இந்தியா

கண்ணூர் அரசு ஆஸ்பத்திரியில் கழிவறைக்கு அழைத்துச்சென்று சிறுவனுக்கு பாலியல் தொல்லை- ஊழியர் கைது

Published On 2023-09-07 03:47 GMT   |   Update On 2023-09-07 03:47 GMT
  • சிகிச்சைக்கு வந்த சிறுவனை கழிவறைக்கு அழைத்துச்சென்று, அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • கழிவறைக்கு அழைத்துச் சென்று சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக ரமீஸ் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளான். இதையடுத்து அவனை அவனது தாய், தலச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருந்தார்.

அங்கு புறநோயாளிகள் பிரிவில் சிறுவனை அமர வைத்துவிட்டு, ஆதார் தொடர்பான விவரங்கள் கொடுக்க சென்றிருந்தார். அப்போது சிறுவனை, அந்த மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரியும் ரமீஸ் என்பவர் கழிவறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அப்போது அவர், சிறுவனுக்கு கழிவறையில் வைத்து பாலியல்தொல்லை கொடுத்துள்ளார். மேலும் அதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டியிருக்கிறார். ஆனால் கழிவறையை விட்டு வெளியே வந்த சிறுவன், ஆஸ்பத்திரி ஊழியர் ரமீஸ், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து அழுதபடியே தனது தாயிடம் தெரிவித்தார்.

இதனை சிறுவனின் தாய் மற்றும் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தவர்கள் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். சிறுவன் குற்றம் சுமத்திய ஊழியர் ரமீசை மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்பு அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கழிவறைக்கு அழைத்துச் சென்று சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக ரமீஸ் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், ரமீஸ் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

சிகிச்சைக்கு வந்த சிறுவனை கழிவறைக்கு அழைத்துச்சென்று, அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தலச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News