இந்தியா

ரெயிலில் இடம்பிடிப்பதில் தகராறு.. பெண்கள் குடுமிப்பிடி சண்டை.. தடுத்த பெண் காவலருக்கும் அடி உதை

Published On 2022-10-07 17:20 GMT   |   Update On 2022-10-08 03:39 GMT
  • பெண் பயணிகளின் சண்டையால் ரெயில் பெட்டியே போர்க்களம் போன்று மாறியது.
  • சில பயணிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள சம்பவ இடத்திலிருந்து பாதுகாப்பான பகுதியை நோக்கி சென்றனர்.

மும்பை:

மும்பை தானேவிலிருந்து பன்வெல் செல்லும் புறநகர் ரெயிலில் இருக்கையில் அமருவது தொடர்பாக 3 பெண் பயணிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் அடிதடியாக மாறியது. அவர்கள் ஒருவரை ஒருவர் கடுமயாக தாக்கிக்கொண்டனர். சிறிது நேரத்தில் இந்தச் சண்டையில் மற்ற பெண்களும் சேர்ந்து கொண்டனர். இந்தச் சண்டையால் ரெயில் பெட்டியே போர்க்களம் போன்று மாறியது. சண்டையில் ஈடுபட்ட பெண்கள் ஒருவரை ஒருவர் முடியைப் பிடித்து இழுத்து தாக்கிக்கொண்டனர்.

சில பயணிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள சம்பவ இடத்திலிருந்து பாதுகாப்பான பகுதியை நோக்கி சென்றனர். நெருல் ரெயில் நிலையம் வந்தபோது சிலர் ரெயில்வே போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். உடனே அந்த ரெயில் பெட்டிக்குள் பெண் காவலர் உள்ளே நுழைந்தார். உடனே சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். அதன்பின்னர் மீண்டும் சண்டையிட்டுக்கொண்டனர். அவர்களின் சண்டையை பெண் காவலர் தீர்த்து வைக்க முயன்றார். ஆனால் பெண் காவலரையும் பெண் பயணிகள் விட்டு வைக்கவில்லை. அவரையும் அடித்து உதைத்தனர்.

இந்த மோதலில் பெண் காவலர் உட்பட 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் ரெயிலிலிருந்து இறங்கும்போது தலையிலிருந்து ரத்தம் கொட்டியது. காயமடைந்த பெண்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News