இந்தியா

திருச்சூரில் ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு

Published On 2023-10-17 04:12 GMT   |   Update On 2023-10-17 07:10 GMT
  • மாணவர்கள் பலியான பகுதியில் இதுபோன்று சிலர் தண்ணீரில் மூழ்கிய சம்பவம் நடந்துள்ளது.
  • மாணவர்கள் பலியான விவரம் அறிந்த அவரது குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து 4 பேரின் உடலையும் பார்த்து கதறி அழுதனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள வடூகரை பகுதியை சேர்ந்தவர் சயீத் உசேன்(வயது 21), குட்டூரை சேர்ந்தவர்கள் அபிஜான் (20), அர்ஜூன்(21), பூங்குன்றத்தை சேர்ந்தவர் நிவேத் கிருஷ்ணா (22).

இவர்கள் 4 பேரும் திருச்சூரில் உள்ள இருவேறு கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தனர். நண்பர்களான இவர்கள் நேற்று திருச்சூர் அருகே கைனூர்சிரா பகுதியில் உள்ள மணலிப்புழா ஆற்றுக்கு குளிக்க சென்றனர். அங்குள்ள தடுப்பணையில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களில் ஒருவர், திடீரென ஆழமான பகுதிக்கு சென்றதால் தத்தளித்தார். இதனைப் பார்த்த மற்றொருவர் அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். அவர்களை காப்பாற்ற மற்ற 2 பேரும் ஆற்றுக்குள் சென்றனர்.

இவ்வாறாக 4 பேரும் ஒருவர் பின் ஒருவராக சென்று ஆற்றில் மூழ்கினர். இதனை அந்த பகுதியில் நின்ற மாணவிகள் பார்த்து போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் திருச்சூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜய் கிருஷ்ணா தலைமையிலான மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

அவர்களும், ஸ்கூபா டைவிங் குழுவினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் 4 பேரும் அடுத்தடுத்து பிணமாக மீட்கப்பட்டனர். இதனையடுத்து 4 மாணவர்களின் உடலையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவர்கள் பலியான விவரம் அறிந்த அவரது குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து 4 பேரின் உடலையும் பார்த்து கதறி அழுதனர்.

மாணவர்கள் பலியான பகுதியில் இதுபோன்று சிலர் தண்ணீரில் மூழ்கிய சம்பவம் நடந்துள்ளது. இதனால் அந்த பகுதி அபாயகரமான இடம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த எச்சரிக்கையையும் மீறி சிலர் அந்த பகுதிக்கு சென்று குளிக்கிறார்கள்.

அப்போது இதுபோன்ற அசம்பாவிதம் நடப்பதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வேதனை தெரிவித்தனர்.

Tags:    

Similar News