சிறப்புக் கட்டுரைகள்

பாடைக்காவடி மாரியம்மன்

Published On 2024-04-25 09:12 GMT   |   Update On 2024-04-25 09:12 GMT
  • வலங்கைமானில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் காதக்கவுண்டர், கோவிந்தம்மாள் என்ற தம்பதியர் வாழ்ந்து வந்தனர்.
  • பங்குனி மற்றும் ஆவணி மாதங்களில் 2 தடவை இந்த ஆலயத்தில் பாடை கட்டும் திருவிழா நடத்தப்படுகிறது.

கும்பகோணத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வலங்கைமானில் மாரியம்மன் ஆலயம் உள்ளது. நீடாமங்கலம் செல்லும் சாலை ஓரத்திலேயே இந்த ஆலயம் அமைந்து இருக்கிறது. இந்த ஆலயத்தில் தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் வித்தியாசமான ஒரு வழிபாடு நடத்தப்படுகிறது.

அதாவது இந்த அம்மனிடம் வேண்டிக்கொண்டு பலன் பெறுபவர்கள் பாடையில் படுத்து வித்தியாசமான முறையில் அம்மனுக்கு நன்றி செலுத்துகிறார்கள். இதனால் இந்த அம்மனுக்கு பாடைக்கட்டி அம்மன் என்ற பெயர் வந்தது.

இந்த அம்மன் உருவான வரலாறு வித்தியாசமானது. அதை தெரிந்துக்கொண்டால் கும்பகோணம் யாத்திரை செல்பவர்கள் நிச்சயம் இந்த ஆலயத்துக்கு சென்று வருவார்கள். இந்த ஆலய வரலாறு வருமாறு:-

வலங்கைமானில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் காதக்கவுண்டர், கோவிந்தம்மாள் என்ற தம்பதியர் வாழ்ந்து வந்தனர். எல்லா செல்வங்களும் பெற்றிருந்தாலும் கொஞ்சி விளையாட ஒரு குழந்தை இல்லையே என்பது மட்டுமே இந்தத் தம்பதிகளின் ஒரே குறையாக இருந்து வந்தது.

வலங்கைமானுக்குத் தெற்கில் உள்ள புங்கஞ்சேரி என்னும் கிராமத்தில்தான் கோவிந்தம்மாள் தினமும் சென்று வியாபாரம் செய்வது வாடிக்கை. வழக்கம் போல ஒரு வெள்ளிக்கிழமை கோவிந்தம்மாள் வியாபாரம் முடிந்து அந்த ஊர்க்குளத்தில் குளித்து விட்டுக் கரையேறியபோது குழந்தை அழும் குரல் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள். சத்தம் எங்கு இருந்து வருகிறது என்று பார்த்தாள். ஐயனார் கோவில் வாசலில் ஒரு குழந்தை அழும் குரல் கேட்பதை அறிந்தாள். அந்த குழந்தை சத்தம் வந்த திசை நோக்கி ஓடினாள். ஊர்க்காரர்களும் ஓடி வந்தனர்.

அழுது கொண்டிருந்த குழந்தையை கோவிந்தம்மாள் வாரி எடுத்தாள். உடனே அழுகையை நிறுத்திய அந்தப் பெண் குழந்தை, அவளைப் பார்த்துச் சிரித்தது. குழந்தையைக் கொண்டு வந்து அங்கு விட்டுச் சென்றது யார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஊரார் அனைவரும் சேர்ந்து அந்த குழந்தையை விட்டவர்களைத் தேடிப் பார்த்தனர். யாரும் தென்படவில்லை. அதன் அழகில் மயங்கினர் ஊர்க்காரர்கள்.

இறுதியில் குழந்தையை ஊர் நாட்டாண்மைக்காரரே எடுத்து வளர்க்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அந்தக் குழந்தையை வளர்க்கும் பொறுப்பு தனக்கே கிடைக்கும் என்று எதிர்பார்த்த கோவிந்தம்மாளுக்கு இது கடும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. அவளுக்கு ஏற்பட்ட வருத்தமும், ஏக்கமும் வார்த்தைகளால் சொல்லி மாளாது.

இந்த சம்பவத்துக்கு பிறகு புங்கஞ்சேரியில் கோழிகளும், ஆடு மாடுகளும் மர்மமான முறையில் இறக்கத் தொடங்கின. ஊர் மக்கள் பலருக்கு அம்மை போட்டது.

ஐயனார் கோவிலில் கிடைக்கப்பெற்ற அந்தப் பெண் குழந்தைக்கும் அம்மை நோய் வார்த்து விட்டது. அப்போது ஊர்க்காரர் ஒருவர் மீது அருள் வந்து, அந்தப் பெண் குழந்தையை கோவிந்தம்மாளிடம் கொடுத்துவிட வேண்டும்... அப்போது தான் ஊர் நலம் பெறும் என்ற வாக்கு வெளிப்பட்டது.

இதனால் ஊர்க்காரர்கள் பயந்து போனார்கள். குழந்தையால் எந்த கெட்டதும் நடந்து விடக் கூடாதே என்று நினைத்தனர். எனவே அந்த குழந்தையை கோவிந்தம்மாளிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர்.

அதன்படி அந்த குழந்தை கோவிந்தம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டது. சீதளா என அதற்குப் பெயரிட்டு கோவிந்தம்மாள் அகமகிழ்ந்தாள், ஆனால் கடுமையான அம்மை நோய் காரணமாக, மூன்றாம் நாளே அந்தக் குழந்தை இறந்து விட்டது. ஆறாத் துயரமடைந்த கோவிந்தம்மாளும் அவள் கணவரும் இறுதிச் சடங்குகளைச் செய்து, குழந்தையின் உடலைத் தம் வீட்டு பின்புறத்தில் அடக்கம் செய்து விட்டனர்.

அதன் பின்னர்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது குடமுருட்டி ஆற்றில் நீராடிவிட்டு வருவோரில் சிலர் கோவிந்தம்மாள் வீட்டு பின்புறத்தின் அருகே வந்தபோது, அவர்களில் ஒருவர் மீது அருள் வந்து, "நான் குழந்தை வடிவில் வந்த மாரியம்மன். எனக்கு உடல் இல்லையே தவிர உயிர் உள்ளது. என்னை வழிபடுவோர்க்கு அருள் புரிவேன்" என்று குழந்தை சீதளா சொன்னாள்.

அதன்படி குழந்தையை சமாதி செய்த இடத்தில் கீற்றுக்கொட்டகை போடப்பட்டது. அங்கு தினமும் மக்கள் வழிபடத் தொடங்கினர். இதனால் அந்த இடத்தில் கோவிலும் எழுப்பப்பட்டது. சீதளாதேவி மகாமாரியம்மன் கோவிலாகப் பெயர் கொண்டு வரம் தரும் தெய்வமான அன்னை பராசக்தி அங்கே விளங்கலானாள்.

உடல் இன்றிப் போனாலும் உயிரோடு உள்ளேன்' என்று அம்மன் அருள்வாக்கு வழங்கியதால் இந்த அம்மனிடம் குறைதீர்க்கக் கோரி வரும் பக்தர்கள், தம் உடலையே காணிக்கையாக அளிக்கும் பாடைக்காவடி பிரார்த்தனையை நிறைவேற்ற ஆரம்பித்தனர். இதனை, 'பாடைக்கட்டித் திருவிழா' என்றும் சொல்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் இந்த விழா நடைபெறும். அன்னை பராசக்தியே உலகின் வெப்பம் நீக்கி உயிர்களைக் காக்கும் மழையைப் பொழிய வைக்கும் மாரியம்மனாக இங்கு தோற்றம் கொண்டிருக்கிறாள்.

வலங்கைமான வளம் செறிந்த ஊர். குடமுருட்டி ஆற்றின் தென்திசையில் உள்ளது. ஊரின் ஈசான்ய திசையில் மகா மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. ஆலய முகப்பின் முன் மண்டபம் அடைப்புச் சுவர் ஏதுமின்றி திறந்த அரங்கமாக அமைந்து உள்ளது. பக்தர்கள் பகலில் ஓய்வெடுக்கவும், இரவில் தங்கவும் வசதியாகக் கட்டப்பட்டுள்ள இந்த மண்டபத்தின் தூண்களில் அஷ்ட லட்சுமிகளின் சுதைச் சிற்பங்கள் உள்ளன. தலவிருட்சமாக வேல்பி மரம் கோவிலின் பின்னால் அமைந்து உள்ளது.

முன்மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் மகா மண்டபம். இதன் தென்புறத்தில் விநாயகர் எழுந்தருளியுள்ளார். வடபுறத்தில் இருளன், பேச்சியம்மன், வீரன், வீரனின் தேவியர் இருவர் என கிராம தேவதைகள் சுருங்கல் திருவுருவங்களாக அருள்கின்றனர், முன்மண்டபத்தை அடுத்து அம்மன் துலங்கும் அர்த்த மண்டபம் உள்ளது. இதையடுத்து பிரதானமான கருவறை இருக்கிறது. கருவறையில் மின்னும் விளக்கொளியில் மகாமாரியம்மன் அமர்ந்த நிலையில் கொலுவிருக்கிறாள்.

நான்கு திருக்கரங்கள் கொண்ட இத்தேவி வலது மேற்கரத்தில் உடுக்கையும், இடது மேற்கரத்தில் சூலமும், வலது கீழ்க்கரத்தில் கத்தியும், இடது கீழ்க்கரத்தில் கபாலமும் தாங்கி அருள்கிறாள். இடது காலை மடித்து, வலது காலைத் தொங்க விட்டு அன்னை வீர சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளாள். இரு தோள்களின் மீதும் இரு நாகங்கள் உள்ளன. அன்னையின் முகத்தில் மாறாத புன்னகை தவழ்கிறது. எத்தனை முறை பார்த்து வழிபட்டாலும் அதில் சலிப்பே வராது. எத்தனையோ உயிர்களை மீட்டுத் தந்த அம்மன் என்பதால் அவள் முன்னிலையில் நிற்கும்போது நம் நோய், நொடி, குறைகள் எல்லாம் நம்மை விட்டு உருகி ஓடுவதை சிலிர்ப்புடன் உணர முடியும். ஏராளமான பக்தர்கள் இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளனர்.

பங்குனி மற்றும் ஆவணி மாதங்களில் 2 தடவை இந்த ஆலயத்தில் பாடை கட்டும் திருவிழா நடத்தப்படுகிறது. பங்குனி மாதம் முதல் ஞாயிறன்று திருவிழா தொடங்கி, ஒன்பது நாட்களுக்கு நடைபெறுகிறது. எட்டாம் நாளான அடுத்த ஞாயிறன்று பாடைகட்டித் திருவிழா நடைபெறும். இந்தத் திருவிழாவின்போது வலங்கைமானே மக்கள் வெள்ளத்தில் மூழ்கி விடும். அன்று தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் அங்கு திரண்டு வருவார்கள்.

 

இத்திருத்தலத்தின் மகிமையே பாடைக்காவடித் திருவிழாதான். மருத்துவரால் கைவிடப்பட்டு எந்த பக்தன் அன்னையிடம் 'எனக்கு உயிர்ப்பிச்சை தா. உனக்கு பாடைக்காவடி எடுக்கிறேன்' என்று வேண்டிக் கொள்கிறானோ, அவனுக்கு உயிர்ப்பிச்சை அளித்து நல்வழியில் வாழ வைக்கிறாள் அன்னை. வேண்டுதல் நிறைவேறிய பிறகு, பக்தர்கள் இங்கு வந்து பாடைக்காவடி எடுத்துத் தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்துகிறார்கள்.

பாடைக்காவடி எடுக்க இருக்கும் பக்தர்கள் ஒரு வாரம் அல்லது இரு வாரங்கள் அன்னையை வேண்டி விரதம் இருப்பர்.

காவடி எடுக்கும் நாளன்று, ஒருவர் இறந்தால் எவ்வாறு அவருக்குப் பாடை கட்டி இறுதிச் சடங்கு செய்கிறோமோ அதுபோல நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தரை ஆற்றில் குளிக்க வைத்து, பாடையில் படுக்கச் செய்து, அவரை நான்கு பேர் தூக்கிக் கொண்டு திருக்கோவிலை மூன்று முறை வலம் வருவர். பின் கோவிலின் முகப்பில் பாடையை இறக்குவர்.

கோவிலில் பூசாரி வேண்டிக்கொண்டு பிணம் போலக் கிடக்கும் பக்தர் மேல் அபிஷேக நீர் தெளித்து அன்னையின் பிரசாதமான விபூதியைப் பூசி அவரை எழச் செய்வார். இதனாலேயே மக்கள் அன்னையை 'பாடைக்காவடி மாரியம்மன்' என்றும் போற்றுகின்றனர்.

ஆலயம் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

Tags:    

Similar News