மலரும் நினைவுகள் மீனா... பட படக்க வைத்த முத்த காட்சிகள்...!
- பிஜின் தீவு என்பது கடலுக்கு நடுவில் இருக்கும் ஒரு குட்டித் தீவு.
- மலையில் சென்று இறங்கியதுமே சுற்றும், முற்றும் பார்த்தால் தண்ணீர்.
அவ்வை சண்முகி காட்சிகள் விறு விறுப்பாக படமாகி கொண்டிருந்தது.
கமல் சார் படம் என்றாலே அந்த கால கட்டத்தில் முத்தக்காட்சி கண்டிப்பாக இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
அவ்வை சண்முகியில் அவருடன் நடிக்க ஒத்துக்கொண்டபோது அதைப்பற்றியெல்லாம் நான் கேட்கவில்லை. ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது தான் ஒரு நாள் அடுத்து எடுக்கப்போகும் காட்சி முத்தக்காட்சி என்றார்கள். அதை கேட்டதும் எனக்கு தூக்கி வாரிப்போட்டது. உடலெல்லாம் வியர்த்து விட்டது.
அய்யய்யோ... படத்துக்கு ஒப்பந்தமான போதே இதைப்பற்றி கேட்காமல் இருந்து விட்டோமே என்று ஒரே பதட்டமாக இருந்தது.
இனி என்ன செய்வது? இதை எப்படி தவிர்ப்பது? டைரக்டரிடம் சொன்னால் ஒத்துக்கொள்வாரா? என்று ஒரே குழப்பமாக இருந்தது. அம்மாவிடமும் சொல்லி புலம்பினேன்.
இப்படியாக நான் தவித்து கொண்டிருந்த போது ஷாட் ரெடி என்று கூப்பிட்டார்கள் பயந்தபடியே சென்றேன். டைரக்டர் காட்சியை பற்றி விளக்கினார்.
முத்தக்காட்சி என்று அவர் சொல்ல தொடங்கியதும் எனது பதட்டத்தை புரிந்து கொண்டார்.
பயப்படாதீங்க நீங்கள் கீழேதான் படுத்து இருப்பீர்கள். கமல் சார் உங்க கிட்ட வருவார். வந்ததும் இந்த தடவை வேண்டாமே என்று கூறுவார். அவ்வளவு தான் என்றார்.
அதை கேட்ட பிறகுதான் அப்பாடா... என்று பெருமூச்சு விட்டேன். அப்புறம் அதே போல் தான் காட்சியும் படமாக்கப்பட்டது.
அந்த படத்தில் வரும் 'காதலா... காதலா,,,'என்ற டூயட் பாடல் தென்னாப்பிரிக்காவில் படமாக்கப்பட்டது. அதற்காக தென்னாப்பிரிக்கா சென்றிருந்தேன்.
அந்த பாடலுக்கு நான் அணிந்து இருக்கும் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு கலர் காஸ்ட்டியூம்கள் நானே தேர்வு செய்தது. அதை டைரக்டரும் ஒத்துக்கொண்டதால் ரொம்ப சந்தோசமாக இருந்தது.
பாடலுக்கான சில காட்சிகளை அங்குள்ள பிஜின் தீவில் படமாக்க திட்டமிட்டு இருந்தார்கள்.
பிஜின் தீவு என்பது கடலுக்கு நடுவில் இருக்கும் ஒரு குட்டித் தீவு. அதில் இருக்கும் மலையில் தான் படப்பிடிப்புக்கான இடம் தேர்வு செய்யப்பட்டிருந்தது.
அந்த மலையில் நின்று கீழே பார்த்தால் அதல பாதாளத்தில் கடல். லேசாக கால் தவறினால் கூட அவ்வளவு தான். பார்த்தாலே பயமாக இருந்தது. அந்த இடத்தில் நின்று ரொமான்டிக்காக நடிக்கனும். எப்படி இருக்கும்?
ஷூட்டிங் நடந்த அந்த மலைக்கு ஹெலிகாப்டரில் அழைத்து செல்வார்கள். அதில் நானும் கமல்சாரும் மற்றொரு உதவியாளரும் மட்டும் தான் இருப்போம்.
மலையில் சென்று இறங்கியதுமே சுற்றும், முற்றும் பார்த்தால் தண்ணீர். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கட்டிடம் எதுவும் இருப்பதே தெரியாது. ஆபத்து ஏற்பட்டால் உதவிக்கு கூட யாரும் வர முடியாது. அப்படிப்பட்ட ஒரு இடம். இந்த இடத்தையெல்லாம் எப்படித்தான் தேடி கண்டுபிடித்தார்கள் என்று கூட நினைத்தேன்.
இன்னொரு விசயம், அந்த மலையில் நிறைய புறாக்கள் இருந்தது. அந்த பகுதி முழுவதும் புறாக்களின் எச்சம் தான். திறந்த வெளி என்பதால் அந்த எச்சத்தால் வாடையோ அருவெறுப்போ அவ்வளவாக தெரியாது.
நடிக்கும் போது உருண்டு, புரண்டதால் உடை முழுவதும் புறா எச்சங்கள் பட்டிருக்கிறது. ஷூட்டிங் முடிந்து ஹெலிகாப்டரில் ஏறிய பிறகு வந்தது பாருங்க ஒரு வாடை...! அப்பா... என்னாலேயே சகிக்க முடியவில்லை.
அறைக்கு சென்று உடைமாற்றி குளித்த பிறகு தான் நிம்மதி வந்தது. அப்படியும் அந்த ஸ்மெல் அடிக்கடி நினைவுக்கு வரும். அதற்காக ஸ்பிரே அடித்துக் கொள்வேன்.
அங்கு ஷூட்டிங் நடந்த நாட்கள் அனைத்துமே சந்தோசம். இருந்தாலும் ஒருவிதமான திகிலுடனேயே இருந்தேன். காரணம் படப்பிடிப்பு நடந்து ஆபத்தான இடம்.
நாங்கள் எங்கே இருக்கிறோம்? எப்படி இருக்கிறோம்? என்பது வெளியே இருந்த அம்மாவுக்கு தெரியாது. அவர் இது பற்றி படக்குழுவிடமே சொல்லி ஆதங்கப்பட்டிருக்கிறார்.
இப்படி கண்ணுக்கு தெரியாத இடத்துக்கு அனுப்பி இருக்கிறார்களே, அங்கு ஏதாவது பிரச்சினை என்றால் எப்படி அழைத்து வருவது? இப்படிப்பட்ட இடங்களில் ஷூட்டிங் நடத்த ரிஸ்க் எடுக்காதீங்க! என்று கூறு வாராம்.
நாங்கள் திரும்பி கரைக்கு வந்த பிறகு தான் அம்மாவுக்கு நிம்மதி வரும் அன்று அந்த காட்சிகள் ரிஸ்க்காக தெரிந்தாலும் அவ்வை சண்முகி வெளியானதும் படம் ஹிட்... பாடல் ஹிட்.. அதை கேட்டதும் ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருந்தது. இன்றும் பேசப்படும் படம் அல்லவா...?
நாங்கள் கஷ்டப்படுவதே இந்த பெயருக்கும் புகழுக்கம் தானே!
ருக்கு ருக்கு.. என்ற பாடல் கமல்சாரே தனது சொந்த குரலில் பாடியிருந்தார்.
இப்படி ஒவ்வொரு படங்களிலும் காட்சிகளில் நடித்தது அப்போது கிடைத்த அனுபவங்கள் எனக்கு பாடமாகவும் அமைந்தது என்பதே உண்மை.
அடுத்த தகவலுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்... (தொடரும்...)