சிறப்புக் கட்டுரைகள்

விண்ணில் பறந்த முதல் பெண்!

Published On 2024-05-29 15:03 IST   |   Update On 2024-05-29 15:03:00 IST
  • 1963-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் நாள் வோஸ்டாக் 6 என்ற விண்கலத்தில் விண்ணில் பறந்தார் வாலண்டினா. 48 முறை அவர் பூமியைச் சுற்றினார்.
  • விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பி வந்த முதல் விண்வெளி வீராங்கனைக்கு யாரும் எதிர்பார்க்காத அளவு உலகம் வரவேற்பு கொடுத்தது.

ஒரு பெண்ணினால் எதையும் சாதிக்க முடியும். அதிலும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த சாதாரண பெண்மணி முன்னேறி உயர்ந்து விண்ணில் பறக்க முடியும் என்பதை நிரூபித்தவர் வாலண்டினா தெரஷ்கோவா என்ற ரஷ்ய பெண்மணி!

உலகப் பெண்களின் ஆதர்ச நாயகியாக கொண்டாடப்படும் இவருக்கு இப்போது வயது 87. இன்னும் அனைவரையும் உற்சாகப்படுத்திக்கொண்டு வாழும் இவரது வாழ்க்கை அர்த்தமுள்ள வாழ்க்கை!

பிறப்பும் இளமையும்: ரஷியாவின் பிரசித்தி பெற்ற வோல்கா நதிக்கரையில் அமைந்துள்ள போல்ஷோவ் மஸ்லென்னிகோவோ என்ற கிராமத்தில் 6-3-1937 அன்று எளிய உழைக்கும் வர்க்க குடும்பத்தில பிறந்தார் வாலண்டினா தெரஷ்கோவா.

அவரது தந்தை விளாடிமிர் தெரஷ்கோவ் ஒரு விவசாயி. டிராக்டர் டிரைவராக பணி புரிந்தார். வாலண்டினாவிற்கு இரண்டு வயதாக இருக்கும்போதே அவர் பின்னிஷ் விண்டர் போரில் சோவியத் படையின் சார்பாகப் போரிட்டு இறந்தார். தாயார் சின்னக் குழந்தையை தூக்கிக்கொண்டு யரோஸ்லவ் என்ற ஊருக்கு இடம் பெயர்ந்து ஒரு பஞ்சாலையில் வேலை பார்க்க ஆரம்பித்தார்.

எட்டு வயதில் பள்ளியில் சேர்ந்த வாலண்டினா 16 வயதில் படிப்பை முடித்தார். முதலில் ஒரு டயர் தொழிற்சாலையிலும் பின்னர் பஞ்சாலை ஒன்றிலும் வேலை பார்க்க ஆரம்பித்தார். தபால் மூலம் அவரது படிப்பு தொடர்ந்தது.

ஸ்கை டைவிங்: இயல்பாகவே அவருக்கு ஸ்கை-டைவிங்கில் ஆர்வம் ஏற்பட்டது. 22-ம் வயதில் 21-5-1959-ல் தனது முதல் பயிற்சியாக வானத்தில் இருந்து குதித்தார். பாராசூட்டில் இருந்து குதிப்பது அவருக்கு எளிதில் கை வந்த கலையாக ஆனது.அத்தோடு கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு உறுப்பினராகவும் அவர் 1962-ல் சேர்ந்தார்.

விண்வெளியில் பறந்த யூரி ககாரின்: 1961-ல் யூரி ககாரின் விண்வெளியில் பறந்து உலகையே பரபரப்புக்குள்ளாக்கினார். இந்தப் பரபரப்பை மேலும் அதிகமாக்க ரஷியா விரும்பியது. ஒரு பெண்மணியை விண்வெளியில் பறக்க வைத்தால் என்ன என்ற யோசனை ரஷிய உயர்மட்ட அதிகாரிகளிடம் தோன்றவே அதை நிறைவேற்ற தகுந்த ஒரு பெண்மணியை அவர்கள் தேடலாயினர்.

பெண்மணிக்கு வாய்ப்பு: 80000 பெண்மணிகள் விண்ணில் பறக்க விரும்பி விண்ணப்பம் செய்தனர். 30 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும், 70 கிலோ எடைக்குள்ளாக இருக்க வேண்டும், உயரம் 170 சென்டிமீட்டரைத் தாண்டக்கூடாது, விண்ணில் பறக்கும் திறன் இருக்க வேண்டும் - ஆகிய இவை அடிப்படைத் தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டன.

ஏராளமான கடுமையான பயிற்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட 58 பேருக்குத் தரப்பட்டது. அதில் 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் ஐவர் இறுதிச் சுற்றுக்குத் தயாராயினர்.

வாலண்டினா 126 முறை பாராசூட்டிலிருந்து குதித்து நல்ல திறமையைப் பெற்றிருந்ததால் அவர் இந்த ஐவரில் ஒருவராக இருந்தார். சோவியத் விமானப்படையில் சேர்க்கப்பட்டு பயிற்சியும் அவருக்குத் தரப்பட்டது.

எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டார்: இவருடன் போட்டியிட்ட ஐவரில் சோலோவ்யெவா என்பவர் 700 முறை பாராசூட்டிலிருந்து குதித்திருக்கிறார். பாராசூட் ஜம்பிங்கில் மாஸ்டர் என்ற பெயர் எடுத்திருக்கிறார். ஆனால் இவரையும் மீறி வாலண்டினா எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்?

அவரது குடும்பப் பின்னணி அவருக்கு உதவி செய்தது. சாதாரண உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்மணியாக அவர் இருந்ததால் ரஷிய அதிபரான குருஷேவ் அவரைத் தேர்ந்தெடுத்தார். மக்களின் பெண்மணியாக அவர் திகழ்வார் என்று அவர் நம்பினார். ஆகவே அவரே விண்வெளிப் பெண்மணியாக அறிவிக்கப்பட்டார்.

அத்துடன் மட்டுமின்றி மற்ற பெண்மணிகள் விண்ணிலிருந்து வந்த பின்னர் அவர்கள் விண்வெளித் துறையில் மட்டுமே ஈடுபடுத்த வல்லவராக இருப்பார்கள். ஆனால் வாலண்டினாவோ நல்ல மன உறுதி வாய்ந்தவர், ஒவ்வொருவரிடமும் பழகும் போதும் மிக நல்ல பெயரை எடுக்கிறார், நாட்டின் பெருமையை உயர்த்த வல்ல பேச்சுத் திறனுடன் சமுதாயத்தில் நன்கு பழகக் கூடியவர். ஆகவே சமூகத்தில் சிறப்புடன் பணியாற்ற முடியும். இப்படிப்பட்ட காரணங்களை அவரது கமாண்டர் நிகோலய் கமான் தனது குறிப்பேட்டில் பதிவு செய்தார். ஆகவே இவையும் அவருக்குச் சாதகமாக அமைந்தது.

விண்வெளியில் பறந்த முதல் பெண்மணி: 1963-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் நாள் வோஸ்டாக் 6 என்ற விண்கலத்தில் விண்ணில் பறந்தார் வாலண்டினா. 48 முறை அவர் பூமியைச் சுற்றினார். மூன்று நாட்கள் அவர் விண்வெளியில் இருந்தார். விண்வெளியில் தனியாகப் பறந்த பெண்மணி என்ற பெயரையும் பெருமையையும் அவர் பெற்றார். 26-ம் வயதிலேயே விண்வெளி வீராங்கனை ஆனதால் விண்ணில் பறந்ததிலேயே இளமையானவர் என்ற பெயரும் அவருக்குக் கிடைத்தது.

அவருக்குப் பின்னால் 19 வருடங்கள் கழிந்த பின்னரே, 1982-ல் தான் ஸ்வெட்லான ஸவிட்ஸ்கயா என்ற ரஷிய பெண்மணி அடுத்ததாக விண்ணில் பறந்தார்.

பல அபாயங்கள்: விண்ணில் இருந்தபோது அவர் நெடுநேரம் மவுனமாகவே இருந்தார். நிர்ணயிக்கப்பட்டிருந்த அனைத்து சோதனைகளையும் அவரால் முடிக்க முடியவில்லை. களைப்பினால் ஒரு சமயம் அவர் விண்கலத்தில் தூங்கி விட்டார். பூமியிலிருந்து வரும் தகவல்களுக்குச் சில சமயம் அவர் பதில் சொல்லவே இல்லை. ஒரு வழியாக அவரைத் தூக்கத்தில் இருந்து எழுப்பினர். ஆனால் ஏராளமான அபாயங்களுக்கு ஈடு கொடுத்து அவர் விண்ணில் இருந்து மீண்டார்.

சுமார் 30 வருடங்களுக்குப் பின்னர் தான், ஒரு பேட்டியில் நடந்தது என்ன என்பதை அவர் குறிப்பிட்டார்.

வோஸ்டாக் - 6 என்ற அவரது விண்கலம் தவறான கோ- ஆர்டினேட்டுகளை கணினியில் கொண்டிருந்தது. அதைக் கண்டுபிடித்து, சரி செய்து பூமியில் இறங்கும் தருணம் வந்தபோது விண்கலம் நேர் எதிர் திசையில் செல்ல ஆரம்பித்தது. இதைப் பார்த்து திடுக்கிட்ட வாலண்டினா உடனடியாக கணினி இயக்கத்தை நிறுத்தி விட்டு நேரடியாக தானாகவே விண்கல இயக்கத்தை சரியான ஓடு பாதையில் ஓடும்படி சரி செய்தார்.

பூமிக்கு வந்து இறங்கியதும் அவருக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளில் இருந்து சிறிது விலகினார். அவரது மீட்புக் குழு அவரிடம் வந்து சேரும் முன்னர், விண்ணில் சோதனைக்காக எடுத்துச் சென்றிருந்த உருளைக்கிழங்கினால் ஆன பசைபோன்ற உணவின் ஒரு பகுதியை அங்குள்ள உள்ளூர் மக்களுக்கு விநியோகித்து மகிழ்ந்தார்.

இதைக் கேள்விப்பட்ட உயர் அதிகாரியான கோரொலெவ், "ஐயோ! போதும், போதும் இன்னொரு பெண்மணியை எனது ஆயுள் காலத்தில் விண்வெளிக்கு அனுப்பமாட்டேன்" என்று ஜோக் அடித்தார்.

விண்வெளிப் பயணத்திற்குப் பின்!

விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பி வந்த முதல் விண்வெளி வீராங்கனைக்கு யாரும் எதிர்பார்க்காத அளவு உலகம் வரவேற்பு கொடுத்தது.

முக்கியமாக பெண்மணிகள் ஆட்டம் ஆடி, பாட்டுப் பாடி ஆனந்தமாகக் கொண்டாடினர். 

ச.நாகராஜன்

ஏராளமான இசைத் தட்டுகள் வெளியாகின. உலகெங்கிலும் இருந்து அவருக்கு பாராட்டுச் செய்திகள் மலையெனக் குவிந்தன.

டெல்லியில், "பெண்களின் அடிமைத் தளையை உடைக்கப் பிறந்த பெண்மணி" என்று அவர் கொண்டாடப்பட்டார்.

குடும்பம்: வாலண்டினா 1963-ம் வருடம் நவம்பர் மாதம் 3-ம் தேதி ஆண்ட்ரியன் நிலோலயெவ் என்பவரை மணந்தார். திருமணத்திற்கு ரஷிய அதிபர் நிகிதா குருஷேவ் தலைமை தாங்கினார். 1964, ஜூன் எட்டாம் தேதி எலினா என்ற பெண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். ஆண்ட்ரியனும் விண்வெளி வீரர் என்பதால் விண்வெளி தம்பதிகளுக்குப் பிறந்த முதல் குழந்தை என்ற பெருமையை இந்தக் குழந்தை பெற்றது.

1977-ல் திருமண உறவு ஒரு முடிவுக்கு வர 1982-ல் ஆண்ட்ரியனை விவாகரத்து செய்தார் வாலண்டினா. தனது கணவரைப் பற்றி விவாகரத்து ஆனதற்குப் பின்னர் ஒரே ஒரு முறை தான் அவர் விமர்சனம் செய்து கூறினார் இப்படி : "வேலையில் அவர் தங்கம்; வீட்டில் அவர் சர்வாதிகாரி!"

பின்னர் யூலி ஷபோஷ்னிகோவ் என்பவரை மணந்தார். 1999-ல் யூலி மறைந்தார்.

அரசியல் பிரவேசம்: 1966-ல் அவர் அரசியல்வாதியாக ஆனார். சோவியத் பெண்கள் கமிட்டிக்குத் தலைவராக ஆனார். ரஷிய சுப்ரீம் கவுன்சிலுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரது உடை அணியும் பாணியும், அவர் அணிந்து கொள்ளும் உடைகளும் அனைத்துப் பெண்மணிகளையும் கவர்ந்தன.

உலகெங்கும் அவர் செல்ல வேண்டி இருந்ததால் ஆங்காங்குள்ள பெண்மணிகள் ஆடைகள் பற்றி அவரிடம் டிப்ஸ் கேட்டு வாங்கி மகிழ்ந்தனர்.'

ரஷிய அதிபர் புதினின் பாராட்டு: வாலண்டினாவும் ரஷிய அதிபர் புதினும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் மிகுந்த அன்பு பாராட்டுபவர்கள். வாலண்டினா மீது பெரும் மதிப்பு கொண்ட ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் 2017-ல் வாலண்டினாவின் பிறந்தநாள் அன்று, "எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்' என்று சொல்ல, வாலண்டினா, "நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். நன்றி" என்று பதில் கூறினார்.

வாலண்டினாவின் செய்தி:

வாலண்டினா தனது விண்வெளி அனுபவத்தின் மூலமாக உலக மக்களுக்கு ஏராளமான செய்திகளைத் தந்துள்ளார்.

"விண்வெளிக்குச் சென்று ஒருவர் சிறிது நேரம் கழித்தால் கூடப் போதும் அவர் விண்வெளியை ஆயுள் முழுவதும் நேசிப்பார். வானம் பற்றிய எனது இளமைக் கால கனவை நான் சாதித்து விட்டேன்"

"விண்வெளிக்கு நீங்கள் சென்று விட்டீர்கள் என்றால் பூமி எவ்வளவு சிறியது, சுலபமாக நொறுங்கக் கூடியது என்பதை அறிவீர்கள்"

"பெண்கள் ரஷியாவில் ரெயில் தண்டவாளம் அமைப்பதில் பணி செய்கிறார்கள் என்றால், அவர்கள் ஏன் விண்வெளிக்குச் செல்லக் கூடாது?" என்று கேட்டார் அவர்.

பெண்களுக்கு அவர் கூறும் முக்கிய செய்தி இது:

ஒரு பெண்ணானவள் என்றுமே பெண்ணாகவே இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவள் நான். பெண்மையைப் போற்றும் எதுவும் அவளுக்கு அந்நியமாக இருக்கக்கூடாது. அதே சமயம் விஞ்ஞானத்திலோ, பண்பாட்டுத்துறையிலோ எதில் அவள் ஈடுபட்டிருந்தாலும் சரி எவ்வளவு கடுமையாக, தீவிரமாக அதில் அவள் உழைத்தாலும் சரி, அது அவளது புராதனமான பழம்பெரும் ஆச்சரியகரமான உயரிய குறிக்கோளான "அன்பு பாராட்டு; அன்பைக் கொள் - என்ற அவளது தாய்மைக்காக ஏங்கும் ஆனந்தத்திற்கு முரணாக அமைந்து விடக் கூடாது.

பெண்மையைப் போற்றி உலகப் பெண்மணிகளுக்கு 'வானளவு' நம்பிக்கையைத் தந்த வாலண்டினா 'விண்ணளந்த வீராங்கனை' என்ற சிறப்புப் பெயருக்கு உரியவர் தானே!

தொடர்புக்கு:-

snagarajans@yahoo.com

Tags:    

Similar News