இந்தியா

கைத்தடியாக வைக்கப்பட்டிருந்த செங்கோல்- தனக்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டிருக்கிறது: பிரதமர் மோடி

Published On 2023-05-27 22:08 GMT   |   Update On 2023-05-27 22:08 GMT
  • பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து 21 ஆதீனங்கள் பங்கேற்றனர்.
  • மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.

டெல்லியில் திருவாவடுதுறை ஆதீனத்திடம் இருந்து பிரதமர் மோடி நேற்று செங்கோலை பெற்றுக்கொண்டார்.

புதிய பாராளுமன்ற வளாகத்தில் செங்கோல் இன்று வைக்கப்படுகிறது. இதேபோல், தருமபுரம் ஆதீனம் நினைவு பரிசும், மதுரை ஆதீனம் வெள்ளியில் செய்து தங்க முலாம் பூசிய தாமரை மலரையும் பிரதமர் மோடிக்கு வழங்கினர்.

பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து 21 ஆதீனங்கள் பங்கேற்றனர்.

மேலும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.

பின்னர், இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

உங்கள் அனைவரையும் வணங்கி வாழ்த்துகிறேன். நீங்கள் எனது இல்லத்திற்கு வந்திருப்பது எனது அதிர்ஷ்டம். சிவபெருமானின் ஆசீர்வாதத்தால், சிவபக்தர்களை தரிசனம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.

இந்தியாவின் பாரம்பரியத்தின் சின்னமான செங்கோல் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நாம் கடமையின் பாதையில் நடக்க வேண்டும், பொதுமக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதை இந்த செங்கோல் நினைவூட்டிக்கொண்டே இருக்கும். தனக்கான அங்கீகாரத்தையும், இடத்தையும் செங்கோல், தற்போது பெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்தியா எவ்வளவு ஒன்றுபட்டு இருக்கிறதோ, அவ்வளவு வலுவாக இருக்கும். வளர்ச்சிக்கான நமது பாதையில் தடைகளை உருவாக்குபவர்கள் பல்வேறு சவால்களை ஏற்படுத்துவார்கள்.

இந்தியாவின் முன்னேற்றத்தை சகிக்க முடியாதவர்கள் நமது ஒற்றுமையை உடைக்க முயற்சிப்பார்கள். ஆனால் ஆன்மீகம் பலம் என்று நான் நம்புகிறேன்.

இது எல்லா சவால்களையும் எதிர்கொள்ள எங்களுக்கு உதவும். சுதந்திரத்திற்குப் பிறகு புனிதமான செங்கோலுக்கு உரிய மரியாதை அளித்து கௌரவமான பதவியை வழங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஆனால் இந்த செங்கோல் பிரயாக்ராஜ் ஆனந்த பவனில் கைத்தடியாக (வாக்கிங் ஸ்டிக்) வைக்கப்பட்டு இருந்தது. உங்கள் 'சேவகரும்' எங்கள் அரசாங்கமும் செங்கோலை ஆனந்த பவனில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News