இந்தியா

ஒரு மாதத்துக்கு மின் கட்டணம் ரூ.1.15 கோடி... அதிர்ச்சியான நகைக்கடை உரிமையாளர்

Published On 2023-10-04 07:24 GMT   |   Update On 2023-10-04 07:24 GMT
  • கடைக்கு மாதந்தோறும் ரூ.7000 முதல் 8000 வரை மின் கட்டணம் வரும்.
  • பரிசீலனை செய்து புதிய தொகை கணக்கிடப்பட்டு வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

திருப்பதி:

கோடைகாலம் தொடங்கியதில் இருந்து பல்வேறு இடங்களில் கூடுதலாக ஏசி, மின்விசிறி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மின் கட்டணம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

ஆயிரக்கணக்கில் மின் கட்டணம் உயர்ந்து வருவதை பொதுமக்களும், வியாபாரிகளும் சமாளித்து வருகின்றனர்.

ஆனால் ஆந்திர மாநிலத்தில் ஒரு சிறிய கடைக்கு ரூ.1 கோடி ரூபாய்க்கு மேல் மின்கட்டணம் வந்ததால் கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் கோட்டூர் நகரை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் அங்குள்ள நகரப் பகுதியில் சிறிய கடையில் நகைக்கடை வைத்துள்ளார். இவருடைய கடைக்கு மாதந்தோறும் ரூ.7000 முதல் 8000 வரை மின் கட்டணம் வரும்.

அதனை வழக்கம் போல செலுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 2-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை மின் கட்டணம் ரூ. ஒரு கோடியே 15 லட்சத்து 56,116 என மின் ஊழியர்கள் கணக்கிட்டு அட்டையில் எழுதிக் கொடுத்தனர். இதனை பார்த்ததும் நகைக்கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.

மின்கட்டணம் குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டார் . உடனடியாக அவரது கடையில் இருந்த மின் மீட்டரை சோதனை செய்தனர். அது பழுதாகி அளவுக்கு அதிகமாக மின்சாரம் செலவழிக்கப்பட்டதாக பதிவு செய்தது தெரிய வந்தது.

பரிசீலனை செய்து புதிய தொகை கணக்கிடப்பட்டு வழங்குவதாக உறுதியளித்தனர். இதனால் நகைக்கடை உரிமையாளர் நிம்மதி அடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News