செய்திகள்
100 மடங்கு அதிவேக இண்டர்நெட் வழங்கும் புதுவகை வைபை முறை கண்டுபிடிப்பு
ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு மூலம் தற்போது இருப்பதை விட 100 மடங்கு வேகத்தில் இண்டர்நெட் பயன்படுத்த முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.
லண்டன்:
இன்ப்ராரெட் சிக்னல்களின் உதவியோடு தற்போது இருப்பதை விட 100 மடங்கு வேகத்தில் இண்டர்நெட் வழங்கும் புதிய முறையினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். புதிய வழிமுறையை கொண்டு அதிகளவு சாதனங்களுக்கு ஒரே சமயத்தில் இண்டர்நெட் வழங்க முடியும்.
நெதர்லாந்தை சேர்ந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்றில் நடத்தப்பட்ட ஆய்வில் நொடிக்கு 40 ஜிபிக்கும் அதிகமான வேகத்தில் இண்டர்நெட் பயன்படுத்த முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. இதோடு அனைத்து சாதனங்களுக்கும் இண்டர்நெட் கிடைக்கும் என்பதால் இண்டர்நெட்டை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எளிய முறையில் மிக குறைந்த விலையில் கட்டமைக்கக்கூடிய இந்த அமைப்பின் மூலம் லைட் ஆன்டெனாக்கள் மூலம் இண்டர்நெட் வழங்கப்படுகிறது. லைட் ஆன்டெனாக்கள் வெவ்வேறு திசைகளில் வெளிச்சத்தை பரப்பும். ஆப்டிக்கல் ஃபைபர் மூலம் வெளிச்சத்தை பரப்பி அதன் மூலம் இண்டர்நெட் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்ப்ராரெட் பயன்படுத்துவதால் இது உடல் ரீதியில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வை-பைக்களில் 2.5 அல்லது 5.0 ஜிகாஹெர்ட்ஸ் ரேடியோ சிக்னல்களை பயன்படுத்துகின்றன. புதிய அமைப்பு இன்ப்ராரெட் அமைப்புகள் 1500 நானோமீட்டர் மற்றும் அதற்கும் அதிகமான அளவுகளை பயன்படுத்துகின்றன.
ஆய்வின் போது சுமார் 2.5 மீட்டர் தொலைவில் நொடிக்கு 42.8 ஜிபி என்ற வேகத்தில் இண்டர்நெட் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் வழிமுறைகளில் அதிசிறந்த நிலைகளிலும் நொடிக்கு 300 எம்பி என்ற வேகத்தில் மட்டுமே இண்டர்நெட் பயன்படுத்த முடியும். முதற்கட்டமாக ரேடியோ சிக்னல்களை கொண்டு டவுன்லோடு செய்வதற்கான சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.