இந்தியா

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு: மண்டியாவில் 8-வது நாளாக தொடரும் போராட்டம்

Published On 2023-09-06 15:26 IST   |   Update On 2023-09-06 15:26:00 IST
  • மண்டியா மாவட்ட பா.ஜனதாவினர் காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
  • ஊர்வலத்தின்போது கோவிந்தா, கோவிந்தா காவிரி நீர் இல்லை கோவிந்தா’ என்று கோஷமிட்டனர்.

பெங்களூரு:

கர்நாடகத்திற்கும், தமிழகத்திற்கும் இடையே காவிரி பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் காவிரி படுகையில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகள் நிரம்பவில்லை. கபினி அணை மட்டும் நிரம்பி இருந்தது.

இந்த நிலையில் தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணையில் இருந்து, மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையில் இருந்தும் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது நாள் முதல் கே.ஆர்.எஸ். அணை, மண்டியா, ஸ்ரீரங்கப்பட்டணா என பல்வேறு பகுதிகளில் விவசாயிகள், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

கே.ஆர்.எஸ். அணையின் தெற்கு நுழைவு வாயில் பகுதியில் கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் பெண்கள் தலையில் காலி குடங்களை சுமந்தபடி ஊர்வலமாக வந்து போராட்டம் நடத்தினர். ஸ்ரீரங்கப்பட்டணா டவுனில் உள்ள மினி விதான சவுதா முன்பு கன்னட அமைப்பினர், விவசாயிகள் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் ஒன்றாக சேர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் நெற்றியில் நாமம் போட்டு மணி அடித்து தண்ணீருக்காக யாசகம் கேட்பதுபோல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக ஊர்வலத்தின்போது கோவிந்தா, கோவிந்தா காவிரி நீர் இல்லை கோவிந்தா' என்று கோஷமிட்டனர்.

இந்த நிலையில் மண்டியா மாவட்ட பா.ஜனதாவினர் காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தங்கள் ரத்தத்தால் கடிதத்தில் கையெழுத்திட்டு கவர்னருக்கு அனுப்பும்படி பா.ஜனதாவினர் மாவட்ட கலெக்டர் குமாரிடம் கொடுத்தனர்.

தொடர்ந்து 8-வது நாளாக தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் மண்டியாவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

Tags:    

Similar News