இந்தியா

இம்மாத இறுதிக்குள் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் மாபெரும் போராட்டம்: சச்சின் பைலட் எச்சரிக்கை

Published On 2023-05-16 02:19 GMT   |   Update On 2023-05-16 02:19 GMT
  • அசோக் கெலாட் அரசுக்கு எதிராக கடந்த 5 நாட்களாக நடைபயணம் மேற்கொண்டார்.
  • எனது போராட்டம் யாருக்கும் எதிரானது அல்ல.

ஜெய்ப்பூர் :

காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்-மந்திரியும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

முந்தைய பா.ஜ.க. அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளில் தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி கடந்த மாதம் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார் சச்சின் பைலட்.

அதன் தொடர்ச்சியாக இந்த விவகாரத்தில் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக கடந்த 5 நாட்களாக நடைபயணம் மேற்கொண்டார். ராஜஸ்தானின் அஜ்மீரில் கடந்த 11-ந் தேதி நடைபயணத்தை தொடங்கிய அவர், தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று நிறைவு செய்தார்.

ராஜஸ்தான் அரசு தேர்வாணையத்தை மறுசீரமைக்க வேண்டும், அரசு பணி தேர்வு தாள் கசிவு வழக்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், முந்தைய பா.ஜ.க. அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் இந்த நடைபயணத்தை மேற்கொண்டார்.

நடைபயணத்தின் இறுதி நாளான நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் பைலட், "எனது கோரிக்கைகள் இம்மாத இறுதிக்குள் ஏற்கப்படாவிட்டால், மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

நான் எந்த பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எனது கடைசி மூச்சு வரை ராஜஸ்தான் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன் என்று உறுதி அளிக்கிறேன். யாரும் என்னை அச்சுறுத்த முடியாது.

எனது போராட்டம் யாருக்கும் எதிரானது அல்ல. ஊழலுக்கு எதிராகவும், இளைஞர்களின் நலனுக்காகவும் நடத்தப்படுகிறது" என்றார்.

Tags:    

Similar News