இந்தியா

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மேற்குவங்கத்தில் மசோதா நிறைவேற்றம்

Published On 2024-09-03 15:23 IST   |   Update On 2024-09-03 15:23:00 IST
  • மேற்குவங்க மாநிலத்தின் சிறப்பு சட்டசபைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
  • பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

கொல்கத்தா:

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் டாக்டர் கருத்தரங்கு அறையில் கடந்த மாதம் 9-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாடுமுழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 21 நாளாக டாக்டர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மேற்குவங்க மாநிலத்தின் சிறப்பு சட்டசபைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பலாத்கார தடுப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க வழி உள்ளது.

அப்போது மம்தா பானர்ஜி பேசுகையில், புதிய மசோதா மூலம் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க முயற்சித்துள்ளோம். மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றங்கள் மூலம் நீதியைப் பெறுகின்றனர். புகார்களை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க மசோதா வழிவகுக்கிறது. பாலியல் வன்கொடுமைகள் மனிதகுலத்திற்கு எதிரானவை. சமூக சீர்திருத்தங்கள் தேவை என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து இந்த மசோதா சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற ஷரத்து இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் உயிரிழக்கும் பட்சத்தில் இந்த உச்சபட்ச தண்டனை குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும்.

Tags:    

Similar News