இந்தியா

ஆற்றில் குளித்த 10 வயது சிறுவனை உயிரோடு விழுங்கிய முதலை

Published On 2022-07-12 08:19 GMT   |   Update On 2022-07-12 08:19 GMT
  • மத்திய பிரதேச மாநிலம் ஷியோபோர் பகுதியில் சம்பல் ஆறு ஓடுகிறது.
  • ஆற்றில் அந்த பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன் நேற்று காலை குளிக்க சென்றான்.

போபால்:

மத்திய பிரதேச மாநிலம் ஷியோபோர் பகுதியில் சம்பல் ஆறு ஓடுகிறது.

இந்த ஆற்றில் அந்த பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன் நேற்று காலை குளிக்க சென்றான். ஆற்றின் கரையில் சிறுவனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நின்று கொண்டிருந்தனர்.

குளித்து கொண்டிருந்த சிறுவன், திடீரென ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றான். அங்கு நின்றபடி அவன் அலறினான்.

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் அங்கு ஓடி சென்றனர். அப்போது சிறுவனை ஆற்றில் இருந்த ராட்சத முதலை ஒன்று உயிரோடு விழுங்குவதை கண்டனர்.

அதிர்ச்சி அடைந்த அவர்கள் முதலையின் பிடியில் இருந்து சிறுவனை மீட்க முயன்றனர். அதற்குள் முதலை சிறுவனை விழுங்கிவிட்டது.

இதை கண்ட கிராம மக்கள் முதலையை வலைவீசி பிடித்தனர். பின்னர் அதனை கயிறு கட்டி கரைக்கு இழுத்து வந்தனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் வனத்துறையினரும், போலீசாரும் அங்கு வந்தனர். அவர்கள் முதலையை கிராம மக்கள் பிடியில் இருந்து விடுவிக்க முயன்றனர்.

ஆனால் கிராம மக்கள் சிறுவனை விழுங்கிய முதலையின் வயிற்றில் சிறுவன் உயிரோடு இருப்பான் என கூறினர். மேலும் சிறுவனை விழுங்கிய முதலை அவனை கக்கும் வரை முதலையை விடமாட்டோம் எனவும் கூறினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை சமரசப்படுத்திய வனத்துறையினர் பின்னர் அவர்களிடம் இருந்து முதலையை மீட்டு சென்றனர்.

Tags:    

Similar News