இந்தியா

உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்: நடுரோட்டில் சப்-இன்ஸ்பெக்டரை சரமாரியாக அடித்து உதைத்த கும்பல்

Published On 2023-11-01 10:11 IST   |   Update On 2023-11-01 10:11:00 IST
  • சிறுவனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்திற்குட்பட்ட பன்வாரி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த அரசு பஸ் சிறுவன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான். இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சிறுவனின் உடலுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் விபத்தை ஏற்படுத்திய டிரைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுவனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் ராம்அவதார் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அகற்ற முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது ஆவேசம் அடைந்த கும்பல் ராம்அவதாரை சரமாரியாக அடித்து உதைத்து தாக்கி உள்ளனர். வலி தாங்க முடியாமல் ராம்அவதார் கையை வைத்து முகத்தை மறைத்த போதும் கும்பல் அவரை சரமாரியாக கைகளால் தாக்கி, கால்களால் உதைத்துள்ளனர்.

சிலர் இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றி உள்ளனர். இந்த வீடியோ வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் கும்பலால் தாக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ராம்அவதாரை அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News