சிறப்புக் கட்டுரைகள்

மாதவிடாய் கோளாறுகளுக்கு தீர்வு

Published On 2024-03-21 11:19 GMT   |   Update On 2024-03-21 11:19 GMT
  • இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் மனஅழுத்தம் காரணமாக உடலின் இயற்கை நிகழ்வு தொந்தரவு தரும் விதமாக மாறியுள்ளது.
  • கலியாண முருங்கை இலையின் சாறை தொடர்ச்சியாக 2 அல்லது 3 மாதங்கள் வரை காலை மாலை இருவேளையும் எடுத்துக்கொள்ளலாம்.

மாதவிடாய் என்பது பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளில் ஒன்றான கருப்பையிலிருந்து யோனியின் வழியாக குருதியுடன் சேர்த்து கருப்பையின் உள்சதை சவ்வும் வெளியேறும் நிகழ்வை குறிக்கிறது. சராசரியாக 10 முதல் 16 வயதில் மாதவிடாய் சுழற்சி தொடங்கி 45 முதல் 50 வயதில் முடிவுறுகிறது. 21 முதல் 35 நாட்களுக்கு ஒரு முறை மூன்று முதல் ஏழு நாட்கள் நடக்கும் இந்த நிகழ்வு இயல்பான உடலியல் ஆகும். சரியான இடைவேளையில் மாதவிடாய் ஏற்படுவது பெண்களின் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான நல்ல அறிகுறியாகும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் மனஅழுத்தம் காரணமாக உடலின் இயற்கை நிகழ்வு தொந்தரவு தரும் விதமாக மாறியுள்ளது.

பெரும்பாலும் முறையற்ற மாதவிடாய், வாழ்க்கை முறை மாற்றத்தினால் ஏற்படுகிறது. துரித உணவுகள் மற்றும் உடற்பயிற்சி இன்மை இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் உடல் எடை அதிகரித்து ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டு சினைப்பை நீர்க்கட்டி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

உலக சுகாதார மையம் திருமண வயதில் இருக்கும் பெண்களில் 8- 13 சதவீதம் பேர் pcos பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 70 சதவீதம் பேர் இன்னும் pcos பிரச்சனை இருப்பதை கண்டறியாமல் உள்ளனர் என்றும் கூறுகின்றது.


இந்த pcos பிரச்சனையால் பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாய் 90 நாட்களுக்கு மேல் ஏற்படாமல் இருப்பது முகம், மார்பு, முதுகு அல்லது பிட்டம் ஆகியவற்றில் அதிக ரோம வளர்ச்சி, தலைமுடி உதிர்தல், முகப்பரு, கழுத்து, அக்குள், மார்பகம் மற்றும் தொடை இடுக்குகளில் கருமை நிறம், கவலை, மனச்சோர்வு, உடல் எடை அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படுகிறது.

இதை சீர் செய்யாமல் விடும் பட்சத்தில் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், எண்டோமெட்ரியல் புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பெண்கள் தங்கள் வேலைகளுக்குக்கிடையில் சத்தான உணவு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி Pcos பிரச்சனை ஏற்படாமல் தடுப்பது மிகவும் சிறந்ததாகும்.

கழற்சி விதையை பொடித்து, அதற்கு கால் எடை அளவு மிளகு பொடி சேர்த்து தினம் 1/2 ஸ்பூன் காலை மாலை தேனில் கலந்தோ மோரில் கலந்தோ அருந்தி வரலாம்.

கருஞ்சீரகம், மரமஞ்சள், சதகுப்பை சம அளவு எடுத்து பொடி செய்து, வெல்லம் சிறிது சேர்த்து 1/2 ஸ்பூன் அளவு காலை மாலை சோம்பு கஷாயத்தில் அருந்தலாம்.

நடுத்தர வயது பெண்கள் Adenomyosis என்னும் கருப்பை சதைகட்டியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மாதவிடாயின்போது கடுமையான வயிற்று வலி, அதிகமான உதிரப்போக்கு, இடுப்பில் கத்தியால் வெட்டுவது போன்ற கூர்மையான வலி, உடலுறவின் போது வலி போன்றவை ஏற்படுகிறது.

பெரும்பாலும் மாதவிடாய் நின்ற பிறகு Adenomyosis அறிகுறிகள் மறைந்துவிடும். ஏனெனில் எண்டோமெட்ரியல் திசு வளர்ச்சியை தூண்டுவிக்கும் ஈஸ்ட்ரோஜன் என்ற பெண் ஹார்மோன் மாதவிடாய் சுழற்சி முடிவுற்ற பிறகு குறையத்துவங்குகிறது. இதன் காரணமாக குறிகுணம் குறையத்துவங்கும்.

கலியாண முருங்கை இலையின் சாறை தொடர்ச்சியாக 2 அல்லது 3 மாதங்கள் வரை காலை மாலை இருவேளையும் எடுத்துக்கொள்ளலாம். இது மாதவிடாயின் போது ஏற்படும் வலியை குறைப்பதுடன் கட்டி குறைய வழி வகுக்கும்.

மேலும் வாழைப்பூச்சாறு, அருகம்புல் சாறு, இலவங்கப்பட்டை கஷாயம், ஆடாதோடை இலை கற்கம், கீழாநெல்லி இலை கற்கம் போன்றவை அளவு கடந்து போகும் மாதவிடாயை கட்டுக்குள் கொண்டு வரும்.

அடுத்ததாக 30 முதல் 50 வயது வரை உள்ள பெண்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் நார்த்திசு கட்டி என்னும் Uterine Fibroid ஆல் பாதிக்கப்படுகின்றனர். கருப்பையில் உருவாகும் இந்த மென்மையான கட்டிகள் சிலருக்கு அறிகுறிகள் ஏதும் ஏற்படுத்துவதில்லை. சிறு விதை அளவு முதல் பெரிய பந்து அளவு வரை இருக்கிற இக்கட்டிகளால் அதிக வலி மற்றும் அதிக குருதிபெருக்கு ஏற்படும். கட்டிகள் பெரிதாக வளரும்போது சிறுநீர்ப்பையை அழுத்தும். அதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க ஏற்படும். சிலருக்கு மலச்சிக்கல், தொடர்ச்சியான கருச்சிதைவு, கருவுறாமை கூட ஏற்படுகிறது.


பொதுவாக இது ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களின் சமநிலையின்மை மற்றும் மரபணு மாற்றங்களால் ஏற்படுகிறது என கருதப்படுகிறது. புற்றுநோயாக மாறும் வாய்ப்பு இக்கட்டிகளில் மிக குறைவாகவே உள்ளது.

உலகில் 10 சதவீத பெண்கள் Endometriosis என்னும் நோய் நிலையால் பாதிக்கப்படுகின்றனர். கருப்பையின் புறணி திசு போன்ற ஒரு திசு கருப்பை குழிக்கு வெளியே வளரும்போது Endometriosis என்று அழைக்கப்படுகிறது. மாதவிடாய் காலத்தில் கருப்பை திசுக்களை போலவே இந்த திசுவும் சிதைந்து உதிரபோக்கு ஏற்படும். இருப்பினும் சில நேரம் இந்த இரத்தம் தேங்கி, சுற்றியுள்ள திசுக்களின் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது.இதனால் மாதவிடாயின் முதல் 2 நாட்கள் கடுமையான தசைப்பிடிப்புகள் ஏற்படும்.

மேலும் மாதவிடாயின் போதும், மாதவிடாய்களுக்கு இடையிலும் அதிக உதிரப்போக்கு, மலம் மற்றும் சிறுநீரில் இரத்தம், நீங்காத சோர்வு மற்றும் களைப்பு ஏற்படும்.

அடுத்தது கருப்பை வாய் அழற்சி (cervicitis) குறித்து காணலாம். கருப்பை வாயில் வீக்கம் ஏற்படும்போது அது கருப்பை வாய் அழற்சி என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய் தொற்று பரவக்கூடிய அல்லது பரவாத வகையில் இருக்கலாம். அறிகுறிகள் பெண்களுக்கு பெண்கள் மாறுபட்டு காணப்படுகிறது.

கருப்பை வாய் அழற்சியால் சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல், மாதவிடாய் இடைநாட்களில் குருதிகசிவு, காய்ச்சல், வயிற்று வலி போன்ற அறிகுறிகள் காணப்படும். பெண்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் கருப்பை வாய் அழற்சியால் பாதிக்கப்படுகிறார்கள்.

தைராய்டு ஹார்மோனில் மாற்றம் ஏற்பட்டாலும் மாதவிடாய் பாதிக்கப்படுகிறது. மாதவிடாய் சரியாக இருப்பதற்கு தைராய்டு ஹார்மோனின் சமநிலை அவசியமாகும். இச்சுரப்பி இனப்பெருக்க உறுப்புடன் நேரடி தொடர்பை கொண்டுள்ளது. எனவே Hypothyroidism மற்றும் Hyperthyroidism இரண்டும் மாதவிடாய் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.

நுணா இலை 3 அல்லது 5 எடுத்து, அதனுடன் தனியா 1 ஸ்பூன் சேர்த்து கஷாயம் செய்து தினமும் காலை பருகிவரலாம். இதனால் தைராய்டு ஹார்மோனின் சமநிலையின்மை சீர் செய்யபடுகிறது.

முறையற்ற மாதவிடாய்க்கு மற்றொரு காரணம் இடுப்பு அழற்சி நோய் (Pelvic Inflammatory Disease). இந்த அழற்சி நோய் பெரும்பாலும் கிளாமிடியா, கொனோரியா போன்ற நோய் தொற்றால் ஏற்படுகிறது.


இது இனப்பெருக்க உறுப்புகளான கருப்பை, சினைப்பை போன்றவற்றை பாதிக்கும். வயிற்றின் கீழ் மந்தமான வலி, மஞ்சள் அல்லது பச்சை நிற யோனி கசிவு, மாதவிடாய் ஒழுங்கின்மை, மாதவிடாய் சுழற்சிகளுக்கு இடையில் குருதிபோக்கு, குமட்டல், வாந்தி போன்றவை குறிகுணங்களாக உள்ளது. பெரும்பான்மையான பெண்களுக்கு குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாக இது உள்ளது. இந்நோய் சிலருக்கு எண்டோமெட்ரியல் பயாப்ஸி, கருத்தடை சாதனம் பொருத்துதல், கருக்கலைப்பு போன்றவைகளுக்கு உட்படுவதால் ஏற்படுகிறது. வெட்சி பூ என்றழைக்கப்படும் இட்லி பூவை சிறிது எடுத்து கஷாயம் செய்து அதில் சிறிது கற்கண்டு சேர்த்து பருகி வர இடுப்பு பகுதியில் ஏற்பட்ட தாபிதம் சிறிது குறையும்.

மேலும் ஆளிவிதையை பொடி செய்து பாலிலிட்டு காய்ச்சி, சர்க்கரை சேர்த்து கிளறி கொட்டைபாக்களவு எடுத்து வர இடுப்பு அழற்சியால் ஏற்படும் குறிகுணங்கள் நன்கு குறையும்.

பெரும்பாலான பெண்கள் 50 வயதிற்கு மேல் கருப்பை, கருப்பைவாய், மற்றும் சினைப்பை புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோய் எந்த வயதிலும் பெண்களுக்கு வர கூடும். ஆனால் பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களையே தாக்குகிறது. தொடக்க நிலையில் குறிகுணங்கள் புறக்கணிக்கத்தக்க அளவு அற்பமானதாக இருப்பதால் நோயாளிகள் அதில் சிறிதும் கவனம் செலுத்துவதில்லை. வலிகள் ஆரம்பத்தில் இருப்பதில்லை. கசிவுகள் மட்டும் ஓரளவிற்கு அதிகப்படும். முதலில் அளவு கடந்து காணப்படுகின்ற வெண் தீட்டு பின்பு இரத்தம் கலந்து காணப்படும். பின்பு கசிவுகள் மஞ்சள் பழுப்பு வண்ணத்தை பெறுகின்றன. தசைகள் அழுகத்துவங்கியவுடன் கசிவுகள் பழுப்பு நிறமாகின்றன. இவற்றில் நோய் கிருமிகள் சேரும்போது முடைநாற்றம் வீசத் தொடங்கும்.

சிலசமயம் மாதவிடாய் காலங்களில் உதிரம் போகும் காலம், அளவு கடந்து காணப்படுகிறது அல்லது மாதவிடாய் ஏற்பட்ட ஓரிரண்டு நாட்களில் மீண்டும் இரத்தம் கலந்த செங்கல் நிற மங்கலமான கசிவு காணப்படுகிறது. புணர்ச்சியின் பின்பும், மலத்தை முயற்சி செய்து கழிக்கும்போதும் சில சமயங்களில் உதிரப்போக்கு ஏற்படுகிறது. நாள்போக்கில் அருகிலுள்ள உறுப்புகளுக்கும் பரவி அதற்கேற்ப குறிகுணம் ஏற்படுகிறது. எனவே இந்த நோயை பொறுத்தவரை ஆரம்பத்திலேயே கண்டு உறுதிசெய்து, தொடக்கத்திலேயே வளர்ச்சியை தடை செய்ய வேண்டும்.

எனவே 35 முதல் 65 வயது வரை உள்ள பெண்கள் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை PAP மற்றும் HPV (Human Papilloma Virus) பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். இந்த இரண்டு பரிசோதனைகளுக்கும் மருத்துவர்கள் கருப்பை வாயில் இருந்து மாதிரியை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி அசாதாரண செல்கள் கண்டறிகின்றனர். அதன் மூலம் கர்ப்பப்பை வாய் புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரி செய்யலாம்.

மேலும் மாதவிடாய் கோளாறுகளான அதிக உதிரபோக்கு அல்லது குறைவான உதிரபோக்கு, மாதவிடாய்க்கு இடையில் குருதி கசிவு, மாதவிடாயின் போதோ அதற்கு முன்னர் பின்னரோ அதிகப்படியான வலி போன்ற குறிகுணங்கள் உள்ளவர்கள் மருத்துவர்களை அணுகி அவர்கள் தேவைக்கேற்ப பரிந்துரைக்கும் இடுப்புப்பகுதி பரிசோதனைகளை தயங்காமல் செய்து கொள்ளவேண்டும்.

பின்பு நோய்நிலைக்கேற்ப, மூலிகை மருத்துவம் விரும்புபவர்கள் சித்த மருத்துவ துறையில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு முடித்த அருகிலுள்ள மருத்துவர்களை அணுகி அவர்கள் கூறும் உணவு முறை, வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் மருத்துவ முறையை பின்பற்றி நலம் பெறலாம்.

Tags:    

Similar News