சிறப்புக் கட்டுரைகள்

அவயோக தோஷம்!

Published On 2024-05-21 16:43 IST   |   Update On 2024-05-21 16:43:00 IST
  • குறிப்பாக இந்த தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்க்கையில் எந்த பெரிய நன்மையும் நடக்கவே நடக்காது.
  • மகிமை வாய்ந்த இக்கோவில் சுமார் 700 வருடங்களாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

தோஷங்களில் நிறைய வகைகள் உள்ளன. நமது மூதாதையர்கள் அந்த தோஷங்களை ஆன்மிக அடிப்படையிலும், ஜோதிட அடிப்படையிலும் பல வகைகளாக பிரித்து வைத்திருந்தனர். ஏனெனில் அந்த தோஷத்துக்கு உரிய பரிகாரத்தைத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

ஆனால் கால ஓட்டத்தில் அவை மறைந்துவிட்டன. தற்போது ஜோதிட அடிப்படையில் தோஷங்களை கண்டுபிடித்து சொல்கிறார்கள். ராகு-கேது தோஷம், கால சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், சனி தோஷம், பித்ரு தோஷம், குல தெய்வ தோஷம், பெண்கள சாப தோஷம் போன்றவைகள் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இந்த பட்டியலில் வராமல் சில தோஷங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் "அவயோக தோஷம்" முன் ஜென்மத்தில் பல பேரை ஏமாற்றி, பலரது சாபத்தை பெற்றவர்களை மறுபிறவியில் அது "அவயோக தோஷம்" ஆக மாறி பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக இந்த தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்க்கையில் எந்த பெரிய நன்மையும் நடக்கவே நடக்காது.

இந்த அவயோக தோஷத்தை பல வழிகளில் தெரிந்து கொள்ளலாம். முன் ஜென்மத்தில் சகோதரர்களுக்கு துரோகம் செய்திருந்தால் ஜாதகத்தில் 3 அல்லது 11-வது இடம் கெட்டு போய் இருக்கும். அது போல முன் ஜென்மத்தில் மனைவியை அடக்கி, கொடுமை செய்திருந்தால் 7-ம் இடம் சரியாக இருக்காது. இந்த பிறவியில் அவர்கள் மனைவியால் படாதபாடுபடுவார்கள்.

சிலர் பெற்ற தாயை மதிப்பதே இல்லை. முன் ஜென்மத்தில் தாய் மனம் வருந்தும்படி நடந்திருந்தால் 4-ம் இடம் பாதிக்கப்பட்டிருக்கும். அத்தகையவர்களுக்கு இந்த பிறவியில் தாய் அன்பே கிடைக்காமல் போய்விடும். இத்தகைய தோஷங்களைத்தான் அவயோக தோஷங்கள் என்பார்கள். குல தெய்வ வழிபாடு, சூரிய வழிபாடு செய்தால் இந்த தோஷத்தை கட்டுப்படுத்த முடியும். தினமும் விலங்கு களுக்கு உணவு கொடுத்தால் கை மேல் பலன் வந்து சேரும்.

வெள்ளிக்கிழமைகளில் பசு மாட்டுக்கு அகத்திக் கீரை வாங்கிக் கொடுக்கலாம். சிவனடியார்களுக்கு உணவு, உடைகள் வாங்கிக் கொடுக்கலாம். இவை எல்லாம் செய்த பிறகு ஏதாவது ஒரு ஆலயத்துக்கு சென்று வழிபட்டு தோஷத்தை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

கவலைப்படாதீர்கள், இந்த தோஷங்களை விரட்ட தமிழ்நாட்டில் எத்தனையோ ஆலயங்கள் உள்ளன. சென்னை குரோம்பேட்டையில் உள்ள செங்கச்சேரி மாரியம்மன் ஆலயமும் அதில் ஒன்று. இந்த ஆலயத்தில் வழிபட்டால் ஜென்ம வினைகள் அனைத்தும் விலகி ஓடி விடும். வாருங்கள்... குரோம்பேட்டை செங்கச்சேரி மாரி அம்மன் ஆலயத்துக்கு செல்லலாம்......

மகிமை வாய்ந்த இக்கோவில் சுமார் 700 வருடங்களாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. கோவிலின் தலவிருட்சமான நாவல் மரத்தடியின் கீழ் சிறிய கோவிலில் எழுந்தருளியிருந்த அம்மனுக்குக் குரோம்பேட்டை வாசிகள் சேர்ந்து அவ்விடத்திலேயே மண்டபம், கோபுரம், பிரகாரம் கூடிய பெரிய கோவில் ஒன்றை நிர்மாணித்து விட்டார்கள்.

நாயக்கர் அரசவம்சத்தைச் சேர்ந்தவர்களின் பராமரிப்பில் இருந்துவந்த இக் கோவிலைத் தற்போது பக்தர்களே சிறப்பாகப் பராமரித்து வருகின்றனர். குரோம்பேட்டைக்கு அருகில் உள்ள ராயப்பேட்டை என்னும் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் படவேட்டம்மன் இந்த செங்கச்சேரி அம்மனின் சகோதரி என்று கூறப்படுகின்றாள். இன்றும் ஆடிமாதம் இரண்டாவது வாரத்தில் ஒருநாள் படவேட்டம்மனின் கோவிலில் இருந்து பால் குடங்கள் பக்தர்களால் கொண்டு வரப்பட்டு செங்கச்சேரி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆடிமாதம் படவேட்டம்மனின் தீமிதி உற்சவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் தீமிதிக்குப் பிறகு செங்கச்சேரி அம்மனையும் தரிசித்த பின்தான் தங்களது விரதம் முழுமை பெறுவதாகக் கருதுகிறார்கள்.

அன்பர்கள் முயற்சியால் சிறிது சிறிதாக வளர்ந்து வரும் இக்கோவிலில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாலட்சுமி, குருவாயூரப்பன், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் ஆகியோருக்கும் தனித்தனிச் சந்நிதிகள் இருக்கின்றன.

எனவே சிவராத்திரி, ஸ்ரீராமநவமி, வருடப்பிறப்பு, பவுர்ணமி, ஆருத்ரா, வைகுண்ட ஏகாதசி போன்ற தினங்களில் விசேஷ அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்யப் படுகின்றன. நவராத்திரி சமயத்தில் அம்மனுக்குத் தினம் ஒவ்வொரு வகையான அலங்காரம் நடைபெறுவதோடு விஜயதசமியன்று தேவி உபாசகர்களைக் கொண்டு, உலக சேமத்துக்காக லலிதா ஹோமம் செய்யப் படுவது இக்கோவிலின் தனிச்சிறப்பு. வேம்பு, அரசு, வில்வம் ஆகிய மூன்று மரங்களும் பின்னிப் பிணைந்து வளர்ந்து காணப்படுவது இக் கோவிலுக்குள்ள மற்றொரு சிறப்பம்சம். மரத்தின் அடியில் நாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இக்கோவிலில் விளக்குப் பூஜை, அகல் விளக்குப் பூஜை ஆகியவையும் பெண்மணிகளால் நடத்தப்பட்டு வருகின்றன.

கும்பகோணத்திற்கு அருகே திருக்கருகாவூர் என்று ஒரு புண்ணியத்தலம் உள்ளது. அங்குள்ள கோவிலில் குடிக்கொண்டுள்ள அம்பிகைக்கு கர்ப்பரடசாம்பிகை என்று பெயர்.

கருவில் இருக்கும் சிசுவையும் கருக விடாமல் காப்பாற்றி அருளுபவள் என்பதால் அம்பிகைக்கு இந்தத் திருநாமம். திருமணமான பெண்கள் கருவுற்றதும் சுகபிரசவம் ஆகவேண்டும் என்பதற்காக அம்பாளை வேண்டிக்கொண்டு தாங்கள் வளைகாப்பு செய்துகொள்வதற்கு முன்பு அம்மனுக்கு வளையல்கள் வாங்கிச் சாத்துவார்கள். குழந்தைப்பேறு இல்லாதவர்களும் அம்மனுக்கு வளையல் காப்பிட்டு வழிபட்டு மழலைச் செல்வங்களைப் பெற்று மகிழ்கின்றனர். வருடத்திற்கு ஒருமுறை அம்பாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கே வளைகாப்பு உற்சவம் செய்வது இன்றும் சில கோவில்களில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அவற்றுள் ஒன்று சென்னையிலே குரோம்பேட்டை கணபதிபுரத்தில் உள்ள செங்கச்சேரி அம்மன் கோவில்.

ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அன்னையை நாடிவரும் இந்த ஆலயத்தில் வருடா வருடம் ஆடிப் பூரம் அன்று குறிப்பிட்ட நல்ல நேரத்தில் அம்பாளுக்குத் தைலக்காப்பிட்டுக் கதம்பப்பொடி, மஞ்சள் பொடியால் திருமஞ்சனம் செய்வித்துப் பால், தயிர், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. பிறகு அங்கு குழுமியிருக்கும் பக்தர்களுடைய பொன்னாபரணங்களால் அம்பிகைக்குக் கனகாபிஷேகமும் பன்னீர் அபிஷேகமும் நடைபெறுகிறது.


அன்பர்கள் யாவரும் ஆனந்த மிகுதியால் கண்ணீர் மல்கி, உள்ளம் உருகி நிற்க, தீபாராதனை காட்டிய பின் அன்னைக்கு வேப்பிலை பாவாடையுடன் புது வஸ்திரம் சாத்தப்படுகிறது. எலுமிச்சம்பழ மாலையோடு மலர் மாலைகளையும் அணிவித்து அம்பிகைக்கு காண்பவர் கண் குளிர, மனம் மகிழ, வளைகாப்பும் பூச் சூட்டலும் நடைபெறுகிறது. ரவிக்கைத் துணியொன்றில் மட்டையுடன் கூடிய தேங்காய், வெற்றிலை, பாக்கு மஞ்சள், பழம், பூ, சீப்பு, குங்குமச்சிமிழ், வெள்ளி நாணயம், வளையல்கள் ஆகிய வற்றை முடிந்து அன்னைக்கு மடி நிரப்பல் செய்யப்படுகிறது.

பின்னர், புடவை, ரவிக்கை, பருப்புத் தேங்காய் ஓதி பெண்மணிகள் ஊஞ்சல் பாட அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தம், வாழைப்பழம், சர்க்கரை,சுண்டல், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், புளிசாதம், தயிர் சாதம், பழ வகைகள், பானகம், தீர்த்தம், வெற்றிலை, பாக்கு, தேங்காய் ஆகியவற்றைப் படைத்து தீபாராதனை காட்டிப் பூஜை செய்கிறார் குருக்கள். அதைத் தொடர்கிறது மங்கள ஆரத்தி.

அம்மனின் பூஜையில் மனம் லயித்துப் பக்திப் பரவசத்துடன் அமர்த்திருக்கும் அத்தனை பெண்மணிகளுக்கும் நலங்கிட்டுத் தாம்பூலமும் வளையல்களும் தரப்படுவதோடு அங்கு வந்திருக்கும் அனைவருக்கும் எவ்வித வேறுபாடும் இல்லாமல் பிரசாதங்கள் அளிக்கப்படுகின்றன. திருவிழாக் கோலத்துடன் காணப்படும் குரோம்பேட்டையில் உள்ள அத்தனை தாய்மார்களுக்கும் தங்கள் மகளுக்கே வளைகாப்புச் செய்து மகிழ்ந்தது போன்ற பரவசநிலை அடைந்து, அன்னையை நினைத்துக் கோவிலை வலம்வந்து வணங்குகின்றனர்.

குரோம்பேட்டை வாசிகளுக்குக் கண்கண்ட தெய்வமாக விளங்கும் செங்கச்சேரி அம்மன் பல நாட்கள் பூஜை வேளைகளில் கருவறையில் கருநாக வடிவில் எழுந்தருளிக் காட்சி அளித்திருப்பதைக் கண்டு தரிசித்த அனுபவம் பலருக்கும் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

கருணை பொங்கும் திருவதனத்துடன் மங்கல வடிவமாகத் திகழும் செங்கச்சேரி அம்மன் தன்னையே சரணம் என்று நம்பி அடைந்த வர்களுக்கு தன்னருளை வாரி வாரி வழங்கு கிறாள். அவளைத் தேடிவரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் பெருகி வருவதே இதற்குச் சான்று.

பவுர்ணமி நாட்களில் மருதாணி இலையால் அம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள். பிறகு அந்த இலையை கன்னிப் பெண்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள். இப்படி இந்த ஆலயத்தில் பல வழிபாடுகள் உள்ளன. இங்கு மனம் உருக மாரி அம்மனை வழிபட்டால் அவயோக தோஷங்கள் கொண்ட ஜென்ம வினைகளில் இருந்து நிச்சயம் விடுபட முடியும்.

Tags:    

Similar News