உலகின் மிக உயரமான இடத்தில் போர் நினைவுச் சின்னம் அமைப்பு.. சீனாவால் கொல்லப்பட்ட 20 இந்திய வீரர்களுக்கு மரியாதை
- பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
- லடாக்கில் உள்ள தர்புக்-ஷியோக்-தௌலத் பேக் ஓல்டி சாலையில் உள்ள KM-120 போஸ்டுக்கு அருகில் இந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ளது.
ஜூன் 15, 2020இல் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதன் பின் இரு நாட்டு உறவுகளிலும் விரிசல், அண்மையில் ஷாங்காய் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடியின் சீன பயணத்தின் மூலம் சரியானது.
இந்நிலையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஒரு போர் நினைவுச்சின்னத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
இது உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள போர் நினைவுச்சின்னம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
உலகின் மிகக் கடினமான பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலை, குறைந்த ஆக்ஸிஜன் அளவு கொண்ட இயற்கை சூழலில் அமைந்துள்ள இராணுவப் மண்டலங்களில் ஒன்றான லடாக்கில் உள்ள தர்புக்-ஷியோக்-தௌலத் பேக் ஓல்டி சாலையில் உள்ள KM-120 போஸ்டுக்கு அருகில் இந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ளது.
தியாகம் மற்றும் வீரத்தை குறிக்கும் வகையில் சிவப்பு மற்றும் வெள்ளை கிரானைட்டால் கட்டப்பட்ட இந்த நினைவுச்சின்னம் திரிசூலம் வடிவத்தில் உள்ளது.
நினைவுச்சின்னத்தைச் சுற்றி, கால்வான் பள்ளத்தாக்கின் பாதுகாப்பிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களைக் குறிக்கும் 20 வெண்கல சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
இந்த போர் நினைவு வளாகத்தில் கல்வான் மோதல், லடாக்கின் இராணுவ வரலாறு அகியவற்றை காட்சிப்படுத்தும் ஒரு அருங்காட்சியகம் மற்றும் டிஜிட்டல் கேலரி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.