இந்தியா

அடுத்தடுத்து 5 நிகழ்ச்சிகளில் பங்கேற்கவே ஹெலிகாப்டரில் சென்றேன்- காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதில்

Published On 2023-04-18 05:13 GMT   |   Update On 2023-04-18 12:19 GMT
  • தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கர்நாடக மாநில பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

பெங்களூரு:

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கர்நாடக மாநில பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கர்நாடகாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று முந்தினம் தேர்தல் பணிக்காக அண்ணாமலை கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்திற்கு வந்தார். பெரும்பாலும் காரில் பயணிக்கும் அவர் நேற்று ஹெலிகாப்டர் மூலம் உடுப்பி வந்தார். அவரின் அந்த ஹெலிகாப்டர் பயணம் தான் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவர் வந்த ஹெலிகாப்டரில் பைகளில் பெருமளவு பணம் கொண்டு வரப்பட்டது என்று உடுப்பி மாவட்டம் கப்பு தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வினய் குமார் சொர்கி குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டு தமிழகம் மற்றும் கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது:-

நாங்கள் நேர்மையானவர்கள். அவதூறு பரப்பும் காங்கிரசார் வாய்க்கு வந்தபடி பேசுகின்றனர். பா.ஜ.க.வுடன் போட்டியிட பயந்துதான் சொரகே இப்படி பேசுகிறார். கப்பு தொகுதியில் எங்கள் வேட்பாளர் குர்மே சுரேஷ் ஷெட்டி வெற்றி பெறுவது உறுதி.

நான் ஹெலிகாப்டரில் வந்தது உண்மைதான். உடுப்பியிலிருந்து அவசரமாக 5 நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டது. சூல்யா, தீர்த்தஹள்ளி, சிக்கமகளூரு அனைத்தும் சற்று தூரத்தில் உள்ளன. எல்லா இடங்களிலும் சரியான நேரத்தில் இருக்க வேண்டும். அதனால்தான் ஹெலிகாப்டரில் சென்றேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News