இந்தியா

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மூத்த தலைவர்கள் எங்கே ஓட்டுபோட வேண்டும்?: மேலிடம் அறிவிப்பு

Published On 2022-10-14 03:25 GMT   |   Update On 2022-10-14 03:25 GMT
  • காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் 17-ந்தேதி நடக்கிறது.
  • 19-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

புதுடெல்லி :

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல், 17-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. இந்த தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கும், முன்னாள் மத்திய மந்திரி சசிதரூருக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

இருவரும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, மாநில காங்கிரஸ் பிரதிநிதிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

வாக்குப்பதிவு ஏற்பாடுகள்

இந்த தேர்தலில் சென்னை உள்பட அனைத்து மாநில, யூனியன் பிரதேச தலைநகரங்களில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் 17-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மேலும் டெல்லியில் உள்ள கட்சியின் தேசிய தலைமை அலுவலகத்திலும் வாக்குப்பதிவு நடக்கிறது.

இதற்கான விரிவான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடக்கின்றன. ஓட்டு பெட்டிகள் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த தேர்தலில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், செயலாளர்கள், இணைச்செயலாளர்கள் தங்கள் வாக்கினை சொந்த மாநிலங்களில் அல்லது டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்தான் (இரண்டில் ஒன்றை அவர்கள் விருப்பபப்படி தேர்வு செய்து) செலுத்த வேண்டும் என்று கட்சி மேலிடம் நேற்று அறிவித்துள்ளது. அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஓட்டு போடக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரபட்சமின்றி இருக்கவும், தேர்தல் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைப் பேணவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை கட்சி மேலிடம் சார்பில் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் ஓட்டுப்பதிவு முடிந்ததும், வாக்குப்பெட்டிகள் 'சீல்' வைக்கப்பட்டு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன. 19-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Tags:    

Similar News