இந்திய கடற்படைக்கு 2 அதிநவீன போர்க்கப்பல்கள்: ராஜ்நாத் சிங் நாளை அர்ப்பணிக்கிறார்
- விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- இந்த கப்பல்களின் நீளம் சுமார் 149 மீட்டர்.
இந்திய கடற்படைக்கு புதிதாக ஐஎன்எஸ் ஹிமகிரி மற்றும் ஐஎன்எஸ் உதயகிரி ஆகிய 2 போர்க்கப்பல்கள் தயாராகி உள்ளன.
இந்திய பாதுகாப்பு அமைப்பு கொல்கத்தா மற்றும் மும்பையில் இந்த போர்க்கப்பல்களை பி 17 என்ற பெயரில் உள்நாட்டு தொழில்நுட்பம் மற்றும் நவீன தகவல் தொடர்பு அமைப்புகளுடன் உருவாக்கியது.
விசாகப்பட்டினத்தில் ஹிமகிரி மற்றும் உதயகிரி கப்பல்களை ஒரே நேரத்தில் நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
கிழக்கு கடற்படை கட்டளையின் தலைமையகமான விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பாதுகாப்புதுறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் கடற்படைத் தலைவர் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு புதிய போர்க்கப்பல்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கின்றனர்.
இந்த கப்பல்களில் இருந்து சூப்பர்சோனிக் மற்றும் பிரம்மோஸ் போன்ற ஆயுதங்களை கடலில் உள்ள இலக்குகளுக்கு எதிராக செலுத்த முடியும். இந்த கப்பல்களின் நீளம் சுமார் 149 மீட்டர்.
கடுமையான போர்களை எதிர்த்துப் போராடக்கூடிய நவீன அம்சங்களைக் கொண்ட இந்த கப்பல்கள் இந்திய கடற்படையின் முதுகெலும்பாக இருக்கப் போகின்றன என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறினர்.