தெலுங்கானாவில் மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர்
- மனைவியின் நடத்தையில் சங்கருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கரை தேடி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம், யாதாத்திரி மாவட்டம், புவனகிரி அடுத்த அடகுதூரை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி மஞ்சுளா (வயது 35). தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சங்கர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலைக்காக மும்பை சென்றார். சங்கர் கூலி வேலையும், மஞ்சுளா வீடுகளில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் சங்கருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன் மனைவி இடையே தினமும் தகராறு நடந்தது. விரக்தி அடைந்த மஞ்சுளா கடந்த 14-ந் தேதி ஐதராபாத் அனுபுரத்தில் உள்ள தனது சகோதரி ராணி வீட்டிற்கு வந்தார்.
சங்கரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியை தேடி ராணி வீட்டிற்கு வந்தார்.
நேற்று முன்தினம் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடந்து இனி நான் மனைவியை தொந்தரவு செய்ய மாட்டேன் என உறுதி அளித்தார்.
நேற்று காலை ராணி அவரது கணவர் வேலைக்காக வெளியூர் சென்றனர். வீட்டில் சங்கர் மஞ்சுளா அவரது குழந்தைகள் இருந்தனர்.
இரவு 11 மணியளவில் தூக்கத்திலிருந்து விழித்த சங்கர் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து மனைவியின் கழுத்தை அறுத்தார். இதில் மஞ்சுளாவின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது.
சிறிது நேரத்தில் மஞ்சுளா பரிதாபமாக இறந்தார். மனைவி இறந்ததை உறுதி செய்த சங்கர் கதவை வெளிப்புறமாக பூட்டிக்கொண்டு தப்பி சென்றார்.
காலையில் குழந்தைகள் எழுந்து பார்த்தபோது தாய் இறந்து கிடந்ததைக் கண்டு கதறி துடித்தனர். அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மஞ்சுளாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கரை தேடி வருகின்றனர்.