அரசியலில் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் கிரக அமைப்புகள்!
- வியாழ பகவான் வலுவான இடத்தில் அமைந்து விட்டால் அதிர்ஷ்டமான சூழ்நிலைகளை தங்கு தடையின்றி கொடுத்து கொண்டே இருப்பார்.
- சந்திரனுக்கு திரிகோணம் எனப்படும் 5-ம் வீட்டில் அல்லது 9-ம் வீட்டில் குரு இருந்தால் குரு சந்திரயோகம் உண்டாகும்.
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் பரபரப்பாக வந்து கொண்டு இருக்கின்றன. எதிர்பார்த்த தலைவர்கள் ஏமாற்றம் கொடுத்து தோல்வியை தழுவி இருப்பார்கள். எதிர்பாராத வேட்பாளர்கள் வெற்றிகனியை தட்டி பறித்து இருப்பார்கள்.
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா..... என்று சொல்வார்கள். ஆனால் இந்த வெற்றிக்கும், தோல்விக்கும் பின்னணியில் அரசியல்வாதிகளின் திட்டமிடலும், உழைப்பும், நிர்வாக திறமையும், பணம் செலவழிப்பதும் அடங்கி இருப்பதாக பொதுவாக சொல்வார்கள்.
சில வேட்பாளர்களுக்கு, "நாம் ஏன் தோற்றோம்?" என்பது புரியாத புதிராக இருக்கும். "எப்படி தோற்றோம்?" என்று மண்டையை பிய்த்துக்கொண்டு யோசிப்பார்கள். ஆனால் தோல்விக்கான உண்மையான காரணம் தெரியவே தெரியாது. ஜோதிடர்களை கேட்டால் ஒரே வரியில் 'கர்ம வினை' அல்லது 'தோஷங்களாக இருக்கும்' என்று சொல்வார்கள்.
ஒருவர் வாழ்க்கையில் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி பெற வேண்டுமானால் அவரது ஜென்ம நட்சத்திரத்திற்கு ஏற்ப கிரகங்களின் தாக்கங்கள் அமைய வேண்டும். இல்லை யெனில் தேர்தல் மட்டுமல்ல எந்த விஷயமாக இருந்தாலும் தோல்விதான் கிடைக்கும்.
ஒருவரது தனிப்பட்ட அரசியல் வெற்றி போன்ற சாதனைகளுக்கு எந்த கிரகம் பொறுப்பு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப வழிபாடுகள் செய்தால் தேர்தல் வெற்றிகளை எளிதாக அறுவடை செய்ய முடியும். பொதுவாக வெற்றிக்கான முக்கிய கிரகமாக சூரிய பகவானின் அமைப்பு சொல்லப்படுகிறது.
ஒருவரது தனிப்பட்ட திறமை, ஆற்றல், முடிவெடுக்கும் திறன், நம்பிக்கையான செயல்பாடுகள், சக ஊழியர்களை பணியாற்ற வைக்கும் பாங்கு போன்றவை எல்லாமே சூரியனை பின்பற்றியே இருக்கும். இன்னும் சொல்லப்போனால் வெற்றி அடைவதற்கான குணங்களை அள்ளித்தரும் ஆற்றல் சூரிய பகவானுக்கு மட்டுமே உண்டு.
எனவே அரசியல் உள்பட வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புபவர்கள் சூரியன் வழிபாட்டை தவறாமல் செய்து வரவேண்டும். சூரியனை போலவே வியாழன் கிரகமும் இந்த விசயத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
ஏனெனில் ஒருவரது வெற்றியில் முக்கிய பங்கு வகிப்பதில் வியாழன் கிரகத்தை தவிர்க்கவே முடியாது. ஒருவரது ஜாதகத்தில் வியாழன் நல்ல பலன் தரும் இடத்தில் அமர்ந்திருந்தால் வெற்றிக்கான வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கும். அது மட்டுமல்ல. அரசியலில் எப்படி செயல்பட வேண்டும் என்ற அபரிமிதமான ஞானத்தை கொடுப்பது வியாழன்தான்.
அரசியலில் உச்சம் தொட்ட தலைவர்களின் ஜாதக கட்ட அமைப்புகளை ஆய்வு செய்து பாருங்கள். அவர்களது ஜாதகத்தில் வியாழனின் பங்களிப்பு மிக மிக சிறப்பானதாக இருக்கும். அதுபோல தேர்தலில் தோல்வி அடையாத தலைவர்களின் ஜாதகங்களை ஒரு கண்ணோட்டமாக அலசி பார்த்தால் அவர்களுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் வியாழன் துணை நிற்பது தெரியும்.
வியாழ பகவான் வலுவான இடத்தில் அமைந்து விட்டால் அதிர்ஷ்டமான சூழ்நிலைகளை தங்கு தடையின்றி கொடுத்து கொண்டே இருப்பார்.
சிலருக்கு அவர்களது ஜாதக அமைப்புபடி செவ்வாய் கிரகம் வெற்றியை கொடுக்கும் கிரகமாக அமையும். பொதுவாக ஒருவரது செயல்பாட்டை, அவர்களது ஆர்வத்தை தீர்மானிக்கும் சக்தி செவ்வாய் கிரகத்துக்கு மட்டுமே உண்டு. மேலும் செவ்வாய் கிரகம் சரியான இடத்தில் அமர்ந்து இருந்தால் அரசியலில் எவ்வளவு பெரிய தடைகள் வந்தாலும் அதை உடைத்தெறியும் மன உறுதியை கொடுக்கும்.
அதுபோல சிலருக்கு சனி கிரகம் வெற்றியை கொடுப்பதோடு மட்டுமின்றி செல்வாக்கை உயர்த்தவும் அடிப்படையாக இருக்கும். சிலருக்கு சனி பகவானின் பார்வை காரணமாக அரசியலில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்காது. ஆனால் அதே சனி பகவான் வெற்றியின் இலக்கை நோக்கி ஒருவரை தள்ளிக்கெண்டு இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே சனியின் பார்வை மற்றும் இட அமைப்புகள் சரியாக இல்லாதபட்சத்தில் அரசியல்வாதிகள் சனி பகவானை அவசியம் வழிபட வேண்டும். சனீஸ்வரனுக்குரிய அர்ச்சனைகளை செய்து வர வேண்டும். வாய்ப்பு இருப்பவர்கள் சனீஸ்வரனை மனம் மகிழ செய்யும் வகையில் தானங்கள் செய்தால் தோஷங்களை விலக்கி அரசியல் பார்வையில் முன்னேற்றத்துக்கு செல்ல முடியும்.
அரசியலை பொறுத்தவரை சிலர் திடீரென புதிய புயல் போல வருவார்கள். வந்த வேகத்திலேயே அதிகாரம் மிக்க பதவிகளையும் கைப்பற்றும் யோகத்தை பெறுவார்கள். அவர்களது ஜாதகத்தை ஆய்வு செய்து பார்த்தால் சூரியனும், சந்திரனும் உரிய இடத்தில் அமர்ந்து அவர்களை சரியான பாதையில் கொண்டு சென்று இயக்குபவர்களாக இருப்பார்கள்.
அரசியலில் தேர்தல் சமயத்தில் மிக எளிதாக வெற்றி பெறுபவர்களுக்கு கஜகேசரி யோகம், குரு சந்திர யோகம், அம்ச யோகம், அரசாளும் யோகம் போன்ற யோகங்கள் இருக்கும். ஒருவரது ஜாதகத்தில் சந்திரனுக்கு குருகேந்திரம் எனும் 4-ம் வீட்டில் அல்லது 7-ம் வீட்டில் அல்லது 10-ம் வீட்டில் இருந்தால் கஜகேசரி யோகம் உண்டாகும்.
சந்திரனுக்கு திரிகோணம் எனப்படும் 5-ம் வீட்டில் அல்லது 9-ம் வீட்டில் குரு இருந்தால் குரு சந்திரயோகம் உண்டாகும். சில அரசியல்வாதிகள் 50 வயதுக்கு மேல் தொடர்ந்து போட்டியிடும் தொகுதிகளில் எல்லாம் வெற்றி பெறுவார்கள். இதற்கு காரணம் அவர்களது ஜாதகத்தில் இந்த குரு சந்திர யோகம் வலுவாக இருக்கிறது என்று அர்த்தம்.
அதுபோல ஜாதகத்தில் குரு லக்கனத்திற்கு கேந்திரம் எனப்படும் 4, 7, 10-ம் இடங்களில் குரு பகவான் உச்சம் பெற்று இருந்தால் அம்ச யோகம் கிடைக்கும். இந்த யோகம் இருந்தால் தேர்தலில் போட்டியிடும்போது எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் அவர் வெற்றி பெறுவார்.
சில அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட சீட் வாங்குவதற்கு போராடுவார்கள். ஆனால் அம்ச யோகம் இருந்தால் அவர்களை தேடி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு தானே வந்து நிற்கும். சிலரது ஜாதகத்தில் சூரியனும், செவ்வாயும் பலம் பெற்று லக்கனத்தில் இருந்து 6, 7, மற்றும் 9-ம் இடங்களில் அதிபதிகளாக ஆட்சி பெற்று இருப்பார்கள். இத்தகைய அமைப்பை ஒருவர் பெற்று இருந்தால் அரசியலில் அவரை அசைக்க முடியாது. மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவராக அவர் வலம் வருவார்.
இவையெல்லாம ஜாதக ரீதியாக அமைய வேண்டுமானால் குல தெய்வ வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். பொதுவாக குல தெய்வத்தை வணங்காதவர்களுக்கு தேர்தலில் தொடர் வெற்றிகள் கிடைப்பது இல்லை. தேர்தலில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் மட்டும் போதாது. மனதில் தைரியமும் இருக்க வேண்டும். அந்த தைரியத்தை தருவது தலவிருட்ச வழிபாடு.
ஆலயங்களுக்கு செல்லும்போது பிரகாரங்களை சுற்றி வருகையில் தல விருட்சத்தை பார்க்கலாம். தல விருட்சமாக வன்னி மரம் இருந்தால் விட்டு விடாதீர்கள். வன்னி மரத்தை ஒரு அரசியல்வாதி எந்த அளவுக்கு வழிபடுகிறாரோ அந்த அளவுக்கு அவருக்கு வெற்றிக்கான வழிகள் கிடைத்துக்கொண்டே இருக்கும். குறிப்பாக வளர்பிறை தசமி திதியில் வன்னி மரத்தை 9 தடவை சுற்றி வழிபட்டால் நாடாளும் அரச யோகம் கிடைக்கும்.
சிலரது ஜாதக அமைப்புபடி அரசியலில் அடுத்தடுத்து தோல்வி வந்தாலும் ஆலயங்களுக்கு சென்று ஆஞ்சநேயரை வழிபட்டால் தோஷங்கள் அனைத்தும் நீங்கி அரசியலில் முன்னேற்ற படிகளில் காலடி எடுத்து வைக்க முடியும். ஆலயங்களுக்கு சென்று வழிபட விரும்பாத அரசியல்வாதிகள் வீட்டில் இருந்து கொண்டே அனுமன் படத்துக்கு அலங்காரம் செய்து நைவேத்தியம் படைத்து அனுமன் மகிழும் போற்றிகளையும், பாடல்களையும் பாடி வந்தாலே போதும் அடுத்த தேர்தலில் கைமேல் பலன்களை பெறுவார்கள்.
இந்த தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. இனி வரும் நாட்களில் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மனை தினமும் இஷ்ட தெய்வமாக நினைத்து வழிபட தொடங்குங்கள். நாட்கள் செல்ல... செல்ல... கட்சியிலும், அரசியல் பணிகளிலும் புதிய பதவிகள் தேடி வருவதை கண்கூட பார்ப்பீர்கள்.
சிலருக்கு அரசியலுக்குரிய ஜாதக கட்ட அமைப்புகள் நன்றாக இருக்கும். ஆனால் கூடவே இருந்து முதுகில் குத்துபவர்களால் அவர்கள் அரசியலில் உரிய பதவிகளை பெற முடியாமல் இருப்பார்கள். குறிப்பாக தேர்தலில் போட்டியிடுவது என்பது அவர்களுக்கு கனவாகவே போய் விடுமோ? என்ற கவலை ஏற்பட்டு விடும். அத்தகைய மனநிலையில் இருப்பவர்களுக்கு கர்மவினை தோஷங்கள் தான் அதிகமாக இருக்கும் என்று ஜோதிட நிபுணர்கள் சொல்கிறார்கள்.
இத்தகைய கர்மவினை தோஷங்களை விரட்ட வேண்டுமானால் ராகு பகவான் ஆட்சி செய்யும் ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகள் செய்யுங்கள். ராகு பகவானுக்குரிய பரிகாரங்களை செய்யுங்கள். அரசியலில் புதிய அனுபவத்தை நீங்கள் பெற முடியும்.
அரசியலில் வெற்றியும் பதவியும் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் சில ஆலயங்களுக்கு தவறாமல் செல்ல வேண்டும்.
அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயம், வேதாரண்யம் திருமறைகாடர் ஆலயம், செருகுடி சூட்சும புரீஸ்வரர் ஆலயம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், சதுரங்கஈஸ்வரர் ஆலயம், திருவாணைகாவல் ஆலயம், மதுரை மீனாட்சி ஆலயம், ஸ்ரீவை குண்டம் ஆலயம், சென்னை கொளப்பாக்கம் ஆலயம், கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோவில் ஆலயம், சென்னை ஆண்டார்குப்பம் ஆலயம் போன்றவை அரசியல்வாதிகளுக்கு வெற்றி தரும் ஆலயம் ஆகும்.
எந்த ஒரு அரசியல்வாதி இந்த ஆலயங்களுக்கு சென்று மனமுருக வழிபடுகிறாரோ அவர்களது தோஷங்கள் எல்லாம் விலகி இனி வெற்றிதான் கிடைக்கும். வெற்றி பெற்றவர்களுக்கு அரசாங்கத்தில் உயர்ந்த பதவி தேடி வரும்.