இந்தியா

காதலியை உல்லாசத்துக்கு அழைத்த நண்பனை கடத்தி கொன்ற வாலிபர்

Published On 2023-02-24 06:12 GMT   |   Update On 2023-02-24 09:13 GMT
  • தினேஷ் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வருகிறார்.
  • முரளி கிருஷ்ணாவை கண்டுபிடிக்க முடியாததால் இதுகுறித்து கர்னூல் தாலுகா போலீசில் கடந்த 16-ந் தேதி புகார் செய்தனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவர் கண்ணூரில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். தினேஷ் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வருகிறார்.

காதலியுடன் தனிமையில் இருக்கும்போது அவரை தனது செல்போனில் நிர்வாண வீடியோ எடுத்து வைத்திருந்தார்.

தினேஷின் நண்பர் முரளி கிருஷ்ணா (வயது 22). இவர் பூக்கடையில் வேலை செய்து வந்தார். தினேஷின் செல்போனை வாங்கி பார்த்த முரளி கிருஷ்ணா அதில் இருந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதில் சபலம் அடைந்த அவர் செல்போனில் இருந்த நண்பனின் காதலியின் நிர்வாண வீடியோக்களை தனது செல்போனுக்கு அனுப்பி கொண்டார்.

இதையடுத்து தினேஷின் காதலிக்கு போன் செய்த முரளி கிருஷ்ணா தனது ஆசைக்கு இணங்க வேண்டும் மறுத்தால் நிர்வாண வீடியோக்களை உன்னுடைய உறவினர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டினார்.

முரளி கிருஷ்ணாவின் மிரட்டலை கேட்டு பயந்த இளம்பெண் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இளம்பெண்ணை மீட்ட அவரது பெற்றோர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நடந்த சம்பவம் குறித்து இளம்பெண் தினேஷுக்கு தெரிவித்தார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தினேஷ் முரளி கிருஷ்ணாவை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அதன்படி தனது நண்பரான கிரண்குமாரை அணுகி நடந்த சம்பவங்களை தெரிவித்தார்.

இதையடுத்து கடந்த மாதம் 25-ந் தேதி நண்பர் கிரண்குமாருடன், முரளி கிருஷ்ணா வீட்டிற்கு சென்று மது அருந்தலாம் என கூறி பைக்கில் வைத்து புறநகர் பகுதியான பஞ்சலிங்கா என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு வைத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளி கிருஷ்ணாவை சரமாரியாக குத்தினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த முரளி கிருஷ்ணா சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். அவரது பிணத்தை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வரும் வழியில் உடைகளை கழற்றி விட்டு பிணத்தை நிர்வாணமாக நன்னூறு சுங்கச்சாவடி அருகே உள்ள அந்திரி நீவா கால்வாயில் வீசினர்.

இதையடுத்து உடைகளை ஒரு இடத்திலும், செல்போனை ஒரு இடத்திலும் வீசிவிட்டு வீட்டிற்கு சென்றனர். வெளியே சென்ற மகன் வீட்டிற்கு வராததால் அவரை பல்வேறு இடங்களில் அவரது பெற்றோர் தேடிப் பார்த்தனர்.

இருப்பினும் முரளி கிருஷ்ணாவை கண்டுபிடிக்க முடியாததால் இதுகுறித்து கர்னூல் தாலுகா போலீசில் கடந்த 16-ந் தேதி புகார் செய்தனர். முரளி கிருஷ்ணாவை வீட்டில் இருந்து அழைத்துச் சென்ற தினேஷ் குமாரை பிடித்து விசாரணை செய்தபோது முரளி கிருஷ்ணா கொலை செய்து அந்திரிநீவா கால்வாயில் வீசியதை ஒப்புக்கொண்டார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷ் அவரது நண்பர் கிரண்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் கால்வாயில் வீசப்பட்ட முரளி கிருஷ்ணாவின் உடலை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News