இந்தியா

ஜார்க்கண்டில் பெண்ணை அரை நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்

Published On 2023-07-28 08:21 IST   |   Update On 2023-07-28 08:21:00 IST
  • ஆடையை கிழித்து தாக்கியதோடு மரத்தில் கட்டி வைத்துள்ளனர்
  • பெண்ணை தாக்கிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

 மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட கொடூர சம்பவம் நடைபெற்றதில் இருந்து, பெண்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் கொடுமைகள் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் ஜார்க்கண்டில் ஏறக்குறைய அரை நிர்வாணமாக்கப்பட்டு ஒரு பெண் தாக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் உள்ள சரியா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 26 வயது பெண், ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்ததாக தெரிகிறது. நேற்றுமுன்தினம் இரவு, பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்த நபர், மேலும் மூன்று பேருடன் சேர்ந்து அந்த பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். மேலும், அவரது ஆடையை கிழித்துள்ளனர். ஏறக்குறைய அரை நிர்வாணத்துடன் இரவு முழுவதும் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணை மீட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரையும் கைது செய்துள்ளனர். மீட்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் இந்த சம்பவம் குறித்து கூறுகையில் ''நான் வீட்டில் இருக்கும்போது, வெளியே வரும்படி போன் செய்தனர். நான் வெளியே வந்தபோது, இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், என்னை வலுக்கட்டாயமாக ஆளில்லா இடத்திற்கு கொண்டு சென்று தாக்கினர். பின்னர் என்னுடைய ஆடையை கிழித்து மரத்தில் கட்டி வைத்தனர்'' எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News