செய்திகள்
ஸ்மார்ட் அம்சங்களுடன் தயாராகி வரும் ஆண்ட்ராய்டு 8.0
இந்த ஆண்டு மே மாதம் நடைபெற இருக்கும் கூகுள் டெவலப்பர் கான்பெரன்ஸ் நிகழ்வில் கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு பதிப்பு ஸ்மார்ட் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சான்பிரான்சிஸ்கோ:
கூகுள் இறுதியாக வெளியிட்ட இயங்குதளம் இன்னும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் கூகுள் நிறுவனம் புதிய ஆண்ட்ராய்டு பதிப்பை வெளியிட தயாராகி விட்டது. அதன் படி மே மாதம் கூகுள் டெவலப்பர் கான்பெரன்ஸ் நிகழ்வில் ஆண்ட்ராய்டு 8.0 அறிமுகம் செய்யப்படலாம் என்றும் இதில் புதிய ஸ்மார்ட் அம்சங்கள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு, குரோம் இயங்குதளம் மற்றும் கூகுள் பிளே உள்ளிட்ட சேவைகளுக்கு துணை தலைவராக இருக்கும் ஹிரோஷி லாக்ஹெய்மர் சமீபத்திய ட்வீட் மூலம் புதிய ஆண்ட்ராய்டு பதிப்பு ஓரியோ என அழைக்கப்படலாம் என குறிப்பிட்டிருந்தார். டெவலப்பர் கான்பெரன்ஸ் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஆண்ட்ராய்டு பதிப்பில் மூன்று ஸ்மார்ட் அம்சங்கள் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் படி காப்பி லெஸ் என்ற அம்சம் ஸ்மார்ட்போனில் நீங்கள் ஏற்கனவே மேற்கொண்ட சாட்களை கொண்டு குறிப்பிட்ட வார்த்தைகளை தானாக உணர்ந்து பரிந்துரைக்கும். இதனால் சாட் செய்யும் போதோ அல்லது மின்னஞ்சல் அனுப்பும் போதோ அதிகம் பயன்படுத்த வேண்டிய சில வார்த்தைகளை டைப் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
மற்றொரு அம்சம் ஏற்கனவே ஆப்பிள் ஐ.ஓ.எஸ்.களில் வழங்கப்பட்டதை போன்றதாகும். இதில் ஏதேனும் முகவரியை டைப் செய்யும் போது அந்த முகவரியை அழுத்தினால் மேப்ஸ் ஓபன் ஆகும். அதில் முகவரியை செட் செய்து கொள்ள முடியும். இது வரை ஆண்ட்ராய்டில் வழங்கப்படாத இந்த அம்சம் புதிய பதிப்பின் மூலம் வழங்கப்படலாம்.
இறுதியாக ஜெஸ்ச்சர் வசதியும் புதிய ஆண்ட்ராய்டு பதிப்பில் வழங்கப்படலாம். ஹூவாய், எல்ஜி போன்றே சில வார்த்தைகளை வரைந்து குறிப்பிட்ட செயலிகளை இயக்க முடியும். இதே போன்ற வசதி லினியேஜ், சினோஜென், ஆக்சிஜன் என பல்வேறு இயங்குதளத்திலும் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.