மலரும் நினைவுகள் மீனா: ரஜினிசார் மடியில் தலை வைத்து அவர் தடவி விடுவது நல்லாத்தான் இருக்கும்
- அப்போதெல்லாம் இன்றைய காலகட்டத்தை போல் விமான வசதி கிடையாது.
- எப்படியோ ஒரு வழியாக தலையை சீவி, பிளாஸ்டரை மறைத்து கச்சிதமாக ஹேர்ஸ்டைலை வடிவமைத்துவிட்டார்.
நடிப்பதற்கு முக வசீகரம் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்ல வேண்டியதில்லை. அதிலும் முகத்துக்கு அழகு சேர்ப்பது ஹேர்ஸ்டைலே என்பதையும் சொல்ல வேண்டியது இல்லை.
உங்கள் மீனாவுக்கென்று எப்பவுமே தனி ஹேர்ஸ்டைல் உண்டு. ஆனால் படத்துக்கு படம் ஹேர் ஸ்டைல் மாறும்.
கதாநாயகியாக உச்சத்தில் இருந்த நேரம். சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்து கொண்டிருந்தேன். மறுநாள் ரஜினிக்கு ஜோடியாக எஜமானில் நடிக்க வேண்டும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தலையில் பட்ட காயத்துக்கு பிளாஸ்டர் போடவேண்டிய நிலை. எப்படியோ சமாளித்து 'முட்டா மேஸ்திரி' படப்பிடிப்பை கேரளத்தில் முடித்துவிட்டேன்.
அன்று இரவே புறப்பட்டு மறுநாள் காலையில் கோவை, பொள்ளாச்சியில் இருக்க வேண்டும்.
அப்போதெல்லாம் இன்றைய காலகட்டத்தை போல் விமான வசதி கிடையாது. முக்கியமான நகரங்களுக்கு இடையே மட்டும் தான் விமான சேவை இருந்தது. அதுவும் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே விமானங்கள் இயக்கப்படும்.
எனவே விமான பயணத்தை விட ரெயில் பயணமே அதிகம் இருக்கும்.
கேரளாவின் உட்புற பகுதியில் ரொம்ப தூரத்தில் படப்பிடிப்பு நடந்தது. அங்கு ஷூட்டிங்கை முடித்து விட்டு காரில் புறப்பட்டு எர்ணாகுளம் சென்றடைந்தோம். அங்கிருந்து கோவைக்கு ரெயில் பயணம்.
ஷூட்டிங்கில் இருந்த போது தலையில் இருந்த காயத்தின் வலி தெரியவில்லை. ரெயில் ஏ.சி. பெட்டியில் பயணித்த போது தான் வலி பின்னி எடுத்தது. டாக்டர் தந்திருந்த மாத்திரையை சாப்பிட்டு விட்டு படுத்தேன். தூக்கம் வரவில்லை. நினைவு முழுவதும் எஜமானை சுற்றி சுழன்றது.
ரஜினி சாரோடு பாடல் காட்சியில் நடிக்க வேண்டும். தலையில் பிளாஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். அது தெரியாமல் எப்படி தலையை வாருவது?
ஹேர்ஸ்டைல் நல்லா இருக்குமா? எப்படி சமாளிக்க போகிறோமோ தெரியவில்லையே என்று பல எண்ணங்கள் வந்து போனது. எப்படியோ ஒரு வழியாக நீண்ட நேரத்துக்கு பிறகு தூக்கம் கண்களை தழுவியது.
அதிகாலையில் கோவை சென்றடைந்ததும் அங்கிருந்து காரில் பொள்ளாச்சி புறப்பட்டோம்.
பொள்ளாச்சியில் வழக்கமாக தங்கும் ஓட்டலில் அறை தயாராக இருந்தது. ஓய்வெடுக்க நேரமில்லை. ஷூட்டிங் செல்ல தயாரானேன். எனது சிகை அலங்கார நிபுணர்தான் ரொம்ப கஷ்டப்பட்டார்.
தலையில் போட்டிருந்த பிளாஸ்டரை பார்த்து எப்படி தலைவாரி அதை மறைப்பது? சீப்பு கொஞ்சம் அழுத்தினாலும் உங்களுக்கு வலிக்குமே என்றார். என்ன செய்வது மெதுவாக வாரிவிடுங்கள் என்றேன்.
பளீர் வெள்ளை நிற பிளாஸ்டர் போட்டால் ரொம்ப பளிச்சென்று வெளியே தெரியும் என்பதால் சிறிய, மிருதுவான பிளாஸ்டர் போட்டு இருந்தார்கள்.
எப்படியோ ஒரு வழியாக தலையை சீவி, பிளாஸ்டரை மறைத்து கச்சிதமாக ஹேர்ஸ்டைலை வடிவமைத்துவிட்டார்.
மேக்-அப் ரெடியானதும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றோம். முதல் காட்சி என்ன தெரியுமா? பங்களா வீட்டின் வாசலில் ரஜினி சார் அமர்ந்து இருப்பார். அவர் மடியில் நான் தலை சாய்த்து இருப்பேன் அவர் என் தலையை கோதி விட்டபடியே
நிலவே முகம் காட்டு
எனை பார்த்து ஒளிவீசு
அலைபோல் சுதி மீட்டு
இனிதான மொழி பேசு...
இளம் பூங்கொடியே இது தாய் மடியே...
என்று பாடியபடி வாஞ்சையுடன் தலையை தடவி விடுவார்.
ரஜினிசார் மடியில் தலை வைத்து அவர் தடவி விடுவது நல்லாத்தான் இருக்கும். ஆனால் தலைமுடிக்குள் வெளியே தெரியாமல் இருந்த காயத்தின் மீது அவர் கைப் பட்டதும் வலி.
ஆனால் வலியை முகத்தில் காட்ட முடியாது. அதை பொறுத்துக் கொண்டேன். அந்த ஒரு டேக் பரவாயில்லை. நானும் முகத்தை கொஞ்சம் சோகமாக வைத்திருக்க வேண்டும். தொடர்ந்து நான் பாடும் போது
நிலவே முகம் காட்டு
எனை பார்த்து ஒளிவீசு
அலைபோல் சுதி மீட்டு
இனிதான மொழி பேசு...
அணைத்தேன் உனையே
இது தாய் மடியே...
என்று பாடும் போது முகத்தில் புன்னகை வர வேண்டும். புண் வலியில் எப்படி புன்னகை வரும்? வந்துதானே ஆக வேண்டும்! இல்லாவிட்டால் டைரக்டரிடம் திட்டு வாங்க வேண்டும். ரீடேக் எடுக்க வேண்டும். என்ன செய்வது வலியை தாங்கி கொண்டு புன்னகையையும் முகத்தில் தவழவிட்டேன். காட்சி நன்றாகவே அமைந்தது. காட்சி முடிந்த பிறகுதான் தலையில் இருந்த காயத்தை பற்றி கேள்விப்பட்டு 'எப்படிம்மா காயம் பட்டது? என்று பரிவோடு கேட்டார். பொள்ளாச்சி பகுதியில் 'எஜமான்' படத்துக்கான சில காட்சிகள் படமாக்கப்பட்டது. ஒரு வாரம் முழுவதும் பொள்ளாச்சி தான்.
பொள்ளாச்சி ஷூட்டிங் முடிந்தது. உடனே லக்கேஜூகளை எடுத்து கொண்டு ஒத்துக்கொண்ட கால்ஷீட் படி தெலுங்கு படத்தின் ஷூட்டிங்குக்காக கோவையில் இருந்து நேரடியாக ஐதராபாத்துக்கு விமானத்தில் பறந்தோம்.
தையல் போட்டு ஒரு வாரத்துக்கு மேல் ஆகியிருந்ததால் பிரிக்கலாம் என்றார்கள்.
ஐதராபாத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று தையலை பிரித்துக் கொண்டேன்.
அது வரை அந்த மாதிரி காயம் பட்டதோ, தையல் போட்ட அனுபவமோ எனக்கு கிடையாது. தையல் பிரிக்கும் போதும் பயங்கரமாக வலித்தது. 'அம்மா...' என்று கத்திவிட்டேன். உண்மையிலேயே என் அம்மாவை பார்த்து அழ வேண்டிய நிலைக்கு ஆளானேன்'. அது ஏன்? அடுத்த வாரம் சொல்கிறேன். (தொடரும்...)