இந்தியா

கோட்டயத்தில் பறவைகளை அழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்ட ஊழியர்கள்.

கேரளாவில் மீண்டும் பரவியது- பறவை காய்ச்சல் பாதித்த 8 ஆயிரம் வாத்து, கோழிகள் இன்று அழிப்பு

Published On 2022-12-15 04:24 GMT   |   Update On 2022-12-15 04:24 GMT
  • பறவை காய்ச்சல் பாதிப்புக்குள்ளான வாத்து, கோழிகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
  • பண்ணைகளில் இருந்து பறவை இறைச்சி மற்றும் முட்டைகள் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் ஏராளமான கோழி, வாத்து பண்ணைகள் உள்ளன.

இந்த பண்ணைகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை தொடர்ந்து இப்பண்ணைகளில் வளர்க்கப்பட்ட பறவைகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.

மேலும் அங்கு தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக்களை யொட்டி இந்த பண்ணைகளில் ஏராளமான பறவைகள் வளர்க்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் இங்குள்ள சில பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழி, வாத்துக்களுக்கு மீண்டும் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இது பற்றிய தகவல் கிடைத்ததும் கால்நடை துறையினர் மற்றும் சுகாதார துறையினர் இந்த பண்ணைகளில் ஆய்வு நடத்தினர். இதில் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதையடுத்து பறவை காய்ச்சல் பாதிப்புக்குள்ளான வாத்து, கோழிகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி இன்று கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சுமார் 8 ஆயிரம் வாத்து, கோழிகள் இன்று அழிக்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறையினரும் செய்துள்ளனர்.

மேலும் இந்த பண்ணைகளில் இருந்து பறவை இறைச்சி மற்றும் முட்டைகள் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக்கள் வரும் நிலையில் பண்ணைகளில் வளர்க்கப்பட்ட பறவைகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது பண்ணையாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News