இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை நாளை மறுநாள் நடக்கிறது

Published On 2023-08-08 08:50 IST   |   Update On 2023-08-08 08:51:00 IST
  • பாலக்காடு மற்றும் கொல்லம் மாவட்டங்களில் இருந்து நெற்கதிர் கட்டுகள் சன்னிதானத்திற்கு எடுத்து வரப்பட உள்ளன.
  • ஓணம் பண்டிகையையொட்டி 27-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

சபரிமலை:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். அதன்படி திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில் இருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்பேரில் நாளைமறுநாள் (வியாழக்கிழமை) நிறை புத்தரிசி பூஜை நடக்கிறது.

இதையொட்டி நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அதிகாலை 5.40 மணி முதல் 6.15 மணி வரை தந்திரி கண்டரு ராஜீவரரு தலைமையில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறுகிறது. இதற்காக பாலக்காடு மற்றும் கொல்லம் மாவட்டங்களில் இருந்து நெற்கதிர் கட்டுகள் சன்னிதானத்திற்கு எடுத்து வரப்பட உள்ளன. அவ்வாறு எடுத்துவரப்படும் நெற்கதிர் கட்டுகளுக்கு பூஜை செய்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

அந்த நெற்கதிர்களை வீடுகளில் வைத்து பாதுகாத்து வந்தால், சகல ஐஸ்வர்யங்களும் கிடைப்பதுடன், நோய் நொடிகள் அற்றுப்போகும் என்பது நம்பிக்கை. விவசாய அபிவிருத்திக்கும், அவர்களின் எதிர்கால சுபிட்சமான வாழ்க்கைக்கும் வேண்டி இந்த பூஜை நடைபெறுகிறது.

நிறை புத்தரிசி பூஜை வழிபாடுகளுக்கு பின் அன்றையதினம் இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 16-ந் தேதி மாலையில் மீண்டும் திறக்கப்படும். 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும்.

அதன்பிறகு ஓணம் பண்டிகையையொட்டி 27-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

Tags:    

Similar News