இந்தியா

கர்நாடக அரசு பஸ்சில் பெண் போல பர்தா அணிந்தபடி இலவச பயணம் செய்தவர் சிக்கினார்

Published On 2023-07-07 05:22 GMT   |   Update On 2023-07-07 05:48 GMT
  • ஏராளமான பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள்.
  • பர்தா அணிந்து இலவசமாக பஸ்சில் பயணித்து, பெங்களூரு வழியாக தார்வாருக்கு வந்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதிப்படி, அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும், சக்தி திட்டத்தை கடந்த ஜூன் 11-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதனால் ஏராளமான பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், தர்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா சம்சி பஸ் நிலையத்தில் நேற்று காலை, பர்தா அணிந்த ஒரு பெண் அமர்ந்திருந்தார்.

அவரது உருவ அமைப்பு மற்றும் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படி இருந்தன. இதையடுத்து, சில பெண்கள் அவர் அருகே சென்று, பர்தாவை நீக்கி முகத்தை காண்பிக்கும் படி கூறினார். இதற்கு அவர் மறுத்தார்.

சில பெண்கள் வலுக்கட்டாயமாக அவரது பர்தாவை விலக்கியபோது, அவர் பெண்ணல்ல, ஆண் என்பது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தனர். இலவசமாக பஸ்சில் பயணிப்பதற்காக, பர்தா அணிந்து வந்ததாக அந்த நபர் கூறினார்.

இதையடுத்து, அந்த பெண்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி கோடகேரியைச் சேர்ந்த வீரபத்ரையா நிங்கய்ய (வயது 40) என்பது தெரிந்தது. பர்தா அணிந்து இலவசமாக பஸ்சில் பயணித்து, பெங்களூரு வழியாக தார்வாருக்கு வந்துள்ளார்.

ஆனால், அவரிடம் பெண் புகைப்படத்துடன் கூடிய ஆதார் கார்டு நகல் இருந்தது. இதையடுத்து, போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் இலவச பயணத்துக்காக பர்தா அணிந்து வந்தாரா? அல்லது பஸ்சில் பெண்களிடம் நகை பறிக்கும் நோக்கத்தில் மாறுவேடத்தில் வந்தாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News