இந்தியா

ஐதராபாத் அடுக்குமாடி குடியிருப்பில் சென்னை என்ஜினீயர் குடும்பத்தினர் 4 பேர் தற்கொலை

Published On 2023-01-17 10:01 IST   |   Update On 2023-01-17 10:01:00 IST
  • பிரதாப் அவரது மனைவியை சென்னைக்கு இடமாற்றம் செய்து வரும்படி கூறியுள்ளார்.
  • தம்பதிக்கு இடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்தது.

திருப்பதி:

சென்னையை சேர்ந்தவர் பிரதாப் (வயது 34). என்ஜினீயரான இவர் சென்னையில் உள்ள கார் கம்பெனியில் வாகன வடிவமைப்பாளராக வேலை பார்த்து வந்தார்.

இவரது மனைவி சிந்தூரா ஐதராபாத்தில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். தம்பதியின் மகள் ஆதியா( 4) பிரதாப்பின் தாய் ராஜாத்தி. சிந்தூரா பணியின் காரணமாக ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடி பெயர்ந்தனர்.

அங்கு சிந்தூரா அவரது குழந்தை ஆதியா மற்றும் பிரதாப்பின் தாய் ராஜாத்தி ஆகியோர் தங்கி இருந்தனர். பிரதாப் மட்டும் சென்னையில் தங்கி வேலை பார்த்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரதாப் அவரது மனைவியை சென்னைக்கு இடமாற்றம் செய்து வரும்படி கூறியுள்ளார். இதனால் தம்பதிக்கு இடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் பொங்கல் விடுமுறை காரணமாக பிரதாப் ஐதராபாத் சென்றுள்ளார். அப்போது கணவன்- மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று சிந்துராவுடன் வங்கியில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் அவருக்கு போனில் அழைப்பு விடுத்தார். நீண்ட நேரமாகியும் அவர் போனை எடுக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த ஊழியர் ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து பிரதாப் வீட்டின் கதவை தட்டினார்.

நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்குள்ள ஒரு அறையில் பிரதாப் தூக்கில் பிணமாக தொங்கினார். மற்ற அறைகளில் தனித்தனியாக சிந்துரா அவர்களது குழந்தை ஆதியா, தாய் ராஜாத்தி ஆகியோர் இறந்து கிடந்தனர்.

அவர்களது இறப்புக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை.

மேலும் சம்பவ இடத்தில் கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. குடும்பத் தகராறு காரணமாக அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சிந்துராவை சென்னைக்கு பணியிடம் மாற்றுவது குறித்து கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .

4 பேர் இறப்பிற்கான காரணத்தை கண்டறிய அவர்களுடைய உடல்கள் அங்குள்ள காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News