திருப்பதி நடைபாதையில் சிறுத்தை நடமாட்டத்தை கட்டுப்படுத்த தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு
- நடை பாதையில் செல்லும் பக்தர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
- தடுப்பு வேலி அமைப்பதால் நிரந்தர தீர்வு காண முடியாது.
திருப்பதி:
திருப்பதி அலிபிரி நடைபாதையில் 6 வயது சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று கடித்து கொன்றது.
இதையடுத்து நடைபாதையில் வனத்துறையினர் வைக்கப்பட்ட இரும்பு கூண்டில் அடுத்தடுத்து 6 சிறுத்தைகள் சிக்கியது.
இந்நிலையில் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மேட்டு நடைப்பாதையில் வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்து வல்லுனர் குழு ஆய்வு செய்தது.
விசாகப்பட்டினம் வன விலங்கு சரணாலயத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் ரமேஷ், அசுதேஷ் சிங், சாகன் பிரசாத் மகாஜன் ஆகியோர் அலிபுரி நடைபாதையில் ஆய்வு செய்தனர்.
அப்போது நடை பாதையில் செல்லும் பக்தர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
சிறுமியை கொன்ற லட்சுமி நரசிம்ம சாமி கோவில் அருகே ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து ஆய்வு குழுவினர் கூறுகையில் :-
நடைபாதையில் தடுப்பு வேலி அமைப்பதால் நிரந்தர தீர்வு காண முடியாது.
மற்ற வழிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். வனவிலங்குகள் நடைபாதைக்கு வருவதை பக்தர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதுகாப்பு முறைகளை செயல்படுத்த முடியும் என தெரிவித்தனர்.
இதுகுறித்து இன்று தொழில்நுட்ப வல்லுநர்கள் ஸ்ரீவாரி மெட்டு நடை பாதையில் ஆய்வு செய்தனர்.