ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
- ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினரும், காஷ்மீர் போலீசாரும் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- பயங்கரவாதிகள் திடீரென்று பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினரும், காஷ்மீர் போலீசாரும் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாதுகாப்பு படையினரும், காஷ்மீர் போலீசாரும் இணைந்து அந்த பகுதியில் இன்று காலையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
சோபியான் மாவட்டம் சித்ரகம் பகுதியிலும் பாரமுல்லா மாவட்டம் யெடிபுரா பகுதியிலும் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்திய போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென்று பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இருதரப்பினரும் மாறி மாறி துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். சுட்டுக் கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆவர்.