இந்தியா

மாநகராட்சி அதிகாரியை கன்னத்தில் அறைந்த பெண் எம்.எல்.ஏ.

Published On 2023-06-21 08:47 GMT   |   Update On 2023-06-21 08:47 GMT
  • மிரா பயந்தர் மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் சில ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றியதாக கூறப்படுகிறது.
  • மழை காலத்தின்போது வீடுகளில் இருந்து மக்களை ஏன் வெளியேற்றுகிறீர்கள் என மாநகராட்சி அதிகாரிகளிடம் தட்டிக் கேட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மிரா பயந்தர் தொகுதியின் சுயேட்சை எம்.எல்.ஏ.வாக கீதா ஜெயின் உள்ளார். முன்னாள் பாரதிய ஜனதா மேயரான இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது சிவசேனா- பா.ஜனதா கூட்டணி ஆதரவு தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் மிரா பயந்தர் மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் சில ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ.விடம் முறையிட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற கீதா ஜெயின் உரிய நோட்டீஸ் கொடுக்காமல் மழை காலத்தின்போது வீடுகளில் இருந்து மக்களை ஏன் வெளியேற்றுகிறீர்கள் என மாநகராட்சி அதிகாரிகளிடம் தட்டிக் கேட்டுள்ளார்.

அப்போது அதிகாரி ஒருவர் சிரித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த கீதா ஜெயின் பொதுமக்கள் முன்னிலையிலேயே அந்த அதிகாரியை கன்னத்தில் அறைந்தார்.

இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

Similar News