சிறப்புக் கட்டுரைகள்

மூக்கில் ஏற்படும் பிரச்சனைகளும் சித்த மருத்துவமும்

Published On 2024-04-19 08:49 GMT   |   Update On 2024-04-19 08:49 GMT
  • மூக்கின் மேல் பகுதியில் கண்ணுக்குத் தெரியாத ரோம அமைப்பில் வாசனையை அறியும் உணர் இழைகள் அமைந்துள்ளன.
  • ஜாதிக்காயை குழம்பு போல் அரைத்து மூக்கின் மேல் பற்றுப் போட்டாலும் மூக்கில் நீர் வடிதல், தும்மல் குணமாகும்.

சுவாச மண்டலத்தின் முக்கியமான பகுதி மூக்கு. அதோடு வாசனையைப் பகுத்தறியும் உறுப்பும் மூக்குதான். மூக்கு முகத்திற்கு அழகைத்தருவதில் பெரும் பங்கு வகிக்கிறது எனலாம். செவிமடல்களைப் போல் மூக்கின் வெளிப்பகுதி மடியக்கூடிய தன்மையுள்ள குறுத்தெலும்பால் ஆக்கப்பட்டுள்ளது. உட்பகுதி மென்மையான சிலேத்தும் படலத்தால் உண்டாக்கப்பட்டுள்ளது. பக்கத்திற்கு ஒன்றாக அமைந்துள்ள மூக்குத் துவாரம் தொண்டையில் இணைகிறது. காதுத் துவாரமும் தொண்டையில் குழாய் போன்ற அமைப்புடன் இணைகிறது.

மூக்கின் மேல் பகுதியில் கண்ணுக்குத் தெரியாத ரோம அமைப்பில் வாசனையை அறியும் உணர் இழைகள் அமைந்துள்ளன. அவை நுண்ணிய நரம்புகள் மூலம் மூளையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. இவ்வுணர் இழைகள் ஆயிரக்கணக்கில் சிலேத்தும் படலத்தில் பதித்து வைக்கப்பட்டுள்ளன. மண்டை ஓட்டிற்கும் மூக்கின் இணைப்புத் தசைகளுக்கும் இடையே மூக்கைச் சுற்றி வெற்றிடங்கள் உண்டு. இவைகளைத்தான் சைனஸ் (காற்றறைகள்) என அழைக்கிறோம்.

மூக்கு வாசனை அறிய உதவும் உணர்ச்சி மிகுந்த உறுப்பாக இருப்பதால் உட்பகுதியில் சிலேத்தும் படலத்திற்கு அருகே நிறைய ரத்தக் குழாய்களும் நரம்புக்கற்றைகளும் நிறைந்துள்ளன. இவை காற்றை வடிகட்டி அனுப்பும் தன்மையைக் கொண்டவை. அவ்வாறு வடிகட்டப்பட்ட காற்றில் நச்சுக் கிருமிகள் இருந்தால் அவற்றைத் தடுத்து அழிக்கவே மூக்கின் பின் பகுதியில் தொண்டைக்கு அருகே அடிநாய்டு என்னும் தசைக்கோளம் உள்ளது.

நுண்ணிய பகுதிகளைத் தன்னகத்தே கொண்ட மூக்கை பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. சளிதான் மூக்கை அடிக்கடி பிடிக்கும் நோய். காற்றில் உள்ள வைரஸ் கிருமிகள் மூச்சுக்காற்றுடன் மூக்கினுள் சென்று சிலேத்துமப் படலங்களில் படிகிறது. நோய் எதிர்ப்பாற்றல் சக்தி இயற்கையிலேயே மனிதனுக்கு இருப்பதால் அவை வைரஸ்களை அழிக்கும். அச்சக்தி சிலருக்கு அல்லது சில நேரங்கள் குறைவு பட்டிருக்கும்போது வைரசின் ஆதிக்கம் அதிகமாகும். அதனால் மூக்கினுள் சிலேத்துமப் படலங்கள் அழற்சியுற்று சளி உண்டாகிறது. முதல் அறிகுறியாக தும்மல், மூக்கில் நீர்வடிதல், கண்களின் நீர் கட்டுதல், மூக்கில் வலி, அடைப்பு போன்றவை தோன்ற ஆரம்பித்துவிடும், சளிக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது ஆங்கில மருத்துவர்களின் கூற்றாகும். மூலிகை மருத்துவத்தில் சளியை ஆரம்பத்திலே கண்டு சிகிச்சை செய்தால் விரைவில் சரி செய்யலாம்.

அடிநாய்டு என்னும் மூக்கில் உள்ள கோளம் நோயுற்றால் வாசனைத் திறனை மூக்கு இழந்துவிடும். மூக்கு, காது, தொண்டை துவாரங்கள் சந்திக்கும் இடத்திற்கு சற்று பின்பக்கம் இக்கோளம் அமைந்துள்ளது. இது நிணநீர் திசுக்களால் ஆனது. வெளிக்காற்றில் இருந்து வரும் கிருமிகளை இது தடுத்து நிறுத்தும், அப்போது ஏற்படும் போரின் விளைவாக அடிநாய்டு வீங்கும். இது குழந்தைகளை அடிக்கடி பாதிக்கும் பிரச்சனையாகும். இதன் பாதிப்பு வாயில் மூச்சுவிடச் செய்யும், காதில் தொற்று நோயை உண்டாக்கும். மூளைவரை கூட இத்தொற்று பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. இது அடிக்கடி நோயற்றால் மூக்கடைப்பு வரும். எனவே இதை அறுவை சிகிச்சையின் மூலம் நவீன மருத்துவத்தில் நீக்கப்படுகிறது. 


சித்த மருத்துவர் கே.எஸ்.சுப்பையாபாண்டியன், 9994932121

மூக்கின் அருகில் உள்ள காற்றறைகளில் அழற்சி, கிருமித்தொற்று, சளி தங்குதல் போன்றவற்றை சைனஸ் என அழைப்பதாகப் பார்த்தோம். இதைத்தான் சித்த மருத்துவத்தில் வாதம், பித்தம், கபம் என்ற முக்குற்ற அடிப்படையில் பீனிசம் என்று அழைக்கப்படுகிறது. இப்பீனிச நோயில் 8 வகை இருப்பதாகவும் அறிகிறோம். மேலும் இந்நோய்க்கு சளி மட்டுமே காரணமல்ல, மேக நோயும் காரணம் எனப்படுகிறது. உடலில் உஷ்ணம் அதிகமாகி அது மூலாதாரக் கொதிப்பை உண்டாக்கி, பித்த நீரை உண்டாக்கி, அவைகள் (சைனஸ்) காற்றறைகளில் தங்கி தும்மல், மூக்கில் நீர் வடிதல், மூக்கில், கன்னத்தில், கண்களில் வலி போன்றவற்றை உண்டாக்குவதாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரமற்ற காற்று. புகைப்பழக்கம், பல் நோய், டான்சில் மற்றும் அடினாய்டு தொந்தரவு போன்றவைகளாலும் பீனிசம் வரும். ஒவ்வாமையும் பீனிசத்தை உண்டாக்கும். நாள்பட்ட பீனிசத்தால் காற்றறைகள் புண்ணாகி சளியுடன் கலந்து சீழும் ரத்தமும் துர்நாற்றத்துடன் வெளியேறும். சிலசமயம் கட்டிகள் மற்றும் மூக்கில் சதை வளர்ச்சியைக் கூட இது உண்டாக்கும். இத்தகைய மூக்குப் பிரச்சனைகளுக்கு நம்பகமான சிகிச்சைமுறைகள் உண்டு.

சளி வந்தால் செய்ய வேண்டியவை

சளிக்கு ஆரம்பத்திலேயே துளசிச்சாறு 1 தேக்கரண்டி, தூதுவளைச்சாறு 1 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி கலந்து தினமும் மூன்று வேளை குடித்துவந்தால் சளி இரண்டொரு நாளில் குறையும்.

கப நோய்களுக்கு துளசிச்சாறு 100 மில்லி, ஆடாதோடைச்சாறு 100 மில்லி, வெற்றிலைச்சாறு 100 மில்லி, குப்பைமேனிச்சாறு 100 மில்லி எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி சித்தரத்தை, கண்டு பாரங்கி, ஜடாமாஞ்சில், சுக்கு, மிளகு, அக்ராகாரம், கோஷ்டம் இவைகள் ஒவ்வொன்றும் 5 கிராம் அளவு வாங்கி பொடியாக்கி ½ லிட்டர் நீர் ஊற்றி 100 மில்லி அளவு சுண்டக் காய்ச்சி மூலிகைச் சாறுகளுடன் கலந்து கொள்ள வேண்டும்.1 கிலோ சர்க்கரையை பாகு செய்து மூலிகைச்சாறும், கடைச்சரக்கு கசாயம் கலந்த கலவையை ஊற்றி பாகு கெட்டியாகி முறுகாமல் பதத்தில் (தேன் பதத்தில்) இறக்கி வைத்துக்கொண்டு, காலை, மாலை 10 மில்லி வீதம் கொடுத்துவர கபம் சம்பந்தமான நோய்கள் விலகும்.

சளியுடன் வரும் இருமலுக்கு

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் மூன்றும் சேர்ந்தது திரபலையாகும். இவைகளுடன் அதிமதுரம் சேர்த்து ஒவ்வொன்றும் 50 கிராம் எடுத்து உலர்த்திப் பொடி செய்து வைத்துக்கொண்டு வேளைக்கு ½ டீஸ்பூன் வீதம் காலை, மாலை உண்டுவர சளி இருமல் குணமாகும். அதேபோல் சுக்கு, திப்பிலி, சிவதைவேர், கோஷ்டம், பேரரத்தை, கோரைக்கிழங்கு, அதிமதுரம், சித்தரத்தை இந்த எட்டுச் சரக்கிலும் 10 கிராம் வீதம் வாங்கிச் சூரணமாகச் செய்து வைத்துக்கொண்டு சம எடை சர்க்கரைக்கலந்து மூன்று வேளையும் வேளைக்கு 2 சிட்டிகை அளவு வாயிலிட்டு வெந்நீர் குடித்து வர சளி, குத்திருமல் நிற்கும்.

சளியுடன் தும்மல் இருமலுக்கு மற்றும் மூக்கில் நீர் வடிதலுக்கு திருநீற்றுப் பச்சிலைச் சாறு எடுத்து, 15 கிராம் மிளகு மூழ்கும்வரை விட்டு உலர்த்தி, அதைப் பொடி செய்து, நுண்ணிய பொடியாகச் சலித்து வைத்துக்கொண்டு சளி, தும்மல். இருமல் இருக்கும்போது மூக்குப்பொடிபோல் மூக்கில் விட்டு உறிஞ்ச குணமாகும். தும்பை இலைச் சாற்றைக் கசக்கி மூக்கில் 2 சொட்டு விட்டாலும் கபம் சரியாகும். மூக்கில் நீர்வடிதல் மற்றும் தலைவலியும் குணமாகும். ஜாதிக்காயை குழம்பு போல் அரைத்து மூக்கின் மேல் பற்றுப் போட்டாலும் மூக்கில் நீர் வடிதல், தும்மல் குணமாகும்.

மூக்கில் ரத்தம் வடிதலுக்கு தோல் சீவிய சுக்கு, மிளகு இரண்டிலும் ஒவ்வொன்றும் 100 கிராம் வீதம் வாங்கி கற்பூரம் 200 கிராமுடன் கலந்து புது சட்டியில் வைத்துக் கொளுத்திவிடவும். இவையாவும் எரிந்து சாம்பலாகிவிடும். இதை அரைத்து புட்டியில் வைத்துக் கொள்ளவும். தினம் ஒரு வேளை 1 சிட்டிகை அளவு தேனில் உட்கொள்ள தும்மல், இருமல், சுரம் குணமாகும்.

பல்வேறு காரணங்களால் மூக்கில் ரத்தம் வரும். அதற்கு நம்பகமான மூலிகை மருத்துவம், ஆடாதோடை சாறு ½ லிட்டர், மிளகு, சீரகம், ஓமம், சுக்கு, அதிமதுரம், சிற்றரத்தை ஒவ்வொன்றும் 25 கிராம் வீதம் பொடி செய்து, ஆடாதோடைச் சாற்றில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி பனைவெல்லம் ½ கிலோ கலந்து மீண்டும் காய்ச்சி குழம்பு பதம் வந்ததும் புட்டியில் பத்திரப்படுத்தவும். தினம் காலை, மாலை தேக்கரண்டி அளவு சாப்பிட மூக்கில் இரத்தம் வடிதல், ஷயரோகம் ஆகியவை குணமாகும்.

கோஷ்டம், வில்வவேர், திப்பிலி, திராட்சை இவைகள் யாவும் சம எடையாகப் பொடி செய்து நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வைத்துக்கொண்டு தினம் இரண்டு மூக்கிலும் 5 துளி வீதம் விட்டுவர விடாத் தும்மல் விலகும். மூக்கில் ரத்தக் குழாய் உடைந்து கொட்டும் ரத்தத்திற்கு, நெய்யில் நெல்லி வற்றலைப் பொடித்து அதைக் காடியில் அரைத்துப் பிழிந்து இரண்டு மூக்கிலும் இரண்டொரு சொட்டு விட நாசியில் வடியும் ரத்தம் நிற்கும். படிகாரத்தைப் பொரித்து நீரில் கலந்து இரண்டொரு சொட்டு விட்டாலும் ரத்தம் வருவது நிற்கும்.

சைனஸ் என்ற பீனிச நோய்க்கு

சைனஸ்தான் மூக்கை வருத்தும் மிகக் கொடிய நோய் எனப் பார்த்தோம். அதற்கான எளிய நிவாரணம் சில. குங்குமப்பூ, இஞ்சி, மிளகு, கோஷ்டம். அதிமதுரம் இவைகளைத் தேவையான அளவு எடுத்துப் பொடி செய்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி இரண்டொரு சொட்டு பீனிசம் உள்ள மூக்கில் விட்டு சிறிது உச்சந்தலையில் தேய்த்துவர நிவாரணம் கிடைக்கும்.

அதே போல் வட்டத்திருப்பி, மஞ்சள், மரமஞ்சள், மருள், கிழங்கு, திப்பிலி, ஜாதி மல்லிகைக் கொழுந்து இவைகளை, சிறிது எடுத்து நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வடித்து நசியமிட பீனிச நோய் சாந்தப்படும்.

கிராம்பு, வில்வக்காய், திப்பிலி, கோஷ்டம், திராட்சை, சுக்கு இவைகள் ஒவ்வொன்றும் 10 கிராம் வீதம் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து ¼ லிட்டர் பசுநெய்யில் கலந்து, காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு தினமும் காலை, இரவு இரண்டு வேளையும் 5 துளி வீதம் மூக்கில் விட பீனிசம், அதனால் வரும் தும்மல் ஆகியவை போகும்.

தோல் நீக்கிய சுக்கு, வறுத்த மிளகு. அக்கராகாரம், கோஷ்டம். கண்டங்கத்திரிவேர், ஆடாதோடை வேர், மூக்கிரட்டைவேர், கொடிவேலி வேர், நன்னாரி வேர், அதிமதுரம் ஆகியவைகள் ஒவ்வொன்றும் 5 கிராம் வீதம் நன்றாக இடித்துச் சலித்துச் சூரணமாகச் செய்து வைத்துக்கொண்டு காலை, மாலை வேளைக்கு ½ டீஸ்பூன் வீதம் பாலில் கலந்து உண்டுவர பீனிசம், தலைவலி ஆகியவை குணமாகிவிடும்.

மூக்கில் சதை வளர்ச்சி

சதை வளர்ச்சி மூக்கினுள் வந்தால் அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டும் என்ற கருத்து தற்போது நிலவுகிறது. ஆனால் திப்பிலி, தேவதாரு, மஞ்சள், இந்துப்பு, நாயுருவி விதை நல்லெண்ணெயில் பொடி செய்து போட்டுக் காய்ச்சி சதையில் படும்படி மூக்கில் இரண்டொரு துளி விட்டு, தலைக்கும் தேய்த்து வர சதை வளர்ச்சி கரைந்துவிடும்.

மூக்கில் வரும் முக்கியமான வேறு ஒரு பிரச்சனை மூக்குவிட்ட எலும்பு வளைந்து கொள்ளுதல், அடிபடுதல், தொடர்ந்து ஒரு பக்க மூக்கடைப்பு போன்றவையால் இது உண்டாகும். மூக்கடைப்பால் உண்டான எலும்புக்கோணலை நிவர்த்திக்கலாம். அதற்கான சித்த மருந்துகளும் உண்டு. அவைகளைச் சித்தமருத்துவரை நாடி அவரது மேற்பார்வையில் சிகிச்சை மேற்கொள்வது நலம்.

மூக்குப் பராமரிப்பு கபரோகங்களுக்கான ஆங்கில மருத்துவத்தில் அதிகமாக உபயோகிக்கப்படும் ஸ்டீராடு சம்பந்தமான மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூக்கில் உள்ள ரோமங்கள் உதிர்ந்து விடுவதாக நம்பப்படுகிறது.

காற்றை நாம் சுவாசிக்கும்போது வடிகட்டி அனுப்பும் வேலை மூக்கிலுள்ள ரோமத்தினுடையது. எனவே அத்தகைய மருந்துகளை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். புகை பிடிப்பது, பொடி போடுவது போன்ற பழக்கங்களால் மூக்கினுள் உள்ள சிலேத்துமப் படலம் பாதிப்படைந்து வாசனை அறியும் தன்மையை இழத்தல், புற்று நோய் மற்றும் ஒவ்வாமைகளை எற்படுத்தி சுவாச சம்பந்தமான பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கி விடுவதால் அத்தகைய பழக்கங்களை விட்டொழிக்க வேண்டும். 



காது, மூக்கு, தொண்டை மூன்றும் ஒன்றையொன்று தொடர்புடைய பகுதியாக இருப்பதால், இவைகளில் ஒன்று பாதிக்கப்பட்டாலும் மற்ற இரண்டு உறுப்புக்களையும் பரிசோதனை செய்து அதற்காக மருத்துவம் செய்து விடவேண்டும். அவ்வகையில் காது, தொண்டை பிரச்சனைகள் மூக்கைக் கண்டிப்பாக பாதிக்கும். இதை கவனத்தில் கொண்டு மூக்கைப் பராமரிப்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

Tags:    

Similar News