சிறப்புக் கட்டுரைகள்

மனசே மனசே.... ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்

Published On 2024-02-24 14:58 IST   |   Update On 2024-02-24 14:58:00 IST
  • மனஅழுத்தம் தலை முதல் கால் வரை பல அறிகுறிகளை தோற்றுவிக்கிறது
  • நம்மைப் பற்றி எப்படி சிந்திப்பார்கள்? என்பதை நம்மால் கணிக்கமுடியாது. அதையும் நம்மால் மாற்றவும் இயலாது.

மனம் என்பது இதயத்தில் இருப்பதாகவும், சிலர் மூளைக்குள் இருப்பதாகவும் நம்புகிறார்கள். ஆனால் எண்ணங்களின் கோர்வைதான் மனம். உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் மனம் வேதியியல் பொருளாக உள்ளது என்பதுதான் உண்மை. எனவேதான் மனம் பாதிக்கும்போது, உடலின் அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் மனஅழுத்தம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் ஒன்றோடு ஒன்றாகிவிட்டது போல்தான் உள்ளது. எனவே மனஅழுத்தத்தை எப்படி கண்டறிவது? எப்படி சமாளிப்பது? என்பதை அனைவரும் அறிந்து கொள்வது அவசியம்.

அப்போது தான் வாழ்வியல்முறை மாற்றங்களினால் ஏற்படும் நோய்களில் இருந்து விலகி இருக்கலாம், நம் ஆயுட்காலத்தையும் நீட்டிக்கலாம்.

மனஅழுத்தத்தினால் ஏற்படும் அறிகுறிகள்:

மனஅழுத்தம் தலை முதல் கால் வரை பல அறிகுறிகளை தோற்றுவிக்கிறது. அதில் மிக முக்கியமானவைகள் இதோ... தலைவலி, முடிஉதிர்தல், உடல்சோர்வு, செயல்களில் பிடித்தம் இல்லாமை.

கழுத்து வலி, உடல் சதையில் இறுக்கம், தோள்பட்டை வலி, நெஞ்சுவலி, நெஞ்சு படபடப்பு, உடலில் சதைகள் துடித்தல், பசியின்மை, மலம் வெளியேறுவதில் சிக்கல், உறக்கமின்மை, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிக கோபப்படுதல், தலைசுற்றல், மற்றவர்களுடன் சரளமாகப் பேச தயங்குவது, அதிக சத்தம் கேட்டால் நெஞ்சு படபடப்பு, தாம்பத்திய உறவில் நாட்டமின்மை, உடலில் ஒரு சில பகுதிகளில் அழுத்துவது போன்ற உணர்வு.

மனஅழுத்தத்தை கண்டறிவதற்கு பரிசோதனைகள் எதுவும் தேவையில்லை. அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து உங்கள் எண்ணங்களை நீங்கள் கவனித்தாலே போதும். நீங்கள் மனஅழுத்தத்துடன் இருக்கிறீர்களா? இல்லையா? என்பது உங்களுக்கே புரியும். அப்படி மனஅழுத்தம் இருப்பின், எதனால் ஏற்பட்டது? அதற்கு தீர்வு ஏதேனும் உள்ளனவா? என்பதை சிந்திக்க வேண்டும்.

மனஅழுத்தத்தை சமாளிக்க 4 "A"-வைப் பின்பற்றுங்கள் உங்கள் மனஅழுத்ததிற்கு காரணமான காரணி என்ன? என்பதைக் கண்டறிந்து இந்த 4 "A"-வில் எதில் உங்களுக்கு பொருத்தமானது என்பதை நீங்களே தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். உங்கள் மனஅழுத்தத்தை சமாளிப்பதற்கு தவிர்த்தல் (Avoid), மாற்றிக்கொள்ளுதல் (Alter), ஏற்றுக்கொள்ளுதல் (Accept), அதனோடு வாழப் பழகிக்கொள்ளுதல் (Adapt)

ஆகிய நான்கு "A" பற்றி புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

1. தவிர்த்தல் (Avoid) - உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தும் காரணியைக் கண்டுபிடித்து, அதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். உதாரணத்திற்கு, சிலரைப் பார்க்கும்போது மனஅழுத்தம் ஏற்படின் அவர்களைப் பார்பதைத் தவிர்க்க வேண்டும். பார்ப்பதைத் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அவர்களோடு இருக்கும் நேரங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் நம் வாழ்க்கையில் எல்லா பிரச்சனைகளையும் தவிர்க்க இயலாது. எனவே தவிர்க்க முடியாத பிரச்சனைகள் இருப்பின், அதை எப்படி மாற்றிக்கொண்டு சமாளிப்பது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

2. மாற்றிக்கொள்ளுதல் (Alter) - உங்களால் தவிர்க்க முடியாத சிக்கல்களை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உதாரணத்திற்கு நீங்கள் எப்போதும் செல்லும் பாதையில் நெரிசல் இருப்பின் வேறு ஏதேனும் மாற்று வழி உள்ளதா? என்பதைக் கண்டறிந்து அதில் பிரயாணிக்கலாம்.

மாற்று வழி இல்லாத பட்சத்தில்அதே வழியில்தான் செல்லவேண்டும், நெரிசலை எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்று இருப்பின், என்ன செய்ய வேண்டும்? சற்று விரைவாகப் புறப்பட்டு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முயற்சிக்க வேண்டும். மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் செல்லும்போது, உங்களுக்குப் பிடித்தப் பாடல்களைக் கேட்கலாம்.

அதை விடுத்து அவரச அவசரமாகக் புறப்பட்டு அதே பாதையில் செல்லும்போது மனஅழுத்தம் அதிகரிக்கத்தான் செய்யும். இப்படி எதிர்க்கொள்ள த்தான் வேண்டும் என்ற ஒரு சூழல் ஏற்படும்போது அதை நாம் எப்படி மனஅழுத்தம் இல்லாமல் மாற்றிக் கொள்ளலாம் என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும்.

3. ஏற்றுக்கொள்ளுதல் (Accept) - சிலப்பிரச்சனைகளை நம்மால் தவிர்க்கவும் முடியாது, மாற்றிக் கொள்ளவும் முடியாது. அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? அதை அப்படியே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஏற்றுக்கொண்டு அதனோடு எப்படி வாழ்வது என்பதைப்பற்றி சிந்தித்துச் செயல்பட வேண்டும். உதாரணத்திற்கு,

நமக்கு நெருக்கமானவர்களின் மரணம் அல்லது ஏமாற்றம் இவை இரண்டையும் நடந்து முடிந்த பின் அதைப் பற்றியேச் சிந்தித்து கொண்டு நிகழ்காலத்தில் செய்ய வேண்டிய கடமைகளைச் சரிவரசெய்யாமல் இருப்பதே இம்மன அழுத்த நோய்க்கு மிகவும் முக்கியமான காரணம். எனவே அதை ஏற்றுக் கொண்டு, நிகழ்காலத்தில் வாழப் பழக வேண்டும்.

 

4. அதனோடு வாழப் பழகிக்கொள்ளுதல் (Adapt) - நம்மால் மாற்ற முடியாத நிறைய விசயங்கள் மனித வாழ்க்கையில் உண்டு. உதாரணத்திற்கு, பிறர் எப்படி நம்மிடம் பழகுகிறார்கள் அவர்களது சுபாவம் என்ன? மனோபாவம் என்ன? அவர்கள் எப்படி நம்மிடம் பேசுவார்கள்? இதைப்பற்றி ஓரளவுதான் நம்மால் கணிக்க முடியும்.

நம்மைப் பற்றி எப்படி சிந்திப்பார்கள்? என்பதை நம்மால் கணிக்கமுடியாது. அதையும் நம்மால் மாற்றவும் இயலாது. நம்மால் மாற்ற முடிந்த ஒரு விசயம் என்ன? நம்மை நாமே மாற்றிக் கொள்வது. ஆம், உலகில் உள்ள மற்றவர்களின் சுபாவங்களையோ, பழக்கவழக்கங்களையோ மாற்ற முயற்சிப்பதை விட நாம் நம்மை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள, மன அழுத்ததிலிருந்து விடுபட, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சிந்திப்பது தான் சாலச்சிறந்தது.

இது கூறுவதற்கு மிக எளிது, ஆனால் செயலில் பின்பற்றுவது என்பது, கொஞ்சம் சிரமமான ஒன்று தான். ஆனால் முடியாதது அல்ல. நம் மனத்தை அவ்வப்போது விலகி நின்று பார்க்கப்பழக வேண்டும்.

நம்மை மாற்றிக்கொண்டு ஒவ்வொரு செயல்களாகச் செய்யச்செய்ய சிறிதுசிறிதாக மனஅழுத்தங்கள் விலகி, மனத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் உருவாகும். எனவே பொறுமையாக முயற்சிகளை செய்ய வேண்டும்.

மனஅழுத்தத்துடன் வாழ்க்கையில் சாதனை புரிவதைவிட, மனமகிழ்ச்சியுடன் வாழ்க்கையை வாழ்வதுதான் மிகவும் முக்கியம் என்பதை மனத்தில் நிறுத்தி நம் உடலுக்கும் மனத்துக்கும் நாம் செய்ய வேண்டியவற்றை அனுதினமும் சரியாக செய்தோமேயானால் இம்மன அழுத்த நோயிலிருந்து நாம் எப்போதுமே விலகி இருக்கலாம் என்பது உறுதி. 

Tags:    

Similar News