சிறப்புக் கட்டுரைகள்

நல்ல புத்தி தரும் புதன்

Published On 2024-04-16 10:14 GMT   |   Update On 2024-04-16 10:14 GMT
  • புதன் பகவான் சரியான அமைப்பில் இல்லாமல் இருந்தால் குழந்தைபேறு கிடைப்பதில் கூட தாமதத்தை கொடுத்து விடுவார்.
  • குறிப்பாக நரம்பு மண்டல பாதிப்பை புதன் தோஷம் கொடுத்து விடும்.

புதன் கிரகம் அற்புதமான கிரகம் ஆகும். வித்தைகளின் களஞ்சியமாக புதன் கிரகத்தை சொல்வார்கள். புதன் கிரகம் ஒருவரது ஜாதகத்தில் நல்லவிதமாக இருந்தால் அவரது அறிவாற்றல் அற்புதமாக இருக்கும். அவர்களது முடிவுகள் வெற்றிகளை தேடித்தரும். எனவேதான் நல்ல புத்தி தரும் புதன் என்று சொல்வார்கள்.

புதன் பகவான் சந்திரனுக்கும், தாரைக்கும் மகனாக பிறந்தவர். இவருக்கு அருணன், கணக்கன், காமன், சாமன், சவுமியன், ததூதன், தேர்பாகன், பண்டிதன், பொறையன், மதிமகன், மேதை என்றெல்லாம் பல்வேறு பெயர்கள் உண்டு. வெளிர்பச்சை நிறம்தான் இவருக்கு பிடித்த நிறமாகும்.

புதன் புத்திகாரகன் என்று சொல்லப்படுவதால் ஜாதகத்தில் கிரக அமைப்புகள் சரியாக இருக்கும் பட்சத்தில் தெளிந்த மனம், எதையும் சிறப்பாக செய்யும் திறமை இருந்துக் கொண்டே இருக்கும். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் எந்த பணியாக இருந்தாலும் புதன் வலுவாக இருப்பவர்கள் மிக மிக சாமர்த்தியமாக செய்து முடிப்பார்கள்.

புதன் மூலம்தான் ஒருவருக்கு நல்ல நட்பு, பெரியவர்களின் தொடர்பு, உயர்மட்டத்தில் முன்னேற்றம் ஆகியவை தானாக தேடி வந்து அமையும். அதற்கான பேச்சு திறமையையும், செயல்பாடுகளையும் புதன் கிரகம் கொடுத்து கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் சொல்லப்போனால் ஒருவரது ஜாதகத்தில் புதன் திசை நல்ல விதமாக நடந்தால் ஊரே போற்றும் வகையில் அவரது வளர்ச்சி இருக்கும். உலகப்புகழ் பெற்ற பலரது ஜாதகத்தை ஆய்வு செய்தபோது அவர்களது வெற்றி அனைத்தும் புதன் கிரகத்தை பின்னணியாக கொண்டு அமைந்திருப்பதை ஜோதிடர்கள் கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.

ஒருவர் எந்த துறையில் இருந்தாலும் அதில் அவர் சிறப்பாக வேண்டுமானால் புதன் கிரகத்தின் ஒத்துழைப்பும், அனுகூலமும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். சிலர் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உடையவர்களாக இருப்பார்கள். அதற்கு காரணம் புதனின் செயல்பாடுதான்.

நவக்கிரகங்களில் அனைத்து கிரகங்களின் தாக்கம் ஒருவரது உடல் உறுப்புகள் தொடர்புடைதாக இருக்கும். ஆனால் புதன் கிரகத்தின் தாக்கம் மட்டும் ஒருவரது மனதை மட்டுமே கொண்டதாக இருக்கும். ஒருவர் நல்ல சிந்தனையுடன் இருக்கிறார் என்றாலும் சரி, தீய சிந்தனையுடன் இருக்கிறார் என்றாலும் சரி அதற்கு காரணம் புதன்தான்.

தவறான சிந்தனை ஒருவரிடம் மிகுந்து இருந்தால் அவரது ஜாதகத்தில் புதன் கிரகம் தோஷம் உடையதாக மாறி இருக்கிறது என்பது அர்த்தமாகும். புதனுடன் வளர்பிறை சந்திரன், சுக்கிரன், குரு ஆகியோர் சேர்ந்து இருந்தால் நல்ல சிந்தனை இருக்கும். அதே சமயத்தில் சனி, செவ்வாய், ராகு, கேது ஆகிய கிரகங்களின் சேர்க்கை அமைந்துவிட்டால் புதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும். அந்த சமயங்களில்தான் ஒருவரது மனதில் தவறான சிந்தனைகள் தறிக்கெட்டு வந்து கொண்டே இருக்கும்.

பொதுவாக புதனை மிகவும் அருமையான சுப கிரகம் என்று சொல்வார்கள். ஆனால் பாவ கிரகங்களுடன் சேரும்போது அதுவும் பாவமாகி விடுகிறது. மிதுனம், கன்னி ராசியில் புதன் சேர்க்கை அமைந்தால் எதிர்மறையான பலனை தான் பெற முடியும் என்று ஜோதிட நூல்கள் சொல்கின்றன. இது மிகப்பெரிய தோஷமாகவும் கருதப்படுகிறது.

ஒருவரது ஜாதகத்தில் புதன் அமைவதை பொறுத்து அது தோஷமா? இல்லையா? என்பதை கண்டுபிடித்து விடலாம். புதன் கிரகமானது ஒருவரது ஜாதகத்தில் 2, 4, 6, 8, 10, 11 ஆகிய இடங்களில் உச்சம் பெற்றிருந்தால் அந்த நபருக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

அதே சமயத்தில் புதன் நீச்சம் பெற்றுவிட்டால் அந்த ஜாதகக்காரருக்கு புதன் தோஷம் இருக்கிறது என்று அர்த்தம். அத்தகைய சூழ்நிலையில் மூளை வேலை செய்யாது. குடும்பத்தில், தொழிலில், நட்பில் குழப்பங்கள் வந்து கொண்டே இருக்கும். சிலருக்கு நோய் தாக்கம் கூட ஏற்படலாம். குறிப்பாக நரம்பு மண்டல பாதிப்பை புதன் தோஷம் கொடுத்து விடும்.

புதன் தோஷம் சற்று அதிகமாக இருந்தால் உடல் வலி, நுரையீரல் பாதிப்பு, ஆஸ்துமா தொடர்பான சிக்கல்களுக்கும் வழி வகுத்து விடும். இவை அனைத்தையும் விட குழந்தை பாக்கியத்திலும் புதன் பகவானின் பங்களிப்பு முக்கியமானது. எனவே புதன் பகவான் சரியான அமைப்பில் இல்லாமல் இருந்தால் குழந்தைபேறு கிடைப்பதில் கூட தாமதத்தை கொடுத்து விடுவார்.

ஆகையால் புதன் தோஷம் இருப்பது தெரிய வந்தால் அவசியம் பரிகாரம் செய்ய வேண்டும். சிறிய, எளிய பரிகாரங்கள் மூலமாகவே புதன் பகவானை திருப்தி செய்துவிட முடியும். புதன்கிழமைகளில் ஆலயத்துக்கு சென்று வழிபட்டாலே போதுமானது. புதன்கிழமை காலை 7 மணி முதல் 9.30 மணி வரை பெருமாள் ஆலயத்துக்கு சென்று வழிபட வேண்டும்.

சிவ பக்தர்களாக இருந்தால் புதன்கிழமை காலை 7 மணி முதல் 9.30 மணி வரை சிவாலயத்தில் நந்திக்கு பூஜை செய்து பச்சை பயிறு படைத்து வழிபட வேண்டும்.

புதன்கிழமைகளில் புதன் ஓரையில் புதனுக்குரிய காயத்ரி மந்திரங்களை சொல்லி வருவது மிகவும் நல்லது. மகாவிஷ்ணுவை எந்த அளவுக்கு வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு புதன் கிரக தோஷங்கள் அகன்று விடும். புதன்கிழமைகளில் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

புதனுக்கும், துளசிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. துளசி லட்சுமியின் அம்சமாகும். துளசி வீட்டில் இருந்தால் குடும்பத்தில் நல்ல மனநிலை நிலவும். அதே சமயத்தில் புதன் கிரகம் மிதுனம், கன்னி வீட்டின் அதிபதியாவார். இது திருமால்

குடிகொள்ளும் வீடாகும். இதனால்தான் புதனுக்கும், துளசிக்கும் தொடர்பு இருப்பதாக சொல்கிறார்கள்.

இதை கருத்தில் கொண்டுதான் புதன் தோஷம் இருப்பவர்கள் துளசி பொடி சாதம் சாப்பிட வேண்டும் என்று ஜோதிடர்கள் குறிப்பிடுவது உண்டு. சித்தர்களும் துளசியின் இந்த மகத்துவத்தை தங்களது மருத்துவ நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

பரிகாரங்கள் செய்வதை விட துளசி வழிபாடு மிகவும் சிறப்பானது. ஒருவர் எந்த அளவுக்கு தினமும் துளசியை பூஜித்து போற்றி வழிபடுகிறாரோ அந்த அளவுக்கு அவருக்கு பலன்கள் கிடைக்கும். துளசி தண்ணீரை குடித்தால் உடல், மனம் அனைத்தும் தூய்மையாகும். எனவேதான் நமது மூதாதையர்கள் துளசியை மாடத்தில் வைத்து பூஜித்து வந்தனர்.

சிலருக்கு புதன் தோஷத்தால் வாஸ்து பிரச்சினைகளும் ஏற்படுவது உண்டு. அவர்கள் வீட்டில் துளசி மாடத்தை தினமும் காலையில் குளித்து விட்டு கிழக்கு முகமாக விளக்கேற்றி நைவேத்தியம் செய்து வழிபட்டால் நிச்சயம் நல்ல பலன்கள் கிடைக்கும். துளசியை வழிபட... வழிபட... மன குழப்பங்கள் நீங்கி அனைத்து முடிவுகளையும் சரியாக எடுக்க முடியும். இதன் மூலம் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கு வழிவகை உண்டாகும்.

சிலருக்கு ஆலயத்துக்கு சென்று வழிபட்டால்தான் தோஷம் நிவர்த்தி செய்வதற்கு பலன் கிடைக்கும் என்பார்கள். அத்தகைய மனம் கொண்டவர்கள் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு சென்று வழிபட்டு வந்தாலே போதும் புதன் தோஷம் நீங்கும்.

திருவெண்காடு தலத்துக்கும் சென்று வழிபடலாம். இந்த ஆலயம் புதன் பகவானுக்குரிய ஆலயமாகும். முடிந்த போதெல்லாம் புதன் காயத்ரி அல்லது புதன் கிரகத்துக்குரிய போற்றிகள் சொல்லிக் கொண்டே வந்தால் போதும். நல்ல நிலைமைக்கு வந்து விட முடியும். புதன் காயத்ரி மந்திரத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் 108 தடவை உச்சரித்தால் எதிர்பாராத நன்மைகள் எல்லாம் வந்து சேரும்.

புதன் காயத்ரி மந்திரமோ அல்லது போற்றி சொல்லவோ நேரம் இல்லை என்று நினைப்பவர்கள் தமிழில் எளிய மந்திரம் ஒன்றை சொல்லலாம். அந்த மந்திரம் வருமாறு:-

சந்திரன் மகனாய் தோன்றியவனே

தினைமொட்டு போன்ற கருமையான

நிறத்தை உடையவனே

ஒப்புயர்வு இல்லாத சிறந்த

வடிவத்தினை உடையவனே

நற்குணங்களுக்கெல்லாம்

காரணமானவனே

புதன் பகவானே உன்னிடம்

சரண் அடைகிறேன்.

இந்த மந்திரத்தை சொல்லி வாருங்கள். புதன் தோஷம் அனைத்தும் ஓடி விடும்.

Tags:    

Similar News