சிறப்புக் கட்டுரைகள்

மலரும் நினைவுகள் மீனா: ஆபாசம் தவிர்ப்பு...

Published On 2024-02-05 16:36 IST   |   Update On 2024-02-05 16:36:00 IST
  • தப்பாக தைத்து தந்த ஜாக்கெட்டை காட்டித்தான் நான் அவரிடம் பேச வேண்டும்.
  • நான் எவ்வளவு பெரிய ஹீரோயினாக இருந்தாலும் உண்மையில் மனதளவில் நான் ஒரு குழந்தை மாதிரி தான்.

ஜாக்கெட்டில் கையை எந்த இடத்தில் வைத்து தைக்க வேண்டுமோ அப்படி இல்லாமல் அதற்கு பதிலாக முன் பகுதியில் வைத்து தைத்து இருந்தது.

அப்படி ஒரு ஜாக்கெட்டை என் கையில் தந்து அதை விரித்து காட்டி டெய்லரிடம் சில டயலாக் பேச சொன்னார்கள்.

'மருமகன்' படத்தில் இப்படி ஒரு காட்சி. இதில் டெய்லர் பாத்திரத்தில் கதாநாயகன் கார்த்திக் சார் நடித்திருப்பார். அவர் தப்பாக தைத்து தந்த ஜாக்கெட்டை காட்டித்தான் நான் அவரிடம் பேச வேண்டும்.

ஜாக்கெட்டையும் பார்த்தேன். எனக்கு தரப்பட்ட டயலாக்கையும் படித்து பார்த்தேன். இதை கார்த்திக் சாரிடம் நான் பேச வேண்டுமா?.

அந்த காட்சி எனக்கு பிடிக்கவில்லை. ஆபாசமாக தெரிந்தது. பேசுவதற்கு தயக்கமாக இருந்தது. ஆனால் அதை எப்படி தவிர்ப்பது? யாரிடம் சொல்வது? என்று புரியாமல் ஒரே குழப்பம். ரொம்ப தர்ம சங்கடமாக இருந்தது.

எனது குழப்பத்தை என் முகமே காட்டி கொடுத்து இருக்க வேண்டும். அதனால் தான் கார்த்திக் சார் என்னை பார்த்ததும் 'ஓய் யூ ஆர் டல்' என்றார்.

நான் அவரிடம் விவரத்தை சொல்லி அசிங்கமாக இருக்கு சார். எனக்கு பிடிக்கவில்லை என்றேன்.

உனக்கு பிடிக்கவில்லை என்றால் டைரக்டரிடம் போய் சொல்ல வேண்டியது தானே என்றார்.

அந்த காலத்தில் நான் எவ்வளவு பெரிய ஹீரோயினாக இருந்தாலும் உண்மையில் மனதளவில் நான் ஒரு குழந்தை மாதிரி தான். எதற்கெடுத்தாலும் பயம், தயக்கம் இருக்கும். அந்த குணத்தை என்னிடம் இருந்து மாற்றவே முடியவில்லை.

கார்த்திக் சார் 'போ... போய் சொல்லு' என்று தைரியமாக சொல்லிவிட்டார். ஆனால் எனக்கு அந்த தைரியம் வரவில்லை. டைரக்டரிடம் போய் காட்சி பிடிக்கவில்லை. மாற்றுங்கள் என்று சொல்வார்களா? சொன்னால் கேட்பார்களா? தப்பாக எடுத்துக் கொள்வார்களா என்று ஒரே தயக்கம்.

சொல்லலாமா... வேண்டாமா... என்று முழித்து கொண்டிருந்தேன். கார்த்திக் சார் தான் மீண்டும் போ.. போய் சொல்லு என்று வலுக்கட்டாயமாக என்னை தள்ளிவிட்டார்.

டைரக்டர் மணிவாசகம் சார். சற்று தூரத்தில் இருந்தார். உதவி டைரக்டர் அருகிலேயே நின்றார். அவரிடம் போய் சொன்னேன்.

அவர் டைரக்டரிடம் போய் 'மீனா, இந்த காட்சியை நடிப்பதற்கு அசவுகரியமாக நினைக்கிறார். உங்களிடம் நேரில் சொல்ல தயங்குகிறார்' என்று கூறி இருக்கிறார்.


அதை கேட்ட மணிவாசகம் சாரும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அதற்கு என்ன? ஹீரோயினுக்கு பிடிக்கவில்லை என்றால் காட்சியை மாற்றி விடுவோம் என்று கூறி அந்த காட்சியையே தவிர்த்துவிட்டார்.

ஓ... இந்த மாதிரி நமக்கு பிடிக்காத காட்சிகள் என்றால் டைரக்டரிடம் போய் சொல்லலாம் போல... என்று அப்போது தான் தெரிந்து கொண்டேன்.

மருமகன் படத்தில் தான் முதல் முதலாக எனக்கு கார்த்திக் சாருடன் அறிமுகம். அந்த காலகட்டத்தில் அவர் உச்சத்தில் இருந்தார். எனவே எப்படி பழகுவார் என்ற சந்தேகம் இருந்தது.

ஆனால் நான் எதிர் பார்த்ததை விட ரொம்பவே ஜாலியானவர். 'மருமகன்' படத்துக்கு கால்ஷீட் கொடுக்கவே சிரமப்பட்டேன். அந்த அளவுக்கு தெலுங்கு படங்களில் பிசியாக இருந்தேன். சொல்லப்போனால் அப்போது உட்கார நேரமில்லாமல், சாப்பிட நேரமில்லாமல், தூங்க முடியாமல் ஓடிக்கொண்டிருந்தேன்.

அதிகாலை வரை ஷூட்டிங் நடக்கும். அப்புறமாக அறைக்கு வந்து மேக்கப்பை கலைத்து விட்டு தூங்குவதற்கு 4 மணி வரை ஆனதுண்டு.

மீண்டும் 6 மணிக்கே ஷூட்டிங் செல்ல எழுப்பி விடுவார்கள். தூக்கம் கண்ணை சொக்கும். மருமகன் ஷூட்டிங் பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் நடந்தது.

சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் சென்றேன். அந்த ஒரு மணி நேரத்தில் நன்றாக தூங்கி விட்டேன்.

விமானம் தரையிறங்கிய பிறகு கோவை வந்துவிட்டது என்று தட்டி எழுப்பிவிட்டார்கள். அப்புறம் அங்கிருந்து பொள்ளாச்சிக்கு 2 மணி நேரம் கார் பயணம். அதிலும் ஒரு தூக்கம். 24 மணி நேரம் வரை தூங்காத நாட்களும் உண்டு. தொடர்ந்து 2 நாட்கள் கூட தூங்காத நாட்களும் உண்டு. இப்படித்தான் ஒவ்வொரு நாளும் நகர்ந்தது.

பொள்ளாச்சி

இயற்கை எழில் நிறைந்த பகுதி. அந்த காலத்தில் வெளி நாடுகளில் படப்பிடிப்பு நடத்துவது மிகவும் அரிதானது. பெரும்பாலும் பொள்ளாச்சி, கோபிசெட்டி பாளையம், ஊட்டி பகுதிகளில் தான் படப்பிடிப்புகள் நடக்கும். எங்களுக்கு வெளிநாடும் அது தான்.

கண்ணுக்கு விருந்த ளிக்கும் வகையில் வால்பறை, பனிபடரும் பகுதி, நீர்வீழ்ச்சி, டாப்சிலிப், அணைகள் என்று படக்குழுவினருக்கு ஏற்ற இடம் அது.

பொள்ளாச்சியில் 'சக்தி' ஓட்டல் தான் பிரபலம். சினிமா கலைஞர்கள் பெரும்பாலும் அங்குதான் தங்கி இருப்பார்கள். தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு, கன்னடம், இந்தி எனறு பல மொழிகளில் படப்பிடிப்பும் நடக்கும்.

எப்போது பார்த்தாலும் படப்பிடிப்பு குழுவினர்கள் நிறைந்து இருப்பார்கள். அந்த ஓட்டலில் எனக்கு தனியாக ஒரு அறை ஒதுக்கி வைத்திருப்பார்கள். மற்ற அறைகளை விட அது கொஞ்சம் பெரிய அறையாக இருக்கும்.

ஷூட்டிங் முடிந்து கிளம்பும் போதும் அடுத்த ஒரு வாரத்தில் அல்லது இந்த தேதியில் வருவோம் என்று சொல்லி விட்டுத்தான் புறப்படுவோம். அந்த அளவுக்கு பொள்ளாச்சிக்கு ராசி உண்டு.

ஆனால் மருமகன் படத்துக்கு ராசி இல்லை. எதிர் பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பது மனதுக்கு கஷ்டமாகத் தான் இருந்தது.

ஆனால் கார்த்திக் சாருடன் நடித்த அடுத்த படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

அது எந்த படம்? அப்போது நடந்த பல திகிலான அனு பவங்களை பகிர்ந்து கொள்ள மீண்டும் அடுத்த வாரம் சந்திக்கிறேன்.

(தொடரும்....)

Tags:    

Similar News