கடனை திருப்பிக் கட்டாததால் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி சித்ரவதை- அவமானம் தாங்காமல் தற்கொலை
- ஊர் பஞ்சாயத்திலும் நியாயம் கிடைக்காததால் அவமானம் அடைந்த அனுசூயம்மா வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்து வாயில் நுரை தள்ளியபடி விழுந்து கிடந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், பெடலகுரு மண்டலம், சட்ட கோட்லா பகுதியை சேர்ந்தவர் அங்கம்மா. இவருக்கு லட்சுமி, அனுசூயம்மா என 2 மகள்கள் இருந்தனர். லட்சுமி அதே ஊரின் பஞ்சாயத்து தலைவரான ஒய்.எஸ். ஆர்.காங்கிரஸ் பிரமுகர் பிரபாகர் என்பவரிடம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார்.
அவர் கடனை திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பிரபாகர் லட்சுமியை கடந்த 1-ந் தேதி தனது தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைக்கு வருமாறு கூறினார். லட்சுமி தனது தாய் அங்கம்மா, சகோதரி அனுசூயம்மா ஆகியோருடன் பிரபாகரின் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைக்கு சென்றனர்.
அங்கிருந்த பிரபாகர் அவரது மனைவி பிரமிளம்மா ஆகியோர் வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியாததால் ஏன் கடனை வாங்குகிறீர்கள் என ஆபாச வார்த்தைகளால் திட்டினர்.
இதனை அனுசூயம்மா தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கணவன் மனைவி இருவரும் சேர்ந்து அனுசுயம்மாவின் ஆடைகளை கழற்றி நிர்வாணமாக்கி சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இது குறித்து அனுசுயம்மா பெடலகுரு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் அனுசூயம்மா குடும்பத்தாரை திருப்பி அனுப்பினர்.
இதையடுத்து தனது ஊருக்கு வந்த அனுசூயம்மா குடும்பத்தினர் ஊர் பஞ்சாயத்தை கூட்டி நியாயம் வழங்க வேண்டும் என கேட்டனர்.
ஆனால் ஊர் பெரியவர்கள் பிரபாகர் பஞ்சாயத்து தலைவராக இருப்பதால் ஊருக்கு நல்லது செய்வார். உங்களால் ஊருக்கு என்ன செய்ய முடியும் என கூறி திருப்பி அனுப்பினர்.
போலீசிலும் ஊர் பஞ்சாயத்திலும் நியாயம் கிடைக்காததால் அவமானம் அடைந்த அனுசூயம்மா வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்து வாயில் நுரை தள்ளியபடி விழுந்து கிடந்தார்.
இதனைக் கண்ட அவரது குடும்பத்தார் அனுசூயம்மாவை மீட்டு பெடல குரு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெடலகுரு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.