பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வக்பு சட்டம் கிழித்து குப்பைத் தொட்டியில் வீசப்படும்: தேஜஸ்வி யாதவ்
- நாட்டின் வகுப்புவாத சக்திகளுடன், லாலு பிரசாரத் யாதவ் ஒருபோதும் சமரசம் செய்து கொண்டது கிடையாது.
- ஆனால், பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் அதுபோன்ற சக்திகளுக்கு எப்போதும் ஆதரவாக உள்ளார்.
பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதி இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்காக இவர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் கதிஹார் மற்றும் கிஷான்கஞ்ச் மாவட்டங்களில் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது தேஜஸ்வி யாதவ் பேசியதாவது:-
நாட்டின் வகுப்புவாத சக்திகளுடன், லாலு பிரசாரத் யாதவ் ஒருபோதும் சமரசம் செய்து கொண்டது கிடையாது. ஆனால், பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் அதுபோன்ற சக்திகளுக்கு எப்போதும் ஆதரவாக உள்ளார். அவரால்தான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் மாநிலத்திலும் நாட்டிலும் வகுப்புவாத வெறுப்பைப் பரப்புகின்றன. பாஜக Bharat Jalao Party (இந்தியாவை எரிக்கும் கட்சி) என்று அழைக்கப்பட வேண்டும்.
இந்தியா கூட்டணி பீகார் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால், வக்கு சட்டத்தை கிழித்து குப்பைத் தொட்டியில் நாங்கள் வீசுவோம்.
இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
வக்பு திருத்த சட்டம் பாராளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் பெண்களுக்கு வெளிப்படைத்தன்மை மற்றும் அதிகாரமளித்தலுக்கு முன்னோக்கிய நடவடிக்கை என பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தெரிவித்தது.