சிறப்புக் கட்டுரைகள்

முடக்குவாதத்தை சீராக்கும் நவீன சிகிச்சைகள்

Published On 2024-03-23 11:02 GMT   |   Update On 2024-03-23 11:02 GMT
  • முடக்குவாதம் வந்தால் உடலில் எந்த செயல்பாடும் இல்லாமல், அனைத்து இயக்கங்களும் அப்படியே நின்று வீட்டில் முடக்கி போட்டு விடும்.
  • சிலருக்கு யூரிக் ஆசிட் அளவு அதிகமாவதால் மூட்டுக்களில் வலி ஏற்படலாம்.

நம் உடலின் நோய் எதிர்ப்புத்திறன் நமது உடலுக்கே எதிராக செயல்படும் போது பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனை தன்னெதிர்ப்பு நோய்கள் என அழைக்கிறோம்.

இந்த தன்னெதிர்ப்பு நோய்களிலும் பல வகைகள் உள்ளது. இதில் பொதுவாக எல்லோராலும் அறியப்படுவது தான் முடக்குவாதம் அல்லது சரவாங்கி மூட்டுவாதம். இது இந்த பெயர் மட்டுமல்லாது பல்வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

முடக்குவாதம் குறித்தும், அது யாரை தாக்கும், அந்த நோய் பாதிப்பின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விரிவாக பார்ப்போம்.

பல நோய்களின் கூட்டு வெளிப்பாடு தான் இந்த முடக்குவாதம். முடக்குவாதம் வந்தால் உடலில் எந்த செயல்பாடும் இல்லாமல், அனைத்து இயக்கங்களும் அப்படியே நின்று வீட்டில் முடக்கி போட்டு விடும்.

முடக்குவாதம் என்றவுடன் எல்லோரும் அது எலும்பு தொடர்பான நோய், மூட்டுவலி என்று நினைத்து விடுகிறார்கள். இது மூட்டு தசைகள், இணைப்பு திசுக்கள் போன்றவற்றுடன் தொடர்புடையது. உடலின் பல்வேறு உறுப்புகளையும் பாதிக்க கூடியது தான் முடக்குவாதம்.


முடக்குவாதத்திலும் பல வகைகள் உள்ளன. வயது மூப்பு காரணமாக ஏற்படுகிற ஆர்த்தரைட்டிஸ் பிரச்சினை ஆஸ்டோ ஆர்த்தரைட்டிஸ் என அழைக்கப்படுகிறது. இது நமது உடம்பில் உள்ள எலும்பு மூட்டுகள் தேய்வதால் உண்டாகிறது.

பொதுவாக எல்லோரும் அறிந்த இன்னொரு வகையானது, சொரியாசிஸ் ஆர்த்தரைட்டிஸ். இது சொரியாசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும். மற்றொன்று முதுகு தண்டுவாதம். முதுகு தண்டுவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதுகு மற்றும் கழுத்து பகுதிகளில் பாதிப்பு ஏற்படும். மூட்டு பகுதிகளிலும் வலி இருக்கும்.

சிலருக்கு யூரிக் ஆசிட் அளவு அதிகமாவதால் மூட்டுக்களில் வலி ஏற்படலாம். இது கவுட் ஆர்த்தரைட்டிஸ் என அழைக்கப்படுகிறது. கை மற்றும் கால் மூட்டுகளில் வலியும் வீக்கமும் ஏற்படுவதே இதன் அறிகுறியாகும். இதுமட்டுமின்றி மூட்டுகளில் வலியுடன் இறுக்கமும் ஏற்படும்.

காலையில் எழுந்தவுடன் அனைவரும் கை, கால்களை அசைந்து கொடுப்போம். ஆனால் இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களால் தங்கள் கை, கால்களை நீட்டவோ, மடக்கவோ முடியாது. இவ்வளவு ஏன் அவர்களது அன்றாட பணிகளை கூட தங்களால் செய்ய முடியாது. அதற்கும் கூட யாராவது உதவ வேண்டிய நிலையே இருக்கும். தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் வரை இந்த வலியானது இருக்கும். சிலருக்கு 1 மணி நேரத்திற்கு மேலாகவும் அல்லது அதற்கு மேற்பட்ட நேரம் வரையும் இருக்க வாய்ப்புள்ளது. இதனை காலை விறைப்பு(மார்னிங் ஸ்டெப்னஸ்) எனவும் குறிப்பிடுகிறோம்.

பொதுவாகவே சர்க்கரை நோய், இதய அடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் குறித்து மக்களுக்கு அந்தளவு விழிப்புணர்வு இருப்பதில்லை. நோய் முற்றிய நிலைக்கு வந்த பிறகே பலருக்கும் தனக்கு அந்த நோய்கள் இருப்பது தெரிய வரும்.

அதுபோன்று தான் ஆர்த்தரைட்டிஸ் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு இல்லை. மூட்டுகளில் சிறிய வலிதானே என்று, மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை கண்டு கொள்ளலாமல் விட்டு விடுகின்றனர்.


அப்படி நாம் கண்டு கொள்ளாமல் விடுவதால் நோய் முற்றி பிற்காலத்தில் சிதைவுகள்(டிபார்மைட்டிஸ்) ஏற்பட்டு விடும். இதன் மூலம் கை, கால்கள் வளைந்து போகவும் வாய்ப்புள்ளது. அப்படி கை, கால்கள் வளைந்து போனால் மீண்டும் அதனை சரி செய்வது என்பது இயலாத ஒன்றாகிவிடும்.

எனவே ஆரம்பத்திலேயே இந்த பிரச்சினையை கண்டுபிடித்து முறையான சிகிச்சை பெற வேண்டும். அப்படி சிகிச்சை பெற்றுக் கொண்டோமானால் ஆர்த்தரைட்டிஸ் பாதிப்புகளை நாம் தவிர்க்க முடியும்.

ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் நோய் எந்த வயதிலும், எந்த வயதினருக்கும் வரலாம். ஆனால், நடுத்தர வயது உடையவர்களுக்கு அதிகமாக வருகிறது. அதிலும் குறிப்பாக ஆண்களை விட பெண்களையே இந்த நோயானது அதிகமாக தாக்கும்.

மாதவிடாய் ஆரம்பிக்கும் வளர் இளம் பருவம் முதல் மாதவிடாய் நிற்கும் வரையிலான இனப்பெருக்க காலக்கட்டத்தில் இது வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். கை, கால், மூட்டு வீங்குதல், வலி, உடல் சோர்வு, காய்ச்சல், நாள்பட்ட வறட்டு இருமல், மூச்சுத்திணறல் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகள்.

ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் மூட்டுகளை பாதித்து சிதைவுகளை மட்டும் ஏற்படுத்தாது. மாறாக நமது உடலில் உள்ள வேறு சில பாகங்களையும் தாக்க கூடியது.

குறிப்பாக கண்ணில் பலவித உபாதைகளை ஏற்படுத்தும். இதனால் கண்களில் வறட்சி, கண் சிவந்து விடுதல் மற்றும் வலி ஏற்படும். இந்த நோய் நுரையீரல் ஐ.சி.டி. என்னும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடியது.

நாள்பட்ட ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் இருப்பவர்களுக்கு மாரடைப்பு போன்ற பிரச்சினைகளும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் ஏற்படுவதற்கு மரபணு, சூழல் மாசுபாடு, தொற்று என பல்வேறு காரணங்கள் உள்ளன.

இந்த பிரச்சினை உள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் இந்த நோய் வந்துவிடுமோ என அச்சப்படலாம். அந்த பயம் அவர்களுக்கு வேண்டாம். ஏனென்றால், மரபணு மூலமாக இது வருவதற்கான வாய்ப்பு என்பது ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் உள்ளவர்கள் வழக்கமான உணவு பழக்கத்தை விட்டு, ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அதாவது பழங்கள், காய்கறிகள் அதிகளவில் நமது உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் கவர்கள், பாக்கெட்டில் அடைக்கப் பட்டிருக்கும் உணவுகள் மற்றும் துரித உணவு வகைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக புகைப்பிடிப்பவராக இருந்தால் அதனை அறவே தவிர்த்து விட வேண்டும்.

ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் உள்ளவர்களுக்கு 6 வாரங்களுக்கும் மேலாக மூட்டுப்பகுதிகளில் வலி இருக்கும். இந்த வலியானது மற்ற மூட்டுகளிலும் பரவி விடும். இந்த மாதிரியான நோய்த்தொற்று அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு முதலில் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் ரத்த அணுக்களின் அளவினை பரிசோதிப்போம்.


பிறகு உடலின் உள்ளுறுப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் பார்ப்போம். தைராய்டு சுரப்பி எவ்வாறு இயங்குகிறது என சில மருத்துவ பரிசோதனைகளையும் செய்து பார்த்து இதனை கண்டறிவோம்.

ருமட்டாய்டு நோயின் வீரியம் எந்த அளவில் உள்ளது என்பதை அறிய ருமட்டாய்டு பேக்டர் மற்றும் ஆண்டி சிசிபி போன்ற சிறப்பு பரிசோதனைகள் உள்ளது. இதன் மூலம் நோயின் வீரியத்தன்மையை பார்த்து, அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படும்.

ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் உள்ள நோயாளிகள் சிகிச்சைக்காக வரும் போது ஏதேனும் வலி நிவாரணி கொடுப்பார்களா, அதனால் சிறுநீரகம் பாதிக்கப்படுமா என அச்சம் அடைய தேவையில்லை. அவர்களுடைய சிறுநீரகம் நல்ல நிலையில் இயங்கினால் மட்டுமே இதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ள முடியும் என்பதாலும், சிலருக்கு வாழ்நாள் முழுவதற்குமான சிகிச்சை தேவைப்படும் என்பதாலும் சிறுநீரகத்தின் செயல்திறன் பாதிக்காத வகையில் சிகிச்சை முறைகள் இருக்கும்.

நோயினால் பாதிக்கப்பட்டோர் முன்பு போல ஸ்டிராய்டு, வலி நிவாரணி குறித்து அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லை. நவீன சிகிச்சையில் கொடுக்கப்படும் மருந்துகள் டி.எம்.ஏ.ஆர்.டி.எஸ் எனப்படும். இந்த மருந்துகள் சிறிது, சிறிதாக நோயின் பாதையை மாற்றக்கூடியது. இதனால் வலி நிவாரணி இல்லாமல், ஸ்டீராய்டு மருந்துகள் இல்லாமல் நோயின் தீவிரத்தை சிறிது, சிறிதாக குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோயாளிகள் வாழ முடியும்.

சில நோயாளிகளுக்கு இந்த மருந்தினால் குணம் ஆகவில்லை என்றால் அவர்களுக்கு இந்த மருந்து ஒத்துக்கொள்ளவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். அதற்கு வேறு சில நவீன சிகிச்சை முறைகளும் தற்போது உள்ளன.

நவீன சிகிச்சை முறைகள் மூலம் நவீன மருந்துகளை வழங்கினால் நோயின் தாக்கம் குறைந்து விடும். எனவே இதுபோன்ற பாதுகாப்பான மருந்துகளையே எடுத்துக்கொள்ள வேண்டும். மற்ற நோய்களுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்புபவர்களை டாக்டர்கள் நீங்கள் ஒய்வெடுங்கள் என்று சொல்வார்கள்.

ஆனால் இந்த நோயில் இருந்து குணம் அடைந்து செல்பவர்களை நாங்கள் ஒய்வெடுங்கள் என்று சொல்லமாட்டோம். மூட்டுகள் ஆரோக்கியமாகவும், இயல்பாக இயங்கவும் சில பயிற்சிகள் அவசியம் என்பதால் ஒய்வு வேண்டாம் என்று சொல்கிறோம். அவர்களால் முடிந்தளவு சிறிய, சிறிய உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். தங்களுடையே அன்றாட பணிக்கு யாரையும் எதிர்பார்க்காமல் தாங்களே செய்து கொள்ள வேண்டும். எப்போதுமே உங்களது மூட்டுகளுக்கு பயிற்சியானது அவசியம். அப்படி பயிற்சி செய்வது மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கும், அவை இயல்பாக இயங்குவதற்கும் மிகவும் அவசியமானது.

எனவே மூட்டுகளில் வலி அல்லது இறுக்கம் போன்றவை இருந்தால் லேசாக தானே என்று விட்டு விடாமல் டாக்டர்களை சந்தித்து, அதற்கான ஆலோசனைகளையும் பெற்று நலமான வாழ்வு வாழலாம்.

தொடர்புக்கு: 73393 33485

Tags:    

Similar News