உத்தரபிரதேசத்தில் 2 சகோதரிகள் தலை துண்டித்து கொலை: அக்காள் கைது
- போலீசாரின் சந்தேக பார்வை கொலை செய்யப்பட்ட சிறுமிகளின் மூத்த சகோதரி அஞ்சலி பால் மீது திரும்பியது.
- சம்பவம் நடந்த வீட்டில் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மண் வெட்டி, அரிவாள், ரத்தம் படிந்த ஆடைகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டம் பகதூர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்வீர் சிங். விவசாயி. இவருக்கு 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் ஜெய்வீர் சிங் தனது மகள்கள் சுர்பி (வயது 6) ரோஷினி (4) ஆகியோரை வீட்டில் தனியாக விட்டு விட்டு மனைவி, மகன்களுடன் வயலுக்கு சென்று விட்டார்.
இரவு அவர்கள் வீடு திரும்பினார்கள், அப்போது வீட்டில் சுர்பியும், ரோஷினியும் ரத்த வெள்ளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடல்கள் தனித்தனி அறைகளில் கிடந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் பல்ராய் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். 2 சகோதரிகள் உடல்களை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் போலீசாரின் சந்தேக பார்வை கொலை செய்யப்பட்ட சிறுமிகளின் மூத்த சகோதரி அஞ்சலி பால் மீது திரும்பியது. அவளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் தனது சகோதரிகளை கொலை செய்ததை அவள் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவளை கைது செய்தனர். இந்த கொலைக்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. விசாரணையில் இந்த கொலையில் அஞ்சலி பால் 3 ஆண் நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொலையை அரங்கேற்றியது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால் தான் இந்த இரட்டை கொலைக்கான முழு விவரம் தெரியவரும்.
சம்பவம் நடந்த வீட்டில் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மண் வெட்டி, அரிவாள், ரத்தம் படிந்த ஆடைகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.