சிறப்புக் கட்டுரைகள்

முன் ஜென்ம தோஷங்கள்!

Published On 2024-05-07 10:30 GMT   |   Update On 2024-05-07 10:31 GMT
  • பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தான் அவரது ஆத்மாவின் பயணங்கள் இருக்கும்.
  • கர்ம தோஷம் அடுத்தடுத்த பிறவியிலும் கடல் அலைபோல வந்து கொண்டே இருக்கும்.

ஒருவர் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தான் அவரது ஆத்மாவின் அடுத்தடுத்த பயணங்கள் இருக்கும். ஒருவர் அதிக புண்ணியங்கள் செய்தால் அடுத்த பிறவிகளில் அவரது பிறப்பு மிகவும் சிறப்புகள் கொண்டதாக இருக்கும். அதேசமயத்தில் ஒருவர் அதிக பாவங்கள் செய்தால் அது அவரது அடுத்த பிறவிகளிலும் தொடரும்.

ஒருவர் செய்யும் மிகவும் கொடூரமான பாவ செயல்களுக்கு நிவாரணம் தேடிக் கொள்ளாவிட்டால் அது கர்ம தோஷமாக மாறி விடும்.

அந்த கர்ம தோஷம் அடுத்தடுத்த பிறவிகளிலும் கடல் அலைபோல வந்து கொண்டே இருக்கும். நிறைய பேர், வாழ்க்கையில் கஷ்டப்படும் போது அவர்களுக்கு தங்களது கர்ம தோஷத்தின் பாதிப்புகள் பின்தொடர்கின்றன என்பது தெரியாமலேயே இருக்கும்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஒருவர் முன் ஜென்மத்தில் தேவையில்லாத பாவங்கள், சாபங்களை சம்பாதித்து இருந்தால் அவை அடுத்த பிறவிகளில் நிச்சயம பாடாய்ப்படுத்தி விடும். குறிப்பாக 12 வகை சாபங்கள் அடுத்தடுத்த பிறவிகளில் தோஷங்களாக மாறி தொடரும் என்று ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பெண் சாபம், பிரேத சாபம், பிரம்ம சாபம், சப்த சாபம், பித்ரு சாபம், பசு சாபம், பூமி சாபம், நதி சாபம், விருட்சம் சாபம், குலதெய்வ சாபம், ரிஷி சாபம், தேவ சாபம் ஆகிய 12 சாபங்களும் அடுத்த பிறவிகளில் தோஷமாக மாறும் என்று நமது முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.

பொதுவாக பாவங்கள் செய்யக்கூடாது. மற்றவர்களிடம் சாபங்கள் வாங்கக் கூடாது என்பார்கள். சாபங்கள் வாங்கியிருந்தால் அது கர்ம தோஷமாக மாறுவதை தடுக்கவே இயலாது. அதனால்தான் நன்கு பக்குவம் அடைந்தவர்கள் ஏதாவது துன்பம் நேரிடும்போது, `அனைத்துக்கும் காரணம் நம் கர்மா' என்று சொல்வதை கேட்டு இருப்பீர்கள்.

 முக்கிய விஷயங்களில் ஒருவருக்கு தொடர்ந்து தடைகள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தால் அதை கர்ம தோஷம் என்று மிக உறுதியாக சொல்லிவிட முடியும்.

சில கர்ம தோஷங்களை ஒருவரது பிறந்த நேரத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்ட ஜாதகத்தை வைத்துதான் கண்டறிய முடியும். அந்த வகையில் ஒருவர் முன்ஜென்மத்தில் என்ன பாவம் செய்தார் என்பதை அவரது ஜாதகம் துல்லியமாக காட்டிக்கொடுத்து விடும்.

அந்த கர்ம தோஷங்களை உங்கள் ஜாதகத்தை பார்த்து நீங்களே தெரிந்து கொள்ள முடியும். ஒருவர் முன் ஜென்மத்தில் ஏதாவது பாவங்கள் செய்து கர்மாவை சேர்த்து வைத்திருந்தால் அது இந்த ஜென்மத்தில் 5-ம் இடத்தில் வந்து நமக்கு நடத்தி காட்டி கொடுத்து விடும். எனவேதான் 5-ம் இடத்தை பாவ பூர்வ புண்ணிய இடம் என்று சொல்கிறார்கள்.

5-ம் இடத்தை வைத்து ஒருவரது ஜாதகத்தின் முன் ஜென்ம நிலையை கண்டுபிடித்து விடமுடியும். சூரியன், சந்திரனுடன் ராகு-கேது இருந்தால் அதை முன்ஜென்ம பித்ரு தோஷம் என்று சொல்வார்கள். அதுபோல 9-ம் இடத்தை வைத்தும் கர்ம தோஷங்களை ஜோதிடர்கள் கணிப்பது உண்டு.

ஒருவருக்கு மிக மிக கடுமையான தோஷங்கள் இருந்தால் அவரது 5-ம் வீடு, 5-ம் அதிபதி, 9-ம் வீடு, 9-ம் அதிபதி ஆகியவற்றை சரியானபடி ஆய்வு செய்தால் அவரது கர்ம தோஷங்களை கண்டுபிடித்து விட முடியும்.

கர்ம தோஷங்களை அடுத்தடுத்த பிறவிகளுக்கு கொண்டு செல்வது சனி கிரகம்தான். மற்ற கிரகங்களுக்கும் இதில் பங்களிப்பு உண்டு.

என்ன கர்ம தோஷம் ஏற்பட்டு இருக்கிறது? அதன் பாதிப்பு எப்படி இருக்கிறது? என்ன பரிகாரம் செய்தால் அந்த கர்ம தோஷங்களில் இருந்து விடு படலாம் என்பதை தெரிந்து கொண்டால்தான் முன் ஜென்ம தோஷங்களுக்கு பரிகாரம் தேடிக் கொள்ள முடியும்.

 முன் ஜென்ம பாவங்கள் கர்ம தோஷமாக மாறி ஆட்டிப் படைப்பதாக நினைத்தால் நிச்சயமாக வழிபாடுகளை அதிகரிக்க வேண்டும்.

ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று நமது இஷ்ட தெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு ஒருமனதுடன் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

பின்னர் வீட்டுக்கு வந்து குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். குலதெய்வம் படத்தின் முன்பு அரசமர இலைகளை மூன்று மூன்றாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றில் சிறிது உப்பு வைத்து உதிரி பூக்களையும் சுற்றி போட்டு அலங்கரித்துக் கொள்ள வேண்டும்.

அந்த 9 இலைகள் மீதும் 9 அகல் விளக்குகளை வைத்து தீபம் ஏற்றி மனதார குல தெய்வத்தை அழைத்து வழிபட வேண்டும். இந்த தீப வழிபாட்டை ஒரு தடவை செய்தால் மட்டும் போதாது. 9 அமாவாசை நாட்களில் தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த வழிபாடு மூலம் நம்மை பிடித்து இருக்கும் முன் ஜென்ம கர்ம தோஷ வினைகளில் இருந்து விடுபட முடியும்.

ஆலயங்களுக்கு வழிபாடு செய்ய செல்லும்போது கர்ம தோஷங்களுக்காக நீங்கள் என்ன பரிகார பூஜைகள் செய்தாலும் சண்டிகேஸ்வரரை மறக்காமல் வணங்க வேண்டும். சண்டிகேஸ்வரரை வணங்காமல் கர்ம தோஷ பரிகார பூஜைகள் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்காது.

ஏனெனில் முன் ஜென்ம பாவங்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட கர்ம தோஷத்தை விரட்டியடிக்கும் ஆற்றல் கொண்டவராக சண்டிகேஸ்வரர் கருதப்படுகிறார்.

கர்ம தோஷத்துக்காக சண்டிகேஸ்வரரை வழிபடும் போது அவருக்கு வஸ்திரம் சாத்தி வழிபடுவது மிகவும் நல்லது. அன்றைய தினம் அவரை வேண்டிக் கொண்டு அன்னதானம் செய்யலாம். இந்த பூஜை முன் ஜென்ம கர்ம தோஷங்களை உடனடியாக நீங்க செய்யும் ஆற்றல் கொண்டது.

 தமிழகத்தில் முன் ஜென்ம கர்ம தோஷங்களை போக்கும் ஆற்றல் கொண்டதாக 6 ஆலயங்கள் கருதப்படுகின்றன. அந்த 6 ஆலயங்கள் பற்றிய விவரம் வருமாறு:-

1. திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோவில்-கடன், சத்ரு, நோய் போன்றவற்றைத் தீர்க்கும் சக்தி வாய்ந்தது இந்த ஆலயம்.

2. கும்பகோணம் நாச்சியார் கோவில் அருகில் உள்ள ராமநாத சுவாமி பர்வதவர்த்தினி அம்மன் ஆலயம். இது மாந்தி பகவான் பரிகாரத்தலம் ஆகும்.

3. திருப்பாம்புரம் சேஷ புரீஸ்வரர் கோவில்- ராகு-கேது பரிகாரத் தலம்.

4. வைத்தீஸ்வரன் கோவில்- இது செவ்வாய் பரிகார தலமாகும்.

5. திருத்தேவன்குடியில் உள்ள கற்கடகேஸ்வரர் கோவில். இது அனைத்து முன் ஜென்ம பாவங்களை யும் போக்கும் ஆலய மாகும்.

6. திருவிடைமருதூர் மகாலிங்கம் கோவில். இது பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் ஆலயமாகும்.

இவை அனைத்துக்கும் மேலாக குல தெய்வ ஆலயத்துக்கு சென்று நைவேத்தியங்கள் படைத்து பூஜைகள் செய்தால் கர்ம வினைகள் பாதிப்பை ஏற்படுத்துவதை கட்டுப்படுத்த முடியும். எனவே குல தெய்வ வழிபாட்டை மறக்காதீர்கள்.

சிலருக்கு தங்களது ஜாதக அடிப்படையில் சில குறிப்பிட்ட ஆலயங்களில் சில குறிப்பிட்ட பரிகாரங்களை செய்தால் பலன் கிடைக்கும் நிலை இருக்கும். அதை தெரிந்து கொண்டு செய்தால் பூர்வஜென்ம பாவங்கள் கர்மாவாகி மாறியிருப்பதை கட்டுப்படுத்தலாம் அல்லது பாதிப்பை குறைத்துக் கொள்ளலாம்.

Tags:    

Similar News

தார தோஷம்