் என்றால் அது குரு ஒருவரால் மட்டுமே முடியும்.

எவர் ஒருவர், தான் என்கிற அகங்காரத்தை இழக்க தயாராக இருக்கிறாறோ, அந்த கணமே அவர்களுக்கு நல்ல குருவை இறைவன் அடையாளம் காட்டுவார். எனவே குரு என்பவர், நாம் இருட்டில் தவிக்கும் போது, மின்னல் மாதிரி தோன்றி பாதையை காண்பிப்பார். ஆனால் கர்ம வினை பதிவுகளின் காரணமாக, மாயையில் சிக்கி, குரு காட்டிய வழியை மறந்து விட்டு பிறகு தவிக்கிறோம்.

இது எப்படி இருக்கிறது என்றால், ஒரு குரு தன் ஆசிரமத்தில் ஒரு விழாவிற்காக லட்டு தயார் செய்ய சொன்னார். இரவு இந்த லட்டுகளை எறும்புகளிடம் இருந்து காப்பாற்ற அந்த லட்டு பாத்திரத்தை சுற்றி, சர்க்கரையால் வட்டம் போட சொன்னார். ஏன் என்று உடனே சிஷ்யர்கள் கேள்வி கேட்டார்கள். உடனே குரு, வருகின்ற எறும்பு சர்க்கரையை மட்டுமே உண்ணும். இதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதாவது இறைவன் என்பவர் லட்டு போல நடுவில் இருக்கிறார். அதை அடைவதை விட்டு விட்டு, எறும்புகளாகிய நாம் அனைவரும் எப்படி எறும்பு லட்டை விட்டு விட்டு, சர்க்கரையை மட்டும் எடுப்பது போல, மாயையில் சிக்கி இறைவனை அடைவதில் நமக்கு நாமே தடையை ஏற்படுத்தி கொள்கிறோம்.

இதிலிருந்து நம்மை விடுவிக்க தான் ஒரு குரு அனைவருக்கும் அவசியம் ஆகிறார், அந்த குரு ஆனவர் அஷ்டலட்சணம் பொருந்தியவராக இருக்க வேண்டும்.

1. ஆன்ம பாடம் படிக்க ஆரம்பித்தவர் ஆத்ம வித்யா எனும் ஞானி.

2. ஆன்ம பாடங்களில் லயம் பெற்று, பிரம்மத்தை உணரும் தகுதி உடைய பிரம்ம வித்யா எனும் மகான்.

3. பிரம்மத்தை உணரும் தகுதி பெற்று, பிரம்மத்தோடு கூடிய ஐக்கிய நிலை மற்றும் பிறருக்கு கற்பிக்கும் தகுதி பெறும் நிலை உபாத்தியாயா எனும் ரிஷி.

4. தன்னை பிரம்மமாவே உணர்ந்து, அதே பிரம்ம நிலையில் தன்னையே நிலை படுத்தும் பிரம்ம உபாத்தியாயா எனும் முனிவர்.

5. இரண்டு அற்ற பிரம்ம நிலையாகிய, வேறுபாடு அற்ற நிலை ஆச்சார்யா எனும் புங்கவர்.

6. காணும் பொருட்களில் எல்லாம் தன்னை உணர்ந்து, தான் உணர்ந்ததையே பிறருக்கு உணர்த்தும், உணர்ந்து ஓதும் பிரம்ம ஆச்சார்யார் எனும் சித்தர்.

7. இருந்த இடத்திலேயே எல்லா ஆத்மாக்களையும் ஈர்த்து ஆற்றும் தொடர்ச்சியான பரிபக்குவப்பட்ட தொண்டு புரியும் நிலை பிரம்ம சித்தர்.

8. தனக்கு சமமாக ஞான குருமார்களை உருவாக்கி தன் தொண்டு பல தலைமுறைகட்கும் தொடர செய்தல் எனும் பணியை ஏற்ற பிரம்ம சித்தர் என்ற மகா அவதார பரம ஞான குரு நிலை கண்டவர்.

இப்படி எட்டு விதமான லட்சணங்கள் பொருந்திய ஒரு குருவை பிடித்து அந்த குருவின் கொள்கைகள் மீது ஆழ்ந்த ஈடுபாடும், அசைக்கமுடியாத நம்பிக்கையும் வைத்து, இந்த உடல், மனம், உயிர் சார்ந்த யோகப் பயிற்சிகளையும் நாம் செய்து, பிறகு தன்னையே சுத்தப்படுத்தி, தன் குணத்தை மேம்படுத்தி வாழ்ந்தால் பிறவி தொடர் அறுக்கப்பட்டு வாழும் காலத்திலேயே "பிரம்ம பூதோ மஹா யோகி" யாக நாம் மாறலாம்.

அந்த பிரம்மத்தை உணர்ந்த மகா யோகியாக, குடும்ப வாழ்க்கையில்இருந்துகொண்டே எப்படி வாழ்வது என்பதை தொடர்ந்து ஆராய்வோம்.

போன்: 9444234348

Tags:    

Similar News