சிறப்புக் கட்டுரைகள்

முதுமையில் தைராய்டு தொந்தரவுகளும், தீர்வுகளும்

Published On 2024-04-03 10:20 GMT   |   Update On 2024-04-03 10:20 GMT
  • மன அழுத்தத்தைப் போக்கும் அமுக்கரா கிழங்கு தைராய்டு சுரப்பியின் செயல்திறனை அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
  • ‘குங்கிலியம்’ எனும் மற்றொரு மூலிகைப்பிசின் தைராய்டு கோளாறுக்கு நல்ல பலன் தருவதாக உள்ளது.

முதுமையில் ஏற்படும் உடல் உறுப்புக்களின் தேய்மானம் எந்த உறுப்புக்களையும் விட்டு வைப்பதில்லை. அவ்வாறு இருக்கையில் தைராய்டு சுரப்பியும் முதுமையில் எடை குறைந்து, திசு வடுவாக மாறுகிறது. இதனால் அதில் சுரக்கும் ஹார்மோன் அளவும் படிப்படியாக குறைகிறது. மேலும் முதுமையில் உண்டாகும் மன அழுத்தத்தினாலும், சில வகை மருந்துகளாலும் தைராய்டு சுரப்பி தொந்தரவுகள் உண்டாவதாக உள்ளன.

தைராய்டு எனும் நமது உடலின் கழுத்துப் பகுதியில் உள்ள ஒற்றைச் சுரப்பி ஒட்டுமொத்த உடலின் செயல்பாட்டையும் கட்டுக்குள் வைத்துள்ளது. இதுவே இன்ன பிற சுரப்பிகளில் உற்பத்தியாகும் ஹார்மோன் சுரப்பிகளுக்கும் நெருங்கிய தொடர்புடையது.

பொதுவாகவே 60 வயதைக் கடக்கும் 20 சதவீதம் பெண்களுக்கும், 8 சதவீதம் ஆண்களுக்கும் 'சப்கிளினிக்கல் ஹைப்போ தைராய்டு' (குறை வீதனம்) எனும் தைராய்டு சுரப்பு குறைவு ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சிகிச்சை அளிக்க தவறினால் ரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பதுடன், ரத்த குழாய் அடைப்பு, இதயத்தின் செயல்பாடு குறைதல், ரத்த அழுத்தம் அதிகரித்தல் ஆகிய பல்வேறு தொந்தரவுகள் உண்டாகும் அபாயம் உள்ளது.

சித்த மருத்துவ நோய்க்காரணிகளான வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றில் 'கபவாதம்' கூட்டணியே ஹைப்போதைராய்டு பிரச்சனைக்கு முதற்காரணமாக உள்ளது. அதாவது தைராய்டு சுரப்பியை கபமும், வாதமும் தாக்குவதால் அதன் செயல்தன்மை குறைந்து உடல் பருமன், தலை முடி உதிரல், உடல் அசதி, சோம்பல், மலச்சிக்கல், குளிர்ச்சி தாங்க முடியாமை, இன்னும் பல்வேறு குறிகுணங்களை உண்டாக்கி முதுமையில் உபாதைகளைத் தரும்.

அதே போல் உடலில் அதிகரிக்கும் பித்தத்தால் பித்தமும், வாதமும் கூடி தைராய்டு சுரப்பியை பாதிக்குமானால் தைராய்டு செயல்திறன் அதிகரித்து ஹைப்பர்தைராய்டு (அதிவீதன நோய்) எனும் நோய்நிலைக்கு வித்திடும். இதனால் உடல் எடை குறைதல், உடல் அதிக சூடாக இருத்தல், நடுக்கம், மார்பு படபடப்பு, நரம்பு தளர்ச்சி, வெப்பம் தாங்க முடியாமை ஆகிய குறிகுணங்களை உண்டாக்கி முதுமையை மேலும் வருத்தும். ஆகவே முதுமையில் தைராய்டு சுரப்பி எந்த நிலையில் உள்ளது என்பதை மருத்துவர் ஆலோசனைப்படி அவ்வப்போது பரிசோதனை செய்து தெரிந்துகொள்வது நல்லது.

முதுமையில் 'சப் கிளினிக்கல் ஹைப்போ தைராய்டு' என்று கூறப்படும் ஆரம்ப கட்ட குறை வீதன நோய்நிலையில் கபவாதம் போக்கும் சித்த மருத்துவ மூலிகைகளான அமுக்கரா கிழங்கு, குங்கிலியம், மந்தாரைப் பட்டை, மாவிலங்கப்பட்டை, இஞ்சி, தசமூலம், கருஞ்சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி சேர்ந்த திரிகடுகு, ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையுள்ள கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்த திரிபலை சூரணம் ஆகிய மூலிகை மருந்துகள் நற்பலன் தருவதாக உள்ளன. 

அமுக்கரா கிழங்கு

மன அழுத்தத்தைப் போக்கும் அமுக்கரா கிழங்கு தைராய்டு சுரப்பியின் செயல்திறனை அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தினசரி அமுக்கரா சூரணம் என்ற சித்த மருந்தை ஒரு தேக்கரண்டி அளவு தேனில் கலந்து எடுத்துக்கொள்ள கபவாதம் போக்கி தைராய்டு சுரப்பி கோளாறு மட்டுமின்றி, பல்வேறு ஹார்மோன் சுரப்பிகளை சீராக்கும் தன்மை உடையது.

அமுக்கரா கிழங்கில் உள்ள 'வித்தா பெரின்-எ' என்ற வேதிப்பொருள் தைராய்டு சுரப்பியை தூண்டி இயற்கையாக செயல்பட வைக்கும் தன்மையும் உடையது. அதே போல் மன அழுத்தம் போக்கும் பிரமி கீரை தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்க உதவும். இதனை நெய் விட்டு வதக்கி ஒரு மண்டலம் எடுத்துக்கொள்ள நோயின் ஆரம்ப கட்ட நிலையில் நற்பலன் தரும்.

அடுத்து அதிக பலனைத் தருவது மந்தாரை பட்டை. "மன்னவனும் தன்வழிப் படுவான்" என்று இதனைப் பற்றி அகத்தியர் குணவாகடம் சிறப்பாக கூறுகின்றது. அதாவது தைராய்டு சுரப்பியில் பாதிப்பை உண்டாக்கும் கபவாதக் குற்றத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவும்.

மந்தாரை மரத்தின் பட்டையானது தைராய்டு சுரப்பியின் வீக்கத்தை குறைப்பதோடு, தைராய்டு சுரப்பியைத் தூண்டி இயற்கையாக செயல்பட வைக்கும் தன்மை உடையது என்று எலிகளில் ஆய்வு செய்யப்பட்டு உறுதியும் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் உள்ள மூன்று முக்கிய பிளவனாய்டு வேதிப்பொருட்கள் மருத்துவ தன்மைக்கு காரணமாகின்றன.

'குங்கிலியம்' எனும் மற்றொரு மூலிகைப்பிசின் தைராய்டு கோளாறுக்கு நல்ல பலன் தருவதாக உள்ளது. இது தைராய்டு சுரப்பியை இயற்கையாக தூண்டி செயல்பட வைக்கும் என்பதோடு குறை தைராய்டால் அதிகரித்த உடல் பருமனைக் குறைக்கவும் உதவும். இதில் உள்ள 'குகுலுஸ்டீரோன்' எனும் வேதிப்பொருள் அதன் மருத்துவ தன்மைக்கு முக்கிய காரணம் என்கிறது நவீன அறிவியல்.

அமுக்கரா கிழங்கினைப் போல் முதுமையின் சிறந்த தோழனாக திரிபலா சூரண மருந்தைக் குறிப்பிடலாம். முதுமையில் ஏற்படும் அநேக நோய்நிலைகளில் இது நற்பலன் தருவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை இரவு வேளைகளில் ஒரு தேக்கரண்டி அளவுக்கு வெந்நீரில் கலந்து எடுத்துக்கொள்ளலாம். அதே போல் திரிகடுகு சூரணத்தை தேனில் கலந்து எடுத்துக்கொள்ள நோய்க்கு காரணமாகும் மூன்று குற்றங்களும் சமநிலைப்பட்டு நோயின் ஆதாரத்தை அடியோடு நீக்கி நோயில்லா வாழ்விற்கு அடித்தளமிடும்.

பத்து வேர்களை உள்ளடக்கிய தசமூலம் சேர்ந்த மருந்தும் கபவாதத்தை சீராக்கி நோயினை நீக்க உதவும். மூலிகை மருந்துகள் மட்டுமின்றி சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள அய செந்தூரம், அன்ன பவள செந்தூரம், சிலாசத்து பற்பம், குங்கிலிய பற்பம், பாஷாண மருந்துகள் பல தைராய்டு சுரப்பியை இயற்கையாக தூண்டி செயல்பட வைப்பதாக உள்ளன.

பித்தம் அதிகரித்து வாதம் மற்றும் பித்தம் ஒன்று கூடுவதால் உண்டாகும் ஹைப்பர்தைராய்டு நோய்நிலையில் பித்தம் தணிக்கும். சித்த மருத்துவ மூலிகைகளான நெல்லிக்காய், சீந்தில், திராட்சை, மஞ்சிட்டி, மஞ்சள் ஆகிய மூலிகைகள் பலன் தருவதாக உள்ளன. இவை பித்தத்தைக் குறைத்து தைராய்டு சுரப்பியின் அதிக செயல்பாட்டை தடுத்து, இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவும்.

மேற்கூறிய மூலிகைகள் சேர்ந்த நெல்லிக்காய் நெய், நெல்லிக்காய் லேகியம், சீந்தில் குடிநீர், திராட்சை குடிநீர், மஞ்சிட்டி குடிநீர் ஆகிய சித்த மருந்துகள் ஹைப்பர் தைராய்டு நிலையில் பெரும்பலனைத் தரும். மேலும் சங்கு பற்பம், பவள பற்பம், முத்து பற்பம் ஆகிய மருந்துகளும் அதிக மான தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவும்.

ஹைப்பர்தைராய்டின் ஆரம்ப கட்ட நிலையில் சித்த மருத்துவ மூலிகையான மஞ்சள் பலன் தருவதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. இது சித்த மருத்துவத்தில் எளிமையே வலிமை என்பதற்கு சிறந்த உதாரணம். 

சோ.தில்லைவாணன்

உடலில் தானியங்கு நோய்தடுப்பாற்றல் (Auto-immunity) நோய்நிலையிலும் தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகள் மாறுவதாக உள்ளன. 'ஹாஷிமோட்டோ (Hashimoto) தைராய்டு வீக்கம்' என்னும் நோய்நிலையில் அதிகம் பேருக்கு ஹைபோதைராய்டு உண்டாவதாக உள்ளது. இந்நிலையில் கருஞ்சீரகம் 8 வாரங்களிலே நல்ல பலன் தருவதாக ஈரான் நாட்டில் நடந்த ஆய்வு முடிவுகள் தெரிவிப்பது சிறப்பு. இதில் உள்ள தைமோகுயினோன் (TQ) எனும் வேதிப்பொருள் அதற்கு முக்கிய காரணம் என்கிறது நவீன அறிவியல்.

சித்த மருந்துகளை கடந்து எண்ணெய் குளியலும் குறிகுணம் குறைக்க உதவும். ஹைப்போதைராய்டு நிலையில் சுக்கு தைலம் தேய்த்து எண்ணெய் முழுக்கு எடுப்பதும், ஹைப்பர் தைராய்டு நிலையில் குமரி தைலம் தேய்த்து எண்ணெய் முழுக்கு எடுப்பதும் கூட நோய்நிலையில் பலன் தரக்கூடும்.

பித்தம் அதிகரிக்கும் அசைவ உணவுகள், எண்ணெய் தோய்ந்த பதார்த்தங்கள் ஆகியவற்றை ஹைப்பர் தைராய்டு நிலையில் தவிர்ப்பதும், கபம் அதிகரிக்கும் நீர்ச்சத்துள்ள காய்கறிகள், இனிப்புகள் ஆகிய உணவுகளை ஹைப்போ தைராய்டு நிலையில் தவிர்ப்பதும் நல்லது என்கிறது சித்த மருத்துவம்.

குறை வீதன (ஹைப்போதைராய்டு) நோய்நிலையில் சர்வாங்காசனம் செய்து வருவது நல்ல பலன் அளிப்பதாக உள்ளதை ஆய்வு முடிவுகள் சுட்டிக் காட்டுவதால் அத்தகைய பயிற்சியினை மேற்கொள்வது நல்லது. கூடவே மன அழுத்தம் போக்கும் பயிற்சிகளும், தியான முறைகளும் பழகி வருவது நன்மை பயக்கும்.

முதுமையில் இதய ரத்தக் குழாய்களில் பாதிப்புள்ளவர்களும், இதய ரத்த குழாய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளவர்களும் தைராய்டு மாத்திரைகளை எச்சரிக்கையுடன் எடுத்துக்கொள்வது நல்லது என்று நவீன அறிவியல் வலியுறுத்துகிறது. ஆகவே இந்நிலைகளில் மூலிகை மருத்துவத்தை நாடுவது சிறந்தது.

சித்த மருத்துவத்தில் தைராய்டு தொந்தரவுகளுக்கு மருந்துகள் இருக்கிறதா? என்ற ஐயப்பாடு பலருக்கு எழும். ஏனெனில் குறைவீதனம் எனும் ஹைபோ தைராய்டு நோயின் ஆரம்ப கட்ட நிலையிலேயே தைராய்டு ஹார்மோன் மாத்திரைகளை மாற்றாக (Hormone Replacement) எடுத்துக்கொள்வது என்பது தற்காலத்தில் வாடிக்கையாகிவிட்டது.

உண்மையில் சித்த மருத்துவ மூலிகைகள் தைராய்டு சுரப்பியை தூண்டி, அதன் சுரப்பை இயல்பாக்கி, நிரந்தர தீர்வளிப்பதாக உள்ளன. இது சித்த மருத்துவத்தின் மாபெரும் தனிச்சிறப்பு. அதனை புரிந்து கொண்டு முதுமையில் பாரம்பரிய மருத்துவ முறைகளை நாடுவது நலமான, தரமான வாழ்க்கைக்கு வழிகோலும்.

தொடர்புக்கு:

drthillai.mdsiddha@gmail.com

8056040768

Tags:    

Similar News